Published : 01 Jan 2014 08:57 PM
Last Updated : 01 Jan 2014 08:57 PM

திண்டுக்கல்: பழனி தைப்பூசத்துக்கு 450 சிறப்பு பஸ்கள்

பழனி தைப்பூசத்தையொட்டி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்தில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். இத் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி மதுரை அரசு போக்குவரத்துக் கழகக் கோட்டம் சார்பில் பழனிக்கு 450 சிறப்பு பஸ்கள் வரும் 15-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் 15-ம் தேதி முதலே பழனிக்கு வரத்தொடங்கி விடுவார்கள். பக்தர்கள் தடையின்றி கோயிலுக்குச் சென்று வரவும், பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 சிறப்பு பஸ்கள் 15-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் திருவிழா முடியும் வரை (ஜன.18) இயக்கப்படும். இந்த பஸ்கள் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, பழனி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வருகையைப் பொருத்து கூடுதலாக 30 முதல் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருச்சி, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்களை பழனிக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சிரமம் இன்றி பழனி தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கலாம். பக்தர்களுக்கு வழிகாட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, பழனி ஆகிய பஸ் நிலையங்களில் பயணிகள் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மையங்களில் பக்தர்களுக்கு உதவ அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழனியில் தற்காலிக பஸ் நிலையம்

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதனால், நகராட்சி பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகும். மேலும், சிறப்பு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்தால் நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.

அதனால், அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசு சிறப்பு பஸ்கள் மட்டும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x