Last Updated : 01 Feb, 2018 10:51 AM

 

Published : 01 Feb 2018 10:51 AM
Last Updated : 01 Feb 2018 10:51 AM

சுனாமியை வென்று தாயுமானவர்

சு

னாமி. 2004, டிசம்பர் 26-ஐ வாழ்க்கையில் மறக்க முடியாமல் செய்த பேரிடர். ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தில் தமிழக கடலோர கிராமங்களில் உயிரிழந்தோர், முடமாக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் என ஒரு நாட்டின் கணிசமான மக்களை நிர்மூலமாக்கிய பேரழிவு.

குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தினமும் சுனாமி பாப்புதான். மீண்டு வர முடியாமல் தவித்த ஏராளமான குழந்தைகளை நல்ல உள்ளம் படைத்த பலர் தத்தெடுத்து வளர்த்தனர்.

அப்படிப்பட்ட பாசக்காரர்தான் திருநெல்வேலி உஷாராமன். நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளியின் முதல்வர். சுனாமியின்போது பெற்றோரை இழந்து, இவரால் அரவணைக்கப்பட்ட குழந்தைகள் தற்போது உயர்கல்வி பயில்கின்றனர். பசியின்போது உணவிடுவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதே சிறந்தது என்ற சீனப் பழமொழிக்கு இலக்கணமாக திகழ்கிறார். உணவோடு சேர்த்து கல்வியையும் ஊட்டி வளர்க்கிறார்.

இதற்காக திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் 2004-ம் ஆண்டில்,`டிஎன்ஏ ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தை’ தொடங்கினார். சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 5 பேருக்கு அடைக்கலம் கொடுத்தார். தனது ஜெயேந்திரா பள்ளியில் பிளஸ் 2 வரை படிக்க வைத்தார். இவர்களில் 4 மாணவர்கள் தற்போது சென்னையிலும், தஞ்சாவூரிலும் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயில்கிறார்கள். ஒரு மாணவி பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் படிக்கிறார். இவர்களுக்கான அத்தனை செலவையும் உஷாராமனே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இப்போதும், இவர் நடத்திவரும் டிஎன்ஏ இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 20 பேர் உள்ளனர். இலங்கை புலம்பெயர்ந்தோர் முகாமில் படிக்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் இங்கு சேர்த்திருக்கிறார்.

``எந்த ஒரு நல்ல காரியத்தையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டால் ஆண்டவன் அருளால் அது வெற்றியடையும். அவ்வாறுதான் ஆதரவற்ற பிள்ளைகளை வளர்ப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது” என்றார்.

62 வயதை எட்டியுள்ள உஷாராமனின் ஒவ்வொரு பிறந்த நாளிலும், ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளியிலும், டிஎன்ஏ இல்லத்திலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர், விதைப்பந்துகளை உருவாக்கி நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும் விதைத்து பசுமை போர்வையை உருவாக்கி தங்கள் நன்றி கடனை செலுத்துகிறார்கள்.

எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் பாசத்தைக் காட்டி பெற்றோர் இல்லாத குறையை போக்கி குழந்தைகளுக்கு தாயுமாகி நிற்கும் உஷாராமன் முன்னால் சுனாமியே தோற்றுதான் போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x