Published : 26 May 2022 04:00 PM
Last Updated : 26 May 2022 04:00 PM

மத்திய அரசோ, மாநில அரசோ ஏன் சொந்தமாக ஓடிடி தளத்தை ஆரம்பிக்கக் கூடாது? - ஒரு விரைவுப் பார்வை

ஓடிடி தளங்களின் வருகை திரைப்பட உருவாக்கத்திலும், பார்வையாளர்களின் ரசனையிலும், குடும்ப உறவுக்குள்ளும் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்லாம் நாம் ஆழமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.

ஓடிடி தளங்கள் வந்த பிறகு, குடும்ப உறவில் பல்வேறு பாதிப்புகளை அவை ஏற்படுத்தியுள்ளன. குழுவாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கிறவர்களை இந்தத் தளங்கள் தனித்தனியாகப் பிரித்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரையும் தனித் தீவுகளாக மாற்றிவிட்ட அவலம் ஓடிடி தளங்கள் வழியாக அரங்கேறியிருக்கிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாகப் பேசுதல், மனதில் உள்ள சுமைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுதல் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டன. உளவியல் சிக்கல்களும் உடல்ரீதியிலான பிரச்சினைகளும்கூட ஏற்படுகின்றன.

குறைவான சந்தாவைப் பெற்றுக்கொண்டு எப்படி இத்தனை தொடர்களையும் திரைப்படங்களையும் ஓடிடி தளங்கள் வெளியிடுகின்றன?

குறிப்பாக, கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த காலத்தில், வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத சூழலில், ஓடிடி தளங்களை அதிகமாகப் பயன்படுத்தப் பழகிக்கொண்டார்கள். இதனால் சந்தாக்கள் கணிசமாகக் கூடின. ஒருமுறை ஓடிடி தளத்தைப் பயன்படுத்தி, அதற்குப் பழக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிலேயே இருக்கக்கூடிய எதார்த்தத்துக்குள் சென்றுவிட்டனர்.

ஓடிடி தளங்கள் வழியாக ஒருசில நன்மைகளும் நடந்திருக்கின்றன. அதாவது, ஒரு வட்டாரத்தை அல்லது ஒரு மாநிலத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு உலகளாவிய பார்வையாளர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே திரைப்படம் வலம்வந்துகொண்டிருந்த சூழல் மாறி, இப்போது உலகளாவிய சினிமா ரசிகர்கள் தாங்கள் விரும்பிய தொடர்களையும் திரைப்படங்களையும் பார்ப்பதற்கான பரந்த வெளியை ஓடிடி உருவாக்கியிருக்கிறது. இது இணையத்தின் அசுர வளர்ச்சியின் வெளிப்பாடுதான்.

அதே சமயத்தில், எல்லாத் திரைப்படங்களும் ஓடிடி தளங்களுக்குள் வருவதில்லை. இந்தப் படத்தை வெளியிட்டால் எவ்வளவு பேர் பார்ப்பார்கள், எவ்வளவு சந்தாக்கள் கிடைக்கும் என்கின்ற கணக்குகள் இருப்பதால், எடுத்து முடிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமலும் ஓடிடி தளங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் வெளியிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

ஓடிடி தளங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் வசம் இருக்கின்றன. இதனால் தனியார் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. எனவே, லாபம் ஈட்டித் தரும் தொடர்களையும் திரைப்படங்களையும்தான் அவர்கள் தயாரிக்கிறார்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்குகிறார்கள். வணிக நோக்கம் இல்லாத, சமூக அக்கறையோடு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், குறைந்த செலவில் உருவான படங்களுக்கும் ஓடிடி தளங்களில் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை.

இந்தச் சூழலை மனதில் கொண்டு மத்திய அரசோ, மாநில அரசோ ஏன் அரசாங்கத்துக்கென்று சொந்தமாக ஓடிடி தளத்தை ஆரம்பிக்கக் கூடாது? அப்படி ஆரம்பிக்கும்போது குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கும் ஆதரவு அளிக்க முடியும். அல்லது அரசே நிதியுதவி செய்து சமூக பொறுப்புடன் திரைப்படங்கள் எடுக்க ஊக்குவிக்கலாம்.

> இது, அ.இருதயராஜ் சே.ச., எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x