Published : 15 Jul 2018 02:30 AM
Last Updated : 15 Jul 2018 02:30 AM

தங்கமான சேல்ஸ் பாய்: பதக்கம் கொடுத்த குத்துச்சண்டை

ரூர் ராயனூரைச் சேர்ந்தவர் மணிவேல் (23). கரூரில் ஆயத்த ஆடை ஷோரூம் ஒன்றில் விற்பனையாளராக (சேல்ஸ் பாய்) பணிபுரிகிறார். இவரது தந்தை ரவி. டெய்லர். கடந்தாண்டு கல்லூரி படிப்பை முடித்த மணிவேலுக்கு குத்துச்சண்டை மீது கொள்ளை ஆர்வம். அவரது திறமைக்கு தங்கம் பதக்கம் கொடுத்து அங்கீகரித்திருக்கிறது நேபாளத்தில் நடந்த சர்வதேச குத்துச் சண்டை போட்டி. காட்மண்டுவில் நடந்த சர்வதேச ஊரக விளையாட்டுப் போட்டியில்தான் மணிவேலுக்கு தங்கம் சாத்தியமானது.

சிறு வயது முதலே மணிவேலுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். 6-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடந்த 400 மீட்டர் ஓட்டம், கபடி போட்டிகளில் வெற்றிபெற்றது விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரித்தது. அதன்பின் பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஓட்டம், குண்டு எறிதல் ஆகியவற்றில் குறுவட்ட அளவில் வெற்றிபெற்றார்.

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் பந்தயம், என்சிசி அணிவகுப்பு ஆகியவற்றில் பங்கேற்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். லங்காடி (நொண்டி) போட்டியில் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

மணிவேலை சந்தித்தோம். அவர் கூறும்போது, “பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றாலும் குத்துச்சண்டை எனக்கு பிடித்தது. டிவியில் பார்த்து, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரூர் அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்தபின் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று 2 ஆண்டுகள் பல்கலைக்கழக அளவில் 3-வது இடம் பெற்றேன்.

அதன்பின் கல்லூரி படிப்பு முடிந்து ஆயத்த ஆடை ஷோரூமில் விற்பனையாளராக பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வந்தேன். 2 சக்கர வாகனத்தில் செல்லும்போது காலில் அடிப்பட்டதால் மாநில, தேசிய ஊரக விளையாட்டு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க இயலாமல் போனது.

ஆனாலும், நேரடியாக சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம் என்பதால் மனம் தளராமல் பயிற்சியைத் தொடர்ந்தேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் கடந்த மாதம் நேபாள தலைநகர் காட்மாண்டில் நடந்த சர்வதேச ஊரக விளையாட்டில் பங்கேற்க சொந்த செலவில் காட்மாண்டு சென்றேன். நுழைவுக் கட்டணம் செலுத்தி குத்துச்சண்டைப் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றேன்” என்றார்.

உலகின் பெரிய மக்கள் தொகை யைக் கொண்ட இந்தியாவில் சர்வதேச அளவில் சாதிக்கும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மணிவேலைப் போன்றவர்களை அடையாளம் காண்பதில்தான் அரசுகள் கோட்டை விடுகின்றன. முறையான பயிற்சி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளின் அத்தனை தங்கமும் இந்தியாவில்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x