Published : 19 Oct 2016 09:43 AM
Last Updated : 19 Oct 2016 09:43 AM
ஒரு நாட்டின் வரைபடத்தைக்கூடத் தெளிவாக வரைய முடியாத காலம் ஒன்று இருந்தது. இந்தியப் பிரதேசங்களுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்கு முன்பு, நல்ல வரைபடம் கிடையாது. உலக வரைபடத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த நாட்டில் ‘உலக’ வரைபடம் தயாரிக்கப்பட்டதோ, அந்த நாடு பெரிதாகவும், மிகப் பெரிய கண்டங்கள்கூட சிறு தீவுகளாகவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன. இப் போது செயற்கைக்கோள் உதவியுடன் மிகத் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.
இதைப் போலவே, நடு ராத்திரியில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஜோதிடர்களும், வானியலாளர்களும் விண்வெளி வரைபடங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அவை எல்லாம் தோராயமானவை என்பதால், பூமிக்கு வெளியே சென்று ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்துக்கும் ஒரு மேப் வரைந்தால் என்ன என்று விஞ்ஞானிகள் கிளம்பிவிட்டார்கள்.
அது சாதாரண காரியமா என்ன? நாம் கேலக்ஸி என்றழைக்கும் பால்வீதி மண்டலத்தின் நீளம் மட்டுமே கிட்டத்தட்ட 1 லட்சம் ஒளி ஆண்டு கள். அதாவது, 946,07,30,778 கோடி கிலோ மீட்டர்கள். அதில் அடங்கியிருக்கும் நட்சத்திரங் களின் (சூரியன்) எண்ணிக்கை மட்டும் சுமார் 30,000 கோடி. அதைச் சுற்றி வருகிற கோள்கள், அந்தக் கோள்களைச் சுற்றி வருகிற நிலவுகள் எல்லாவற்றையும் கணக்குப் போட்டால் கம்ப்யூட்டருக்கே கிறுக்குப்பிடித்துவிடும்.
இருந்தாலும், நம்பிக்கையோடு முயற்சியில் இறங்கியது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA). இதற்காக 2,041 கிலோ எடை கொண்ட காயா (Gaia) என்ற செயற்கைக்கோள் கடந்த 2013 டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்டது. பூமிக்கு வெளியே சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நின்றபடி, பால்வெளி வீதியின் அமைப்பு, நட்சத்திரங்களின் அமைவிடம் போன்ற பல விவரங்களையும் பதிவுசெய்திருக்கிறது காயா.
அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடம் ஒன்றை, கடந்த செப்டம்பர் 14-ம் தேதி வெளியிட்டிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். இதை ஒரு முழுமையான மேப்பாகக் கருத முடியாது என்றாலும், அதைப் பார்த்த விஞ்ஞானிகள் வியந்துபோனார்கள். “இது ஒரு நல்ல தொடக்கம். எப்படியும் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் இந்த வரைபடத்தை மனிதர்கள் கச்சிதமாக வரைந்துவிடுவார்கள்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT