Published : 19 Jan 2024 03:41 PM
Last Updated : 19 Jan 2024 03:41 PM

கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகிறது ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ 

மும்பை: ரன்பீர் கபூர் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘அனிமல்’. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மனன் பரத்வாஜ், விஜால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ராமேஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தீப் ரெட்டி வங்காவே படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆணாதிக்க கருத்துகளை வலுப்படுத்துவதாகவும், சர்ச்சையான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் இப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. இருந்தபோதிலும் பாக்ஸ் ஆஃபீஸில் படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இப்படம் வரும் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதில் கூடுதல் காட்சிகள் இடம்பெறும் என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்தீப் ரெட்டி வங்கா கூறுகையில், “திரையரங்க வெளியீட்டின்போது தவிர்க்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் சேர்த்து வெளியிடப்படும்” என்றார். படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடம். திரையரங்குகளில் இடம்பெறாத 8 நிமிட காட்சிகளையும் சேர்த்து 3 மணி நேரம் 29 நிமிடம் என்ற அளவில் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x