Last Updated : 28 Dec, 2013 12:00 AM

 

Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

ஆண்டுதோறும் சுங்கம் உயர்த்த அரசு அனுமதி - 45 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலையில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 14 சதவீத சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 45,00,000 லாரிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 3,04,523 லாரிகள் உள்ளன. நாடு முழுவதும் 2 கோடியே 70 லட்சம் பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர். மறைமுகமாக 15 கோடி பேர் இதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுங்கம் உயர்வு

தமிழகத்தில் லாரி தொழிலை நம்பி நேரடியாக 18 லட்சம் பேரும், மறைமுகமாக ஒரு கோடி பேரும் பயன்பெற்று வருகின்றனர். டீசல் விலை உயர்வு, உள்ளூர் வரி, பசுமை வரி, சேவை வரி என பல்வேறு வரி விதிப்புகளால் லாரி தொழில் தொய்வடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செப். 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மேலும், இனி ஆண்டுதோறும், விலைவாசி ஏற்றத்துக்கு தகுந்தாற்போல, சுங்கக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனால், லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5,68,566 கனரக வாகனங்கள் இயங்கி வருகிறது. இவைத் தவிர பஸ், கார், ஜீப் என மேலும் பல லட்சம் வாகனங்கள் உள்ளன. இவை அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் 50 கி.மீ., தொலைவை கடந்து செல்ல கட்டணம் செலுத்தி சென்று வருகின்றன.

லாரி தொழில் கடும் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் 75 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கு 25 ஆண்டுகள் வரை சுங்கம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 25 சதவீத சுங்கச் சாவடிகள் மட்டும் தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல், மல்டி ஆக்ஸில் கொண்ட வாகனத் துக்கு ஒரு முறை கட்டணமாக 374 ரூபாய், டிரக், பஸ் ஆகியவற்றுக்கு 233 ரூபாயும், மினிடோர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு 116 ரூபாயும், கார், ஜீப் உள்ளிட்டவைக்கு 67 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் அதே வழித் தடத்தை பயன்படுத்தும் வாகனங்கள் இருமுறை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வால் நாடு முழுவதும் லாரி தொழில் கடுமையாக நலிவுற்றுள்ளது.

தமிழகத்தில் வட்டார போக்கு வரத்து அலுவலகம் மற்றும் வாகன வரி விதிப்பு மூலம் கடந்த 2012-13ம் ஆண்டு மட்டும் 3870 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. வரும் 2014-ம் ஆண்டு 4,191 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் சென்னகேசவன் கூறியதாவது:

மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம் விலைவாசி உயர்வுக்கு தக்கபடி சுங்கக் கட்டணம் நிர்ணயித்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடி அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஒரு முறை முதலீட்டில் சாலை அமைத்து, 25 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை பெற்றுள்ளன. இதனால், ஆண்டுதோறும் 10 முதல் 14 சதவீத கட்டண உயர்வு என்பது லாரி தொழிலை நசுக்க கூடிய வரியாகவே உள்ளது.

சுங்கம் வசூலிக்கும் நிறுவனத்துக்கு பாதிப்பில்லை

ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்திக் கொள்ளும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் செல்லும் லாரிகளுக்கு ஆண்டுக்கு 16,500 ரூபாய் கட்டணத்தை விதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x