Published : 24 Apr 2017 09:27 AM
Last Updated : 24 Apr 2017 09:27 AM

கல்லூரியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிவிடுங்கள்!- ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டும் நிகழ்ச்சியில் வெ.இறையன்பு அறிவுரை

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி விட வேண்டும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு கூறினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற சிவில் சர்வீசஸ் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் முதன்மைச் செயலர் வெ.இறையன்பு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஐஏஎஸ் தேர்வு எழுதுவது என முடிவெடுத்தால் தட்டிக் கொடுப்பவர்களைக் காட்டிலும் தட்டிக்கழிப்பவர்களே அதிகம். அரசு பணி என்பது சமூக சேவைக்கு நம்மை அர்ப்பணிக்கு்ம பணி. ஐஏஎஸ் என்பது ஒரு வேலை அல்ல. மக்களின் கண்ணீரைத் துடைப்பதற் கும் மக்களோடு பயணிப்பதற் குமான பணி. தலைமைப்பண்பு, தெளிவான பார்வை இரண்டும் இந்தப் பணிக்கு அவசியம். அறிவும், ஈடுபாடும், பணியாற்றும் ஆர்வமும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.

இத்தேர்வுக்கு பரந்து பட்ட வாசிப்பு தேவை. பாடப் புத்தகங்களைத் தாண்டி பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். செய்தித்தாள்களை முறையாக படிக்கும்போது பொது அறிவு வளரும். ஆழ்ந்த வாசிப்பு ஐஏஎஸ் தேர்வுக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

கல்லூரி தேர்வுக்கும் போட்டித் தேர்வுக்கும் அடிப்படை வேறுபாடு என்னவெனில், கல்லூரியில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால், போட்டித்தேர்வில் தேர்ச்சி என்பது கிடையாது. தேர்வில் தகுதி பெற வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக் குத் தயாராகிவிட வேண்டும். விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் போது சொந்த விருப்ப அடிப் படையில் தேர்வுசெய்ய வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன் னார், இந்த பாடம் அதிக மதிப் பெண்களைப் பெற்றுத்தரும், அந்த பாடம் மிகவும் எளிதாக இருக்கும் என்ற நிலையில் விருப்பப்பாடத் தேர்வு அமைந்துவிடக்கூடாது.

வெறும் மனப்பாட சக்தி கொண்ட வர்களால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது. காரணம் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 30 சதவீதம் அறிவு சார்ந்ததாகவும், 40 சதவீதம் புரிதல் சார்ந்ததாகவும் எஞ்சிய 30 சதவீதம் பரிசீலனை செய்து எழுதுவது சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தினமும் 12 மணி நேரம் படித்தால் போதும். தேர்வுக்குப் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூக்கத்தை தியாகம் செய்துவிடக்கூடாது. தினமும் 7 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். அட்டவணை போட்டு படிப்பது சிறப்பு. ஒரே பாடத்தைப் படித்தால் சலிப்பு தட்ட லாம். அதற்கு சுழற்சி முறையில் பாடங்களைப் படிக்க வேண்டும். படிப்பதைச் சுமையாக கருதாமல் சுகமாக கருதி படிக்க வேண்டும்.

இவ்வாறு இறையன்பு கூறினார்.

சைலேந்திரபாபு

தமிழக கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டிஜிபி சி.சைலேந் திரபாபு பேசும்போது கூறியதாவது:

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என்றால் பெரிய, கவுரவமிக்க பதவி. சைரன் காரில் செல்லலாம் என்று நினைக்காமல் நாட்டு முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், ஊழலை ஒழிக்கவும் வாய்ப்பு தரக்கூடிய பதவியாக கருத வேண்டும். உயர்ந்த நோக்கம் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றியைத் தந்துவிடாது. கடின உழைப்புதான் வெற்றியை தரும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதுதான் மிகவும் சிரமம். இத்தேர்வில் வெற்றிபெற்றுவிட் டால் மெயின் தேர்வுக்கு உங்களுக்கு தமிழக அரசே உணவு, தங்குவசதி, மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை கொடுத்து பயிற்சி அளித்துவிடும். என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ புத்தகங்கள் படித்தால் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

செய்தித்தாள்கள் வாசிப்பு மிக மிக முக்கியம். முதல்நிலைத் தேர்வில் சி-சாட் தாளில் ரீசனிங் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இதற்கு பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு பயிற்சியில் ஈடுபடுவது ஒரு கட்டத்தில் விளையாட்டுபோல் இருக்கும். எதையும் ஆர்வமாக படிக்க வேண்டும். எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிய சாதனைகள் என்பவை சின்னச் சின்ன சாதனைகளின் கூட்ட மைப்புதான். எனவே, கல்லூரியில் படிக்கும்போது பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

அது சிவில் சர்வீசஸ் தயாரிப்புக்கு உங்களுக்கு உற் சாகத்தை தரும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றால் சின்ன வயதில் பெரிய பொறுப்பு கிடைக் கும். நாட்டின் நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம். ஐஏஎஸ் தேர்வு ஒரு கடினமான தேர்வு அல்ல. அதற் காக எளிதான தேர்வு என்றும் சொல்லிவிட முடியாது.

இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

கோ.பிரகாஷ் - நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் பேசும்போது கூறிய தாவது:

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் பெரிய குடும்பப் பின்னணி, பெரிய அந்தஸ்து, நல்ல உடல் தோற்றம் இருக்க வேண்டும் என்று சொல்லப் படுவதெல்லாம் வெறும் மாயை. இதில் எள்ளளவும் உண்மை யில்லை. திட்டமிட்ட கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமாலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறலாம். ஓரளவுக்கு ஆங்கிலப்புலமை இருந்தால் போதும். இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுபவர்களை ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்களாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படைத்தேவை ஒன்று ஆர்வம், இன்னொன்று தாகம். இவை இரண்டும்தான் உந்து சக்தி, தூண்டுகோல். இத்தேர்வுக்கு வாசிப்பு பழக்கம் மிக மிக அவசியம். கல்லூரி செமஸ்டர் தேர்வைப் போல் அல்லாமல் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளரும், தினமும் செய்தித்தாள் வாசிப்பு முக்கியம். செய்தித்தாள்களை வாசிக்கும்போது உலகத்தைப் பற்றிய பார்வை மாறும். சிந்தனை பளிச்சிடும். பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பது ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்குப் பெரிதும் உதவும்.

ஐஏஎஸ் அதிகாரியானால் லட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். நாம் போடும் ஒரு கையெழுத்து பல மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

வீ.நந்தகுமார்

வருமானவரித்துறை இணை இயக்குநர் வீ.நந்தகுமார் பேசும்போது, ‘‘படிப்பு என்பது வேறு, போட்டி வேறு, போட்டித்தேர்வில் நமக்கு தெரியாமல் ஏராளமானோர் நம்மோடு போட்டிபோடுவார்கள். ஐஏஎஸ் தேர்வு என்பது வெறும் அறிவை சோதிக்கும் தேர்வல்ல. நமது ஆளுமையை, முடிவெடுக்கும் திறமையை சோதிக்கும் தேர்வாகும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர் முதலில் தங்கள் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு அதை சரிசெய்ய வேண்டும். அடிப்படையில் நான் ஒரு குழந்தை தொழிலாளி. அதுவும் கற்றல் குறைபாடு உடைய மாண வன். எனக்கு இந்த குறைபாடு முதலில் தெரியாது. அக்குறை பாடு தெரிந்த பின்னர் அதற் கேற்ப என்னைத் தயார்படுத் திக்கொண்டேன். சாதாரண மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புகள் எனக்கு கிடைக்க வில்லை. ஆனாலும், 6 லட்சம் பேருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்றேன்’’ என்றார்.

வெங்கடேஷ் நாராயண்

முன்னதாக, ஐஆர்ஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் நாராயண் சிவில் சர்வீசஸ் தேர்வுமுறை குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.

இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், மதிய உணவும் அளிக் கப்பட்டது. ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் திறனறித்தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற 3 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.



பயத்திலிருந்து விடுபடுவதே உண்மையான கல்வி!- சமஸ், நடுப்பக்க ஆசிரியர், தி இந்து தமிழ் நாளிதழ்

இன்றைக்கு மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டபோதே இந்நாட்டில் மாநிலங்களின் உரிமை இரண்டாம்பட்சமாக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட அதிகாரமாகத்தான் அது வடிவமைக்கப்பட்டது. நாளாக, நாளாக மிச்சமிருக்கும் அதிகாரங்களும் பறிபோகின்றன. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது கல்வித் துறையில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரம் இன்றைக்குக் கிடையாது. அன்றைய அதிகாரம் இன்றைக்கும் இருந்திருந்தால், யாரும் ‘நீட்’ தேர்வை நம் மீது திணிக்க முடியாது. மாநிலங்களின் உரிமை ஓங்கி நிற்பதே உண்மையான ஜனநாயகத்துக்கும் பன்மைத்துவத்துக்கும் வழிவகுக்கும்.

மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்று பேசும்போது எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறோம். தீர்வை யோசிக்கும்போது ஆளுக்கொரு பக்கம் மாறுபடுகிறோம். இந்நாட்டின் முடிவுகளை எடுக்கும் இடத்தில் நம் கை ஓங்காமல் இந்தப் பிரச்சினைக்கு விடிவில்லை. வெறுமனே உள்ளூர் கனவுகளுடன், சென்னையைத் தாண்டிச் செல்ல முடியாத மனநிலையுடன் எதையும் சாதிக்க முடியாது. தயக்கத்திலிருந்து விடுபட வேண்டும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும். பயத்திலிருந்து விடுபட வேண்டும். பயத்திலிருந்து விடுவிப்பதே உண்மையான கல்வி. பரிபூரண விழிப்புணர்வே அதைச் சாத்தியமாக்கும். அந்த விழிப்புணர்வையும் இந்தப் பார்வையையும் உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே ‘தி இந்து’ இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

மாணவர்களுடன் கலந்துரையாடிய சைலேந்திரபாபு

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரியான தமிழக கடலோர பாதுகாப்புக்குழும கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு மேடையில் நின்று பேசாமல் மாணவர்கள் மத்தியில் சென்று பேசினார். மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களிடம் அடுத்தடுத்துக் கேள்வி கேட்ட அவர், சுவாரஸ்யமான விவாதமாக அதை உருமாற்றினார். புத்தக நாளையொட்டி கை நிறையப் புத்தகங்களுடன் வந்திருந்த அவர், கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு அந்தப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். மாணவர்கள் மத்தியில் வளைய வளைய வந்து அவர் உரையாடிய விதம் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் வெற்றி பெறுவர்: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்ய பூமிநாதன்

தி இந்து தமிழ் நாளிதழோடு இணைந்து இந்த நிகழ்வை நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பத்திரிகைகள் என்பவை வெறும் அன்றாட செய்திகளை மட்டும் தருபவையாக இல்லாமல், சமூகம் குறித்த அக்கறையோடும் , சமூகத்தின் உயர்வுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் தி இந்து தமிழ் நாளிதழ் செய்திப் பணியோடு ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமாய் கலந்து கொள்வதைப் பார்க்கையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் ஆகிய பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வரும் காலங்களில் கூடுதலாய் வெற்றி பெறுவார்கள் என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளில் ஒரு பகுதியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x