Last Updated : 11 Feb, 2014 01:30 PM

 

Published : 11 Feb 2014 01:30 PM
Last Updated : 11 Feb 2014 01:30 PM

கடலூரில் காலாவதியான குளிர்பானம் குடித்த சிறுமி பலியானதால் அதிர்ச்சி

சேலத்தில் போலி குளிர்பானங்கள், காலாவதியான பொருட்களை வியாபாரிகள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வது தொடர்கிறது. கடலூரில் காலாவதியான குளிர்பானத்தை குடித்து சிறுமி இறந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பிற இடங்களில் நடக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் குளிர்பானம் குடித்த நான்கு பெண்கள் வாந்தி, மயக்கம் எடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற மூன்று பெண்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான குளிர்பானத்தை குடித்ததால் சிறுமி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, பல ஆயிரக்கணக்கான குளிர்பான பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து போலி குளிர்பானங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஆரோக்கியம் பாதிப்பு

சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:

பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. சாக்ரீன், கலர் பவுடர், கெமிக்கல் பயன்படுத்தி போலி குளிர்பானத்தை தயாரித்து பிரபல நிறுவனங்களின் பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர். போலி குளிர்பானங்களால் உடல் உபாதை ஏற்பட்டு குடல் புண், அஜீரணம் உள்ளிட்ட கோளாறுகளில் அவதிப்பட நேரிடும்.

மேலும், எவ்வித அரசு அனுமதியும் இன்றி குடிசை தொழில் போல பல்வேறு குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகிறது. பாக்கெட் மூலம் குளிர்பானங்களை அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

சுத்தமில்லாத தண்ணீர், ரசாயன பவுடர், சாக்ரீன் என தடை செய்யப்பட்ட பொருட்களை கலந்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். பல வண்ணங்களில் பாக்கெட் ஐஸ் தயாரிப்பும் நடந்து வருகிறது.

சோதனை நடத்த வேண்டும்

இதில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட எதுவும் அச்சிடப்படுவதில்லை. மேலும், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்டவையா என்ற விவரமும் இல்லை.

குளிர்பானம் இரண்டரை மாதங்கள் மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால், வியாபாரிகள் விற்பனையை மட்டும் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் மீதான அக்கறை இல்லாமல் போலி முதல் காலாவதியான பொருட்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை கலப்படம், போலி, காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து பறிமுதல் செய்வதன் மூலம் கடலூரில் நடந்த சம்பவம் போல பிற இடங்களில் நடக்காமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கலப்பட பொருள் விற்றால் கடும் நடவடிக்கை

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவிடம் கேட்டபோது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி காலாவதியான பொருட்களையோ, போலி மற்றும் கலப்பட பொருட்களையோ விற்பனை செய்வது சட்டமுறைப்படி தவறு. காலாவதியான, போலி குளிர்பானங்கள், தயாரிப்பு தேதி இல்லாத பொருட்களை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் ஆய்வு செய்து வாங்க வேண்டும்.

கடைக்காரர்களும், வியாபாரிகளும் போலி மற்றும் காலாவதி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு காலாவதி பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உணவு பொருட்களில் கலப்படம், போலி, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் கண்டறிந்தால், 0427-2450332 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94435-20332 என்ற அலைபேசியில் தகவல் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x