Published : 12 Oct 2014 11:43 AM
Last Updated : 12 Oct 2014 11:43 AM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குறையும் குரங்குகள் எண்ணிக்கை: வனஉயிர் ஆராய்ச்சியாளர்கள் கவலை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வனஉயிர் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகில் 400 வகையான குரங்குகள் உள்ளன. குரங்குகளின் எலும்பு, பற்கள், மூக்கு மற்றும் பல உடற்கூறுகளை ஆராய்ந்து அறிவியலாளர்கள் புரோசிமியன்கள் (மூதாதையக் குரங்குகள்), சிமியன் கள் (பின்தோன்றிய குரங்குகள்) என இரு வகையாகப் பிரித்துள்ளனர். மடகாஸ்கர் தீவிலுள்ள லெமூர்கள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள தேவாங்குகள், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள டார்சியர்கள், தென் மற்றும் அமெரிக்காவிலுள்ள குரங்கினங்கள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் வசிக்கும் குரங்குகள், ஏப் எனப்படும் குரங்குகள் ஆகியன முக்கியமான குரங்கினங்கள்.

தற்போது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உணவுப் பற்றாக்குறை, வாழ்விடங்கள் ஆக்கிர மிப்பு ஆகியவற்றால் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக வனஉயிர் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிவாற்றல் மிகுந்தவை

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் `தி இந்து'விடம் கூறியது: இந்தியாவில் இருவகை தேவாங்குகள், 8 வகை குரங்குகள், 5 வகை மந்திகள், வடகிழக்கு பகுதியில் தென்படும் வாலில்லா குரங்கு உள்ளிட்ட 16 வகை குரங்கினங்கள் உள்ளன. பெரும்பாலான குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில மனிதர்களாகிய நம்மைபோல வசிப்பவை. எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும்.

மனிதர்களைப்போல முன்னோக்கி அமைந்துள்ள கண்களை பெற்ற குரங்குகள், மரம்விட்டு மரம் தாவும் கிளைகளின் தூரத்தை கச்சிதமாகக் கணிக்க வகை செய்கின்றன. இதனாலேயே இவை தாவும்போது கீழே விழுவதில்லை. நுகரும் சக்தியைவிட பார்வை மற்றும் தொட்டறியும் உணர்வுகளை குரங்குகள் அதிகமாகப் பயன்படுத் துகின்றன. மற்ற விலங்குகளைக் காட்டிலும், குரங்குகளுக்கு நுகரும் தன்மை சற்று குறைவே.

சில வேலைகளை தாமாகவோ அல்லது மற்றவர்களைப் பார்த்தோ கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவை. குரங்கினங்கள் அதனை ஒத்த அளவுடைய மற்ற விலங்குகளை காட்டிலும், பெரிய மூளையைக் கொண்டுள்ளன. இதனாலேயே குரங்குகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அறிவாற்றல் மிக்கவை.

வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு

குரங்கினங்கள் குழந்தைப் பருவத்தில் அவற்றின் தாயைச் சார்ந்தே இருக்கும். தன் நீண்ட கால இளம் பருவத்துக்குப்பின் முதிர்ச்சியடையும். பெரும்பாலான குரங்குகள், முறைக்கு ஒரு குட்டியே ஈனும். சில குரங்கினங்கள் ஆண், பெண் என ஜோடியாகவே வாழும். மேலும், சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகள் அவற்றுக்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாக இருக்கும். வனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பலவிதமான காட்டு மரங் களின் பழங்களை உண்டு அவற்றின் விதை பரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக் குரங்கினங்கள், தம் வாயிலுள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து, இடம்விட்டு இடம் சென்று விதைகளைத் துப்புவதால் அவ்விதைகளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அது மட்டுமின்றி, குரங்குகள் பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக் கையை கட்டுக்குள் வைக்க உதவு கிறது. மேற்குதொடர்ச்சி மலையில் உணவு பற்றாக்குறை, வாழ்விடம் குறைதல், வேட்டையாடல் ஆகிய காரணங்களால் குரங்குகள் எண்ணிக்கை குறைகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x