Published : 09 Dec 2015 12:18 PM
Last Updated : 09 Dec 2015 12:18 PM

கவிதை: மூழ்கிப்போன ஒரு நூற்றாண்டு

நள்ளிரவு

மெழுகுவர்த்தியின் சுடரொளியில்

என் வீடு

இது மெய்நிகர் தோற்றக்காட்சி அல்ல

21-ம் நூற்றாண்டு

எல்லாவற்றுக்கும்

மாற்றுகளைக் கொண்டுவந்துவிடும்

எல்லாவற்றையும் சுலபமாக்கிவிடும்

இழப்பீடுகளும் உண்டு

உறுதிமொழிகள் நசநசத்துப் போய்கொண்டிருக்கின்றன

என் சாவிகள்

கடவுச் சொற்கள்

குழந்தைகள் ஏழைகள் உறுதிமொழிகள் எல்லாம்

நீரில் போவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

என் அலைபேசி செயலற்றுப் போனது

காதலையும் சரசமொழிகளையும்

நீரில் அடித்துச்சென்ற மழை இது

நீரினடியில்

நமது

கனவுகள்

மனிதாபிமானம்

சமத்துவக் கனவுகள்

பொய்கள்

அமைப்புகள்

எல்லாம் மூழ்கியுள்ளன

நாம் எதற்காகத் தயாரானோம்

இந்த 21-ம் நூற்றாண்டில்



துண்டிக்கப்பட்ட அவளது வீட்டுக்கு

என்னால் எதைக் கொண்டுபோக முடியும்

அவளுக்கு என்ன தேவை

எனக்குத் தெரியவில்லை

ஒரு பால் பாக்கெட்

ஒரு நாப்கின்

தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு

உலர்ந்த மிதியடிகள்

தரைத்துடைப்பான்கள்

ஒரு சாக்லேட்

நொறுக்குத்தீனிகள்

சில வார்த்தைகள்

எதைக் கொண்டுபோவது

அவளுக்கு எது தேவை

ஈரச் செருப்புகள்

ஈர உடல்கள்

ஈரச் சக்கரங்களால் நிறைந்த

சாலையில்

போய்க்கொண்டிருக்கிறேன்

எனக்குத் தெரியாது

அவள் முகத்தில் எது

மகிழ்ச்சியைக் கொண்டுவரும்

இந்த 21-ம் நூற்றாண்டு

எனக்கு எதையும் சொல்லித்தரவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x