Last Updated : 04 Apr, 2018 08:13 AM

 

Published : 04 Apr 2018 08:13 AM
Last Updated : 04 Apr 2018 08:13 AM

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மீதான உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: மத்திய அரசின் சீராய்வு மனுவை விசாரிக்க ஒப்புதல்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட நடைமுறையில் மாற்றம் செய்து சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் நாடு முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிர மாநிலத் தைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுபாஷ் காசிநாத் மகா ஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சாதி துவேஷத்தை அதிகப்படுத்தவும் அப்பாவிகளை துன்புறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டம் கொண்டு வந்ததற் கான நோக்கம் இதுவல்ல என்று தெரிவித்தது.

மேலும், இனி இச்சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை கைது செய்ய வேண்டுமானால் அவரை நியமிக்கும் அதிகாரம் பெற்ற ஒருவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அரசு ஊழியர் அல் லாத ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், மூத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் அந்தஸ்து உள்ள அதிகாரி எழுத்து மூலம் காரணம் தெரிவித்து முன் அனுமதி தர வேண்டும். முதல் கட்ட விசாரணையை டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். இந்த கைது நடவடிக்கைகளை மாஜிஸ்திரேட் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கைது நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய அரசு சார் பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாக் கும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால் நாடு முழுவதும் போராட்டம், வன்முறை ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரினார். இந்த உத்தரவை பிறப்பித்த அதே அமர்வு பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட் டார்.

விசாரணைக்கு ஏற்பு

அதன்படி, நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. மத்திய அரசின் சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு உள்ளிட்டோரின் பதிலைப் பெற்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதேநேரம், கடந்த 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கொடுமைகள் தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகும் வகையில் எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். சாதி துவேஷம் அதிகமாகிறது. இதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்குதல் உள்ளிட்ட எந்த நடைமுறையிலும் மாற்றம் செய்யவில்லை.

குற்றவியல் சட்ட நடைமுறை யைப் பின்பற்றி கைது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உத்தரவை முழுமையாக படித்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்களை சிலர் வேண்டுமென்றே தவறான பாதையில் தூண்டி விட் டிருக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. பத்து நாட்கள் கழித்து இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x