Last Updated : 16 Jan, 2014 12:00 AM

 

Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

சேலம்: மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை தத்தளிக்கும் அரசு மருத்துவமனைகள்; 3 மருந்தகங்களை தாய், சேய் நல விடுதியாக மாற்ற கோரிக்கை

சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நகர பகுதியில் உள்ள மூன்று மருந்தகங்களை, தாய், சேய் நல விடுதியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 8.30 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களின் மருத்துவ சேவைக்காக, மாநகர் நல அலுவலரின் கீழ் மருத்துமனைகள், மருந்தகங்கள், தாய், சேய் நல விடுதிகள் இயங்கி வருகின்றன. மேலும், மலேரியா பிரிவு மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏழு நகர் நல மையங்கள் உள்ளன. ஐந்து தாய், சேய் நல விடுதிகள் உள்ளன. யுனானி, சித்தா ஆகிய மருத்துவ பிரிவுகளும் இயங்கி வருகிறது. இதுதவிர அம்மாப்பேட்டை, குமாரசாமிப்பட்டி, பழைய சூரமங்கலம் ஆகிய இடங்களில் மூன்று மருந்தக மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

டாக்டர்கள் பற்றாக்குறை

இந்த மருந்தக மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை குறைவாக இருந்த காலக்கட்டத்தில், மருந்தகங்களாக செயல்பட்டதை எவ்வித மாற்றமும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தக மருத்துமனை காலை 7.30 மணியில் இருந்து பகல் 10.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயங்குகிறது.

ஆனால், நகர் நல மையம், தாய், சேய் நல விடுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலை நிலவுகிறது. ஐந்து டாக்டர் பணியிடம் பற்றாக்குறையாக உள்ள நிலையில், பிரசவம் மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் தத்தளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மருந்தகங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு குறைந்த கால அளவு பணி என்ற நிலையிலும் அவர்கள் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட சிறு வியாதிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப் படுகிறது. எனவே, இதுபோன்ற மருந்தக மருத்துவமனையை தாய், சேய் நல விடுதியாக மாற்றுவதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.

மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மட்டுமல்லாமல், செவிலியர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. ஒரு நகர் நல மையத்துக்கு இரண்டு டாக்டர்கள், மூன்று ஸ்டாப் நர்ஸ்கள், ஒரு லேப் டெக்னீசியன், ஒரு பார்மசிஸ்ட் மற்றும் உதவியாளர் என எட்டு பேர் வரை பணியாற்ற வேண்டும். ஆனால், சேலம் மாநகராட்சியில் உள்ள நகர் நல மையங்களில் மருத்துவர் இல்லாமல் பகலில் ஒரு செவிலியரும், இரவில் ஒரு செவிலியரும் மட்டுமே பணியாற் றக் கூடிய நிலை உள்ளது.

மாதத்துக்கு 250 பிரசவம்

மேலும், மாநகராட்சி மருத்துவ மனைகளில் ஏ.என்.எம். அளவிலான ஒன்றரை ஆண்டு பயிற்சி முடித்த வர்களை கொண்டே பிரசவம் பார்க்கப்படுகிறது. நகர் நல மையங்களுக்கு ஸ்டாப் நர்ஸ், மருத்துவர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்பிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு முழு அளவிலான மருத்துவ உதவி கிடைக்க வழி பிறக்கும்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தாய், சேய் நல விடுதிகளில் மாதம் தோறும் 200 முதல் 250 பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. சில ஆண்டுக்கு முன்பு பிரசவத் தின் போது, ஆண்டுக்கு 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பலியாகும் சம்பவம் நடந்தது. மருத்துவ வசதிகள் காரணமாக பலி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண்பதன் மூலம் பிரசவத்தின்போது பலி என்பது இல்லாத நிலை உருவாகும்.

கிளினிக் நடத்தும் அரசு டாக்டர்கள்

மாநகராட்சி மருத்துவர்களில் சிலர் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகின்றனர். மாநகராட்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தங்களது சொந்த கிளினிக்கிற்கு வர வழைத்து சிகிச்சை அளித்து பணம் பெறுவது, மாநகராட்சி மருந்தகங்களில் இருந்து மருந்துகளைக் கொண்டு வந்து தங்களது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளிடம் விற்று பணமாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவர்கள் ஆலோசனை மட்டுமே வழங்கலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில், ஆலோசனை என்ற பெயரில் சிகிச்சை அளித்து பணம் பறிப்பவர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x