Last Updated : 06 Aug, 2015 02:24 PM

 

Published : 06 Aug 2015 02:24 PM
Last Updated : 06 Aug 2015 02:24 PM

முன்னோட்டம்: ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’- அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் கலையின் குரல்

நவீன நாடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் ப்ரஸன்னா ராம ஸ்வாமியின் ‘சக்திக் கூத்து’ நாடகம் பல விதங்களிலும் முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது. பாரீ சில் அரங்கு நிறைந்த காட்சிகளாக அரங்கேறிய இந்த நாடகம் சென்னைக்கு வருகிறது.

ப்ரஸன்னா ராமஸ்வாமி ஆங் கிலம், உருது, தமிழ் ஆகிய மொழி களில் இதுவரை 24 நவீன நாடகங் களை எழுதி, இயக்கியுள்ளார். இசை, நடனம், கவிதை முதலான பல்வேறு ஊடகங்கள் இவரது கலை வடிவில் சங்கமிக்கின்றன. வெவ்வேறு பிரதிகளின் அம்சங்களும் இவரது நாடகப் பிரதியில் ஊடாடும். பண்டைய தமிழ் இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியம், கவிதைகள், இந்திய, கிரேக்கப் புராணங்களின் படிமங்கள், பாத்திரங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் இவரது நாடகங்கள் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகின்றன. இத்தனை அம்சங்களையும் கூர்மை யான சமகால அரசியல் பார்வை யோடு இணைத்துத் தருவது இவரது கலையின் சிறப்பு.

மகாகவி பாரதியாரின் பிரபல மான படைப்பாகிய பாஞ்சாலி சபதத் தில் வரும் திரவுபதிதான் இந்தக் கதையின் மையப் பாத்திரம். ராஜா வின் மகளாய்ப் பிறந்து ஐந்து மன்னன் களின் மனைவியாக வாழ்ந்த திரவுபதி யையே துகில் உரிக்கும் இந்த உலகத்தின் போர் மற்றும் அரசியலை விவாதிப்பதே இந்த நாடகத்தின் மையம். சம காலத்தில் நடைபெறும் போர்கள் மற்றும் வன்முறைகளை நாடகம் விவாதிக்கிறது என்று இந் நாடகத்தில் நடித்துள்ள ரோஹிணி தெரிவிக்கிறார். பாரதி யார், முத்து சுவாமி தீட்சிதர் பாடல்களுடன் சேரன், அவ்வை, திருமாவளவன், சுகுமாரன், அகிலன் ஆகியோரின் கவிதைகளுடன் ப்ரஸன்னாவின் வச னங்களும், நேரடி இசைக் கோர்ப்பும் நாடகத்தில் இடம் பெறுகின்றன.

சூதாட்டத்தில் மனைவியை இழக் கும் பாண்டவர்களை, திரவுபதியின் நியாயத் தராசில் நிறுத்தி, பாஞ்சாலி சபதத்தைப் படைத்திருப்பார் மகாகவி பாரதியார். பாரதியின் மனநிலையை இன்றைய காலத்துக்குப் பொருத்தி, போர்களின் போது பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகள், போர்களி னால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, இலங்கைப் போரின்போது நடை பெற்ற மனித உரிமை மீறல்கள் உள் ளிட்ட பிரச்சினைகளைக் கண் முன் விரிய வைக்கிறது ‘சக்திக் கூத்து’.

“எல்லா இடங்களிலும் எல்லாத் தளங்களிலும் எல்லா நேரத்திலும் ஒரு போராட்டம் நடந்துகொண்டே இருக் கிறது. சக்தியற்றவருக்கும் சக்திமிக்க வருக்கும் இடையிலான போராட்டம். மனிதனின் இயற்கை மீது திணிக்கும் வன்முறை, ஆண், பெண் மீது நடத்தும் வன்கொடுமைகள்,வல்லரசான நாடு சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்து வது என எல்லாத் தளங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பாஞ்சாலி சபதத் தின் கதாபாத்திரங்கள் வழியே இன் றைய சூழலைப் புரிய வைக்கிறது ‘சக்திக் கூத்து’ நாடகம்.

அனைத்தும் அறிந்தும் பல தருணங்களில் அமைதியாக இருக் கும் பீஷ்மருக்கும் கண்முன்னே அத்துமீறல்கள் நடக்கும்போதும் அமைதியாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு பொருத்தம் கண்டிப்பாக இருக்கிறது” என்கிறார் ரோஹிணி.

கடந்த ஜூலை 7-ம் தேதி, பாரீசில் அரங்கேறிய இந்த நாடகத்தைக் கண்டு ரசித்த நாடக ரசிகர் தர்மிணி இந்த நாடகம் அலாதியான அனுபவத் தைத் தந்ததாகத் தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். “மூன்றாவது நாள் காட்சிக்குச் சென்றேன். அரங்கம் நிறைந்திருந்தது. தமிழர்களோடு, பாரீஸ் ரசிகர்களும் இருந்தனர்.மேடை என்று தனியாகப் பிரித்துக் காட்டாமல், பார்வையாளர்களுக்கு அருகிலேயே நாடகப் பாத்திரங்கள் நடித்தார்கள். நாடகம் 85 நிமிடங்கள் இடைவேளையற்று நடைபெற்றது. ரோகிணியின் நடிப்பும், நெல்லை மணிகண்டனின் தப்பும், உருமி இசையும் புதிய உணர்வைக் கொடுத் தன. அந்த அரங்கில் அமைந்த ஒரு தூண்கூட நாடகத்தின் அங்கமாகிவிட் டது” என்கிறார் தர்மிணி.

சென்னையில் இந்த நாடகம் வரும் 8, 9, 10 தேதிகளில் நுங்கம்பாக்கம் அலியான்ஸ் ஃப்ராங் கைஸ், வளசரவாக்கம் கூத்துப் பட்டறை, பெசன்ட் நகர் ஸ்பேசஸ் ஆகிய அரங்கங்களில் மாலை 7 மணிக்கு நடக்கவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x