Published : 11 Aug 2019 09:54 AM
Last Updated : 11 Aug 2019 09:54 AM

தலைவாழை: மட்டன் சாப்ஸ் 

தொகுப்பு : நிஷா

இணையில்லா பக்ரீத் விருந்து

அன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.

மட்டன் சாப்ஸ்

என்னென்ன தேவை ?

பெரிய துண்டுகளாக வெட்டிய மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
சோம்புத் தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
பட்டை – 1
ஏலக்காய், கிராம்பு – தலா 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 5
எண்ணெய் – 100 மி.லி.
தயிர் – அரை கப்

எப்படிச் செய்வது?

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களைப் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை அதில் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கீறிய பச்சை மிளகாயையும் தக்காளியையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள்.

இப்போது கறியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். அதனுடன் மேற்குறிப்பிட்ட பொடிகளைப் போட்டுத் தயிர் ஊற்றிக் கிளறிவிடுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஏழு விசில் விட்டு எடுங்கள். மல்லியையும் புதினாவையும் சேர்த்துப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x