Published : 09 Oct 2017 10:23 AM
Last Updated : 09 Oct 2017 10:23 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 22:கசக்கும் சர்க்கரை.. இனிப்பாக்கும் யோகம்

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, ‘எப்படி இருக்கிறீர்கள்?’, ‘நலமா’ என்று கேட்பதுபோல, ‘ஷுகர் அளவு எவ்ளோ?’ என்று கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது. சமூகத்தில் பலரும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நம் உடலில் இன்சுலின் எனும் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதும், சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததும்தான் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம். இதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இன்னொரு முக்கிய காரணம், உடல் பருமன். அதிகப்படியான இனிப்புப் பண்டங்கள், கொழுப்பு உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், உடல் பெருத்துவிடுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்கள், சோம்பலான சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்தச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாக மாறு கிறது. அந்தக் கொழுப்பு உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது.

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க, இன்சுலின் தேவையும் அதிகரிக்கும். இதனால், அதிக அளவில் இன்சுலினை சுரந்து, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால்தான், பருமனாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் எளிதில் வருகிறது. பொதுவாக, அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ஆகியோரில் 100-ல் 80 பேருக்கு நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள் உள்ளது.

கவலையும் முக்கிய காரணம்

உடலின் பல இயக்கங்களுக்கு மன உணர்வுகள் காரணமாக அமைகிறது. கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன. இதுவும் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.

‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) ஹார்மோன் அதிகமாவதால் பெண்களின் சினைப்பையில் ‘சினைப்பை நீர்க்கட்டி’ (Poly Cystic Ovary Syndrome - PCOS) உருவாகிறது. இவர்களுக்கும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோய்க்கான அறிகுறி

உயரத்துக்குப் பொருத்தமில்லாத அதிக எடை, அதிக பசி, சோர்வு, எவ்வளவு சாப்பிட்டாலும் மெலிந்து காணப்படுவது, அதிக சிறுநீர் வெளியேற்றம், சிறுநீர் கழிக்கும் இடத்தில் நமைச்சல், அரிப்பு, உடலில் புண் ஏற்பட்டால் ஆறாமல் இருப்பது ஆகியவை நீரிழிவு நோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

நீரிழிவு நோயை எப்படி போக்குவது? ‘சர்க்கரை’ கசக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கவலையே வேண்டாம்.. அதற்கும் வழிகாட்டுகிறது யோகாக் கலை.

மார்பு எலும்புக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள பகுதி, கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசனங்களைச் செய்யலாம். சூர்ய நமஸ்காரம் மிகவும் நல்லது. சலபாசனம், தனுராசனம், பவன முக்தாசனம், புஜங்காசனம், கந்தபேருண்டாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், மத்ஸ்யேந்திராசனம் ஆகிய ஆசனங்களும் செய்யலாம்.

சலபாசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.

‘சலபம்’ என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். முதலில், குப்புற படுத்துக்கொண்டு (மகராசனம்) 10-15 முறை பொறுமையாக மூச்சை இழுத்துவிட வேண்டும். பின்னர், இரு கைகளையும் தொடைக்கு அடியில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலாக, முட்டி மடங்காமல் தூக்க வேண்டும். முடிந்தவரை உயர்த்தினால் போதும். 10 எண்ணிக்கை வரை மேலே தூக்கிய நிலையில் வைத்திருந்த பிறகு, காலை மெதுவாக கீழே இறக்கவேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும்போது காலை மேலே தூக்க வேண்டும். மூச்சை விடும்போது, காலை கீழே இறக்க வேண்டும். இப்படி 3 முறை வலது கால், இடது காலை மாற்றி மாற்றி தூக்கி இறக்கலாம். இது ‘அர்த்த சலபாசனம்.’

ஒரே நேரத்தில், இரு கால் களையும் முட்டி மடங்காமல் உயர்த்திச் செய்வதற்கு ‘சலபாசனம்’ என்று பெயர். இதையும் 3 முறை செய்யலாம்.

வெர்டிகோ பிரச்சினை இருப்பவர்கள் குப்புற படுக்கும்போது மயக்கம் வருவதுபோல இருந்தால் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம். அவர்கள் நேராகப் படுத்து காலைத் தூக்கி இறக்கலாம். மற்ற அனைவரும் இந்த ஆசனம் செய்யலாம்.

இந்த ஆசனத்துடன் புஜங்காசனம், தனுராசனம், சூர்ய நமஸ்காரம் செய்யலாம். முதுகுவலி, கழுத்துவலி, இதயநோய், வெர்டிகோ பிரச்சினை இருப்பவர்கள் தனுராசனம், சூர்ய நமஸ்காரம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, இத் தொடரின் ஆரம்பத்தில் கை, கால்களை நீட்டியும் மடக்கியும், இடுப்பை வளைத்தும் செய்த stretching exercises மற்றும் பவன முக்தாசனம் போன்றவற்றை சரி யான யோகாப் பயிற்சி நிபுணரின் ஆலோசனை பெற்று செய்ய லாம்.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி மட்டும்தான் அதிக பலனைக் கொடுக்கும். அத்துடன், உணவுக் கட்டுப்பாடு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை ஆகியவையும் இருந்தால், நீரிழிவு நோய் பாதிப்பை எளிதில் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

- யோகம் வரும்...

எழுத்து: ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x