

“நட்சத்திரங்களே, உங்கள் ஒளியை மறைத்துக் கொள்ளுங்கள்... என் இருண்ட இச்சைகள் மீது வெளிச்சம் பட வேண்டாம்.”
- ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தில் வரும் பிரபலமான வரி இது. டன்கனை கொன்று தான் அரசனாக வேண்டுமென்ற இச்சை மனதில் எழும்போது மேக்பத் இவ்வாறு தனக்குத்தானே சொல்வான். இந்த சுய கூற்று போதும் மேக்பத் எப்படிப்பட்டவன் என்பதை விவரிக்க.
மானுட மனங்களை அன்பு, பாசம், பரிவு மட்டுமல்ல, இப்படியான இருளிச்சைகள் (Dark Desires) கொண்ட உணர்வுகளையும் தன்னகத்தே பதுக்கி வைத்திருக்கும் கிடங்கு என்று சொன்னால் நீங்கள் மறுப்பீர்களா என்ன?!
உளவியலாளர் கார்ல் ஜங் (Carl Jung), மனிதனுக்குள் இருக்கும் இருண்ட மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத இச்சைகள் - ஆசைகளை ‘நிழல் சுயம்’ (Shadow Self) என்று குறிப்பிடுகிறார்.
Niharika - in the mist: 2023-ல் வெளியாகி பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்த படம். இப்படத்தின் கதை மாந்தர்கள் தீபா (அணுராதா முகர்ஜி), ஆகாஷ் (சிலஜித் மஜும்தார்) இருவரின் இருளிச்சை மேலாண்மை பற்றி ஆழமாகப் பேசுகிறது.
பிரபல எழுத்தாளர் சஞ்சீப் சட்டோப்தியாய் எழுதிய ‘Bhoy’ (அச்சம்) என்ற கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சைக்காலாஜிக்கல் டிராமா ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
2 மணி நேரம் 4 நிமிடங்கள் கொண்ட படம் இது. ஆனால், அதன் அடர்த்தி உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான ஒரு தியானத்துக்குள் உங்களை மூழ்கடிக்கும். படம் நெடுகிலும் நம்மை வருடும் இசை, குறிப்பாக அவ்வப்போது வரும் சரோட் இசை நாம் அதிகம் மெனக்கிடாமலேயே நம் சிந்தனைகளை அத்தனை இலகுவாக ஒருமுகப்படுத்த உதவுகிறது.
தீபா... இந்தப் பெயருக்கு அர்த்தமும் ஒளி தான். கொல்கத்தாவில் அவள் பிறந்த வீடு விசித்திரமானது. தாய் கற்பிக்கும் நடனம், பெரியம்மாவின் பஜனைப் பாடல்கள், சித்தியின் கவின் மிகு எம்ப்ராய்டரிகள் என காலைப் பொழுதுகள் ரம்மியமாக இருக்கும். மாலை மங்கும் வேளையில் அவ்வீட்டு ஆண்களின் ரத்தத்தில் கலக்கும் சாராயம் தடித்த நாராச வார்த்தைகளாக வெளியில் வரும். சொத்துச் சண்டைகள் தொடங்கி மனைவியை வேசி எனும் வசைபாடுதல் வரை வரிசைகட்டும்.
குழந்தையாக அதை வேடிக்கை பார்த்தும், விவரமறிந்தபோது அதை வேதனையுடன் சகித்தும் வளர்கிறாள் தீபா. தினம் தினம் இரு துருவங்களைக் கண்டு திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் செல்கிறது அவளது வாழ்க்கை.
தீபாவின் குழந்தைப் பருவம் அப்படித்தான் இருக்கிறது. அவ்வப்போது கிடைக்கும் தாய் மடிதான் அவளுடைய அடுக்கடுக்கான துன்பங்களுக்கு வேகத்தடை. ஆனால் அவளையும் காலம் கொண்டு செல்கிறது.
தீபாவின் தாய்மாமனும், மாமியும் வரவழைக்கப்படுகின்றனர். “என் சகோதரி போய்விட்டாள். இனி உங்களுக்கு தீபா தேவையில்லாதவள். இங்கே வாழ்வது எத்தனை கொடுமை என்பது இங்குவந்த சில மணி நேரங்களிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது” என்று தீபாவின் தாய்மாமன் ஆகாஷ் சொல்லும்போது, ‘தீபாவை சீக்கிரம் கூட்டிச் செல்லுங்கள் ஆகாஷ்’ என்று நம் மனம் கெஞ்சும்.
தீபா கொல்கத்தாவில் இருந்து சின்ன மாமா வசிக்கும் சிமுல்தலாவுக்கு செல்கிறாள். இது பிஹாரில் இருக்கும் நகரம். பிஹாரின் சிம்லா என்றும் அழைக்கப்படுகிறது. எப்போதும் சால்வை தரும் அரவணைப்பிலும், கதகதப்பிலும் இருக்கும் சூழலுக்குள் செல்கிறாள் தீபா. உண்மையில் அவள் மனதுக்கு அத்தகைய அரவணைப்பு அவசியமானதாகவும் இருக்கிறது. மாமா வீட்டின் பெயர் தான் ‘நிஹாரிகா’ (காலைப் பனித்துளி). அந்த இரண்டு அடுக்கு மாடி வீட்டில், காலைப் பனியில் ஒரு ரோஜாவாக தீபா நமக்குத் தெரிவாள்.
தீபா ஒரு காட்சியில், “கொல்கத்தாவுக்கு திரும்பிச் செல்லுவதற்கு மனமும் இல்லை, சூழலும் இல்லை. நான் எங்கிருந்தேன். இப்போது எப்படி இருக்கிறேன் என்பதற்கான வித்தியாசத்தை சொன்னால் உன்னால் புரிந்து கொள்ள முடியாது” என்பாள்.
விடுபடுதலும், பற்றிக்கொள்ளுதலும் நேர்த்தியாகக் கலந்திருப்பதில்தான் வாழ்வின் கலை முழுமையும் அடங்கியுள்ளது என்று மேலைநாட்டு முற்போக்கு சிந்தனைவாதி ஒருவர் சொல்லியதை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
தீபா வேரறுந்ததாகவும் உணரவில்லை, புதிய இடத்தில் ரோஜா செடியாகவும் வேரூன்றிவிடவில்லை. முன்னமே சொன்னபடி பனித்துளி ஒட்டிக்கொண்ட ஒற்றை ரோஜாவாகவே இருக்கிறாள். பார்க்க அழகாக இருக்கும் கொய்மலர் சோகம் கண்ணுக்குத் தெரிவதில்லையே!
சோகம் தோய்ந்த அவளுக்கு மாமன் வீட்டு அன்பும், அருளும், அரவணைப்பும், அவளுடைய காயத்துக்கு மேலோட்டமாக களிம்பு பூசுகின்றன. ஆனால் உள்ளிருந்து மூளையைத் தின்னும் அவள் ரணத்துக்கு அந்தக் களிம்பு போதவில்லை.
மாமா வீட்டில் அவளுக்கு அத்தை இன்னொரு அம்மா ஆகிறாள். இளம் பெண்ணுக்கு அம்மா என்பவள் அவளின் தோழியும்கூட. அப்படித்தான் அத்தை கேயா.
“இந்த வீடு அழகாக இருந்தாலும் இங்கே ஒரு மென்சோகம் படர்ந்திருக்கிறது” என்பாள் தீபா. மெல்ல மெல்ல உணர்வாள் அந்த மென் சோகம் அத்தை, மாமாவின் ஆரவாரம் இல்லாத இல்லறத்தின் எதிரொலி என்று.
மாமன் ஆகாஷ் (வானம்), அத்தை கேயா (மழைக்கால பூ) உடன் தீபா ஒரு புதுவாழ்வை அனுபவிக்கிறாள். பால்யம் அவளுக்கு அருளாத வாழ்வு அது. அத்தை கேயாவும், ”தீபா உன் வருகைக்குப் பிறகு என் வாழ்க்கை புதிதாகவிட்டது. நீ என் தோழியானதற்கு நன்றி” என்கிறாள்.
கேயா - தீபா காட்சிகள் குறைவுதான் என்றாலும் ஆழமானவை. அத்தைக்கு இன்னும் சிறப்பான வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தீபாவுக்குள் வரும். கேயாவுக்கோ தீபா புதிதாக சிமுல்தலாவை எக்ஸ்ப்ளோர் செய்வதுபோல் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பரிபூரண தேடுதலுக்கு உட்படுத்த வேண்டும் என்று கனன்று கொண்டிருந்த ஆசை ஆட்டுவிக்கும்.
அதனாலேயே குடும்பத்துடன் செல்ல திட்டமிட்ட பிக்னிக்கில் நோயின் நெருக்கதலையும் தாண்டி கலந்து கொள்வாள். அங்கே, தீபா பாட்டுபாடும்போது “என் ஆழ்மன காதலையும், ஏக்கத்தையும் அவள் பாடுகிறாள், நீ அதற்கு கிட்டார் மீட்டுகிறாய், என் எண்ணமும் அப்பாடல்தான் என்று தெரியாமலே!” என்பதுபோல் ஆகாஷை நோக்கி அவள் கடத்தும் பார்வை ஒரு கணவனாக தன் இயலாமை அவனை சுட்டெரிக்கும்.
இனி தீபா - ஆகாஷ் உறவுக்குள் உலா வருவோமாக. நிஹாரிகாவில் தீபா அடியெடுத்து வைத்த நாள் தொட்டே, மாமா ஆகாஷ் தன் மருமகளுக்காக நேரம் செலவழிக்கிறான். சிமுல்தலாவின் நீரோடைகள், கானகங்கள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் அரவமற்ற வறண்ட நிலங்கள் என வாழ்க்கையைப் போலவே பல விசித்தரங்களைக் கொண்ட இயற்கையின் மடிகளை அவளுக்குக் காட்டுகிறான்.
தோள் மீது ஏற்றி திருவிழா காட்டியிருக்க வேண்டிய தந்தை தகாத உறவுகளில் சொர்க்கம் காண மும்முரமாய் இருந்துவிட, மாமன் காட்டும் அக்கறை தந்தை இடத்தில் அவனை நிரப்பிக் கொள்ள உந்துகிறது.
மறுபுறம் குழந்தை, பதின்ம வயதில் ஏற்பட்ட காயங்களால் குழப்பம், பயம், குற்றவுணர்ச்சி ஆட்கொள்ள மன உளைச்சலில் தவிக்கிறாள். தன் மீது அன்பாக, அக்கறையாக இருக்கும் மாமன் தான் ஆழ்மனது ரகசியங்களை அறியச் சரியானவன் என்று தீர்மானிக்கிறாள்.
நள்ளிரவில் அவனை அழைத்துப் பேச முற்படும் காட்சியையும், மாமன் அறைக்கும், அவள் அறைக்கும் மத்தியில் அலங்காரமாய் வீற்றிருக்கும் இரண்டு சேரையும், டீப்பாயையும் படம் முடிந்த பின்னரும் மறக்க முடியாது. நீங்கள் படத்தைப் பார்த்த பின்னர் அதை உணர்வீர்கள். எனக்கு ஏனோ என் வீட்டின் பிளாஸ்டிக் சேர்கள் கூட எனக்கு நிஹாரிகா டெரஸில் இருந்த வெள்ளை சேர்களைப் போல் தோன்றுகின்றன!
நம் மனம் எப்போதும் காலியாக இருப்பதில்லை. அதில் ஏதோ ஓர் உணர்வு இடம்பெற்றிருக்கும். அந்த நேரத்தில் அதுதான் மனதின் சிம்மாசனம்.
ஆகாஷ் வீட்டு மொட்டை மாடியில் இருளில் பாயும் சிறு ஒளியில் அந்த வெள்ளை நாற்காலிகள் பளிச்சிடுவதுபோல் தான், மனிதனின் இருளிச்சைகளுக்கு இடையே மனிதன் மனிதனாகவே இருக்கும் பண்பு பளிச்சிடுகிறதோ என்னவோ!
தாய் வீட்டில் தீபாவுக்கு அம்மாவுக்கு அடுத்தபடியான ஆறுதல் நர்ஸ் மந்திரா. அவள் ஆறுதலா, தோழியா, காதலியா இல்லை தன் வாழ்வை சீரழித்தவளா என்ற போராட்டம் தீபாவை துரத்திக் கொண்டிருக்கும். அதைத்தான் மாமாவிடம் அவள் உடைத்துப் பேசுகிறாள்.
ஒரு மாமனாகவும், மருத்துவனாகவும் காமம் பற்றி, உடல் தேவை பற்றி, பெண்ணின் உடல் பற்றி, தன்பாலின உறவு பற்றி ஆகாஷ் விவரிப்பது நேர்த்தி.
பாலுறவு சார்ந்த குற்ற உணர்ச்சியில் உள்ள ஒருவரை மீட்டெடுக்கும் சத்திய வாக்கு. ( * பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள் அல்லாத பாலுறவுக்கு பொருந்தும்.)
“முத்தம் ருசியற்றது. ஆனால் அலாதி சுவையானது. அந்தச் சுவை நாவால் அல்ல, ஆன்மாவால் சுரப்பிகள் வழியாக நமக்குள் கடத்தப்படும்” என்று ஆகாஷ் சொல்லும் விளக்கம் ஜென் தத்துவம் ரகம்.
முத்தம் மீது இத்தகைய கவித்துவமான பார்வையைக் கடத்திய படைப்பாளிக்கு அன்பு முத்தங்களை காற்றில் அனுப்பிவைப்போமாக. சென்று சேரும் தானே!!!
தீபாவின் பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்ட ஆகாஷ் அவளை தேற்றி, கவனத்தை மடைமாற்ற ஊக்குவிப்பதோடு, உதவுகிறார். இந்த செயல்முறையில் ஆகாஷ் - தீபா இருவருமே தங்களுக்குள் உருவாகும் நெருக்கத்தை உணர்கின்றனர்.
தீபாவின் அறையை ஜன்னல் வழியாக ஆகாஷ் எட்டிப் பார்க்கும்போது அந்தத் தீயை நாம் அவரது கண்களில் காணலாம். ஆனால், அவர் மனதில் சிம்மாசனமிட்ட அந்த இருளிச்சையை மனிதப் பண்பு வெல்லும். வேகமாக தனது அறைக்குத் திரும்பும் ஆகாஷ், மனைவியிடம் “நான் மோசமானவன், அருவருப்பானவன், பயங்கரமானவன்” என்று சொல்லி பாவ மன்னிப்பு கேட்பார். அத்துடன் நில்லாது மனித மனம், “ஆனாலும் என் மீது நேசம் காட்டுவாயா? என்னை விட்டுச் செல்ல மாட்டியே!” என்ற எமோஷனல் பிளாக்மெயிலும் தொடரும்.
உறவுகளை ஏதேனும் சங்கிலி போட்டு பிடித்து வைத்துக் கொள்வது மனிதனுக்கு இயல்பாகிவிட்டது. தொப்புள் கொடியைக் கூட வெட்டினால்தான் உறவு தொடரும் என்பது நமக்கு ஏன் புரிவதில்லை!
கதை இப்படியாக நகர, கேயாவின் அகால மரணம் ஆகாஷுக்கு நடுக்கத்தைத் தருகிறது. “நான் கவலைப்பட இனி எதுவும் இல்லை” என்று ஆகாஷ் சொல்லும்போது நானிருக்கிறேனே என்று தீபா நினைவுபடுத்த, ஆகாஷின் கவலை இன்னமும் ஆழமாகிறது. ஆகாஷும் தீபாவும் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
உடனே தொடர்கிறது ஒரு பெரும் பிரிவு. தீபாவுக்கு மாமா ஆகாஷ் எழுதி வைத்திருக்கும் கடிதம்தான் ஒட்டுமொத்த கதையின் சாராம்சமும்.
வாழ்க்கை நேர்க்கோட்டில் பயணிக்கக் கூடியதா என்றால், இல்லை. வாழ்க்கை சுமுகமானதா என்றால், இல்லை. அப்படியென்றால் கடினமானதா என்றால், அதுவும் இல்லை. வாழ்க்கை இதுவரை இந்த பூமியில் வாழ்ந்து முடித்த, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத முரண்பாடுகளின் பொட்டலம். அதேதான் மனித மனமும்.
தீபாவுக்கு ஆகாஷ் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியிருப்பார். அதில், “நான் ஒரு பாலியல் வக்கிரம் படைத்தவன். நானொரு பிசாசு. நீ புரட்சிகர சிந்தனை கொண்டவள். நான் ஊருக்கு பயந்தவன். நாம் நெருங்கக் கூடாது. எனக்கு அவமானம் நேர்ந்தால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன். உன்னைவிட்டு நிரந்தரமாக ஓடுகிறேன்” என்று முடித்திருப்பார்.
மை இருட்டில் காரில் ஹெட்லைட் ஒளிக் கீற்று மட்டும்தான் நமக்குக் காட்டப்படும். மனித மனங்கள் மை இருட்டானதுதான். அதில் ஹெட்லைட் ஒளிக் கீற்றளவில் இருக்கும் சரி, தவறு என்று தீர்மானிக்கும் திறன்தான் மனிதனை மனிதனாகவே வைத்திருக்கிறது.
வாழ்க்கையின் இந்த முரண்களை கலைநயத்தோடு, எதையும் எங்கேயும் வலிந்து திணிக்காமல் கடத்தியிருக்கும் அரிய பொக்கிஷம் ‘நிஹாரிகா’ திரைப்படம்.
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மாமா மீண்டும் வருவார். பருவமழை காலமும் வந்திருக்கும். இந்தப் படத்தில் காற்று, மழை என இயற்கையின் பேரிரைச்சல்களை அப்படியாக பதிவு செய்திருப்பார் இயக்குநர்.
எப்போதும் தென்றல் காற்று, மழைத் துளி என்று மட்டுமே வர்ணித்துப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். இயற்கை எத்தனை கரடுமுரடானது என்று அத்துடன் இயைந்து வாழ்பவர்களுக்கே தெரியும். கடலோடிகளிடம் கேட்டால் காற்றைப் பற்றி விசித்திர விவரிப்புகளைச் சொல்வார்கள்.
மனிதன் இயற்கையின் சிருஷ்டி என்றால், அவனுள் இருக்கும் மனமும் இயற்கைதானே. அதன் சுயரூபம் சில நேரங்களில் மோசமானது, அருவருப்பானது, பயங்கரமானதும் கூட. நாம் பேப்பரில் வரைந்து சிவப்பு நிறம் பூசும் ஹார்ட்டின் போல் இருதயம் அழகாக இருப்பதில்லை. அப்படித்தான் மனித மனங்களும்.
ஆனால், அத்தனை இருட்டிலும் பளிச்சிடும் வெள்ளை நாற்காலிகள் போல் மனித பண்பு அவனை பளிச்சிட வைக்கும்.
தீபா - ரங்கன் திருமணத்தை சாத்தியமாக்கிவிட்டு மீண்டும் சென்றுவிடுவார் ஆகாஷ். அதன்பிறகு தீபாவின் வாழ்க்கையில் ஏதேதோ நிகழும். மீண்டும் நிஹாரிகா பங்களாவில் தஞ்சம் புகுவாள் தீபா. ஆனால், அவள் இந்த முறை தன்னை நேசிப்பவளாக இருப்பாள். தனிமையை நேசிப்பவளாக இருப்பாள். ஒரு புத்தகம் எழுதும் இலக்கோடு இருப்பாள். இருந்தும் அவள் மனதில் ஒரு கேள்வி எழும்.
சோட்டோ மாமா (சின்ன மாமா) ஆகாஷ் நீண்ட காலத்துக்குப் பின்னர் சிமுல்தலாவில் சிதிலமடைந்த கோட்டைப் படியில் தீபாவுடன் சம்பாஷணைகளில் ஈடுபடுவார்.
“இப்போதாவது என்னுடன் இங்கேயே இருக்கலாமே!” என்பாள் தீபா. நாம் பார்க்கும் ஒளியும், நமைத் தீண்டும் காற்றும், நம் தலை மீது இருக்கும் ஆகாசமும் ஒன்றுதான் என்றால் அதை நாம் தனித்தனியாக எங்கிருந்து வேண்டுமானாலும் ஒன்றாக அனுபவிக்கலாமே!” என்பார்.
இருளிச்சைகளை விலக்கி ஓர் அகண்டு விரிந்த ஆகாசமாக ஆகாஷும், இருளிச்சைகளை கடக்கும் செயல்பாட்டில் ஒளிர்ந்து நிற்கும் சுடரியாக தீபாவும் நிற்பார்கள்.
படம் முடிந்துவிடாது. உங்கள் மனதுக்குள் ஓடும். தவறாமல் பாருங்கள்!
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in