Published : 08 Jul 2017 06:36 PM
Last Updated : 08 Jul 2017 06:36 PM

அறம் பழகு: கோவையில் மனநலம் குன்றியவருக்குத் தனி அறை எழுப்ப உதவலாமே!

கோவையைச் சேர்ந்த மனநலம் குன்றிய இளைஞரைப் பராமரிக்கும் தனியார் காப்பகத்தில் அவருக்கெனத் தனி அறை எழுப்ப உதவி கேட்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.

*

பெற்ற தாயே தன் மகனைக் கருணைக் கொலை செய்யச் சொல்வாரா..? மனநலம் குன்றிய தன் மகன் படும் இன்னல்களைப் பொறுக்க முடியாமல் கோயம்புத்தூரில் ஒரு தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்திருக்கிறார்.

அவரின் பெயர் மணிமேகலை. அவர் மகன் ஜெயகணேஷ் 13 வருடங்களாக மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றிப் பேசிய மணிமேகலை, ''5 வயதில் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயகணேஷுக்கு அப்போதே மனச்சிதைவு தொடங்கிவிட்டது. இப்போது அவனுக்கு 18 வயது, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டாலும் 13 வருடங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை'' என்று கண்ணீர் உகுக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் என் மகனைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கதறியிருக்கிறார் மணிமேகலை. இதுதொடர்பாக ஜெயகணேஷைப் பராமரித்து வந்த கோவை, அன்னூர் ஹெச்.சி.ஏ. மனநலக் காப்பகப் பொறுப்பாளர் வினோத்திடம் பேசினேன்.

''காப்பகத்தில் பராமரிப்புக்காக 16 பெண்கள் உட்பட சுமார் 50 பேர் தங்கியிருக்கின்றனர். இவர்கள் அனைவரைக் காட்டிலும் ஜெயகணேஷ் அதிக மூர்க்கத்துடன் இருப்பார். ஆரம்பத்தில் ஓரளவுக்கு சாதாரணமாக இருந்த ஜெயகணேஷ், நாளாக நாளாக அதிக உக்கிரமடைந்தார். மருந்துகள் கொடுக்கப்பட்ட போதிலும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

காப்பகத்தில் உள்ள ஏராளமான மின்விசிறிகள், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி உள்ளிட்டவற்றை ஜெயகணேஷ் உடைத்திருக்கிறார். அறையில் அவருடன் இருப்பவர்களைக் கடித்துவிடுவார். இதனால் அவரை எல்லோருடனும் ஒன்றாக வைத்துக் கவனிக்க முடியவில்லை.

அவருக்கென அறை எழுப்பும் அளவுக்கு எங்களிடம் பொருளாதாரம் இல்லாததால், ஜெயகணேஷுக்காக அவரின் குடும்பத்தாரிடம் தனி அறை கேட்டிருக்கிறோம்'' என்றார்.

ஜெயகணேஷ் மனநலக் காப்பகத்தில் இருந்தபோது...

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜெயகணேஷின் அண்ணன் கெளதம், ''என் தம்பி குணமாக எங்கெங்கோ சென்று மருத்துவம் பார்த்தோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

ஜெயகணேஷை வீட்டில் வைத்திருக்க முடியாமல் அன்னூரில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் அவரைச் சேர்த்தோம். அங்கே அவரின் மூர்க்கத்தனம் அதிகமானதால், தனி அறை கட்டித்தர சொல்லிக் காப்பகத்தில் கேட்டுள்ளனர்.

இதற்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நான் தையல் நிலையத்தில் வேலை பார்க்கிறேன். அம்மா வீட்டில் இருக்கிறார்.

போதிய நிதி இல்லாததால் ஆரம்ப கட்டமாக அம்மாவின் நகையை அடகு வைத்து மணலையும், ஹாலோபிளாக் கல்லையும் வாங்கிவிட்டோம். ஆனால் கட்டிடப் பணிகளுக்கும், இதர கட்டுமானப் பொருட்களுக்கும் பணமில்லாததால், பணி அப்படியே நிற்கிறது. இப்போது ஜெயகணேஷ் வீட்டில்தான் இருக்கிறார். அறை எழுப்ப யாராவது உதவினால் நன்றியுடன் இருப்போம்'' என்கிறார்.

உதவும் உள்ளங்கள் தொடர்பு கொள்ள, கெளதம்: 8124282686.

ஜெயகணேஷின் வங்கி கணக்கு எண்:

JAYAGANESH.G & MANIMEGALAI.G.

Acc No: 002102101000328

IFSC CODE :CORP0000021

Corporation Bank, Oppanakara street, Coimbatore.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x