Published : 25 Sep 2017 10:29 AM
Last Updated : 25 Sep 2017 10:29 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 10: மனதை ஒருமுகப்படுத்தும் விருட்சாசனம்

ங்கள் பிள்ளைகள் டாக்டர், இன்ஜினீயர், ஆசிரியர், விவசாயி, வங்கிப்பணி, ஐஏஎஸ் என்று ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் பலவிதமான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இருக்கும். பெற்றோரின் கனவோ, பிள்ளைகளின் எதிர்காலமோ, அதற்கு கல்விதான் அடிப்படை. அத்தகைய கல்வியில் குழந்தைகள் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்க எந்தவிதமான ஆசனங்களைச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

மனதை விழிப்புணர்வோடு வைத்துக்கொள்ளக்கூடிய ஆசனங்கள் அனைத்தையுமே குழந்தைகள் செய்யலாம். சமநிலைப்படுத்துகிற, பின்னால் வளைந்து செய்யக்கூடிய ஆசனங்கள் மிகவும் நல்லது. அதேபோல, தலையை கீழாகவும், கால்களை மேலாகவும் வைத்து செய்கிற ஆசனங்கள், தலைக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுத்து, கவனிப்பு திறனை அதிகரிக்கும்.

உடலை சமநிலைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிற வகையில் நவுகாசனம், விருட்சாசனம், தனுராசனம், தாடாசனம், சிரசாசனம், விபரீதகரணி முதலியவை மிக முக்கியமானவை. அதேபோல, பிராணாயாமத்தில், நாடி சுத்தி பிராணாயாமம், பிரம்மரி பிராணாயாமம், உஜ்ஜயி பிராணாயாமம் மிகவும் நல்லது. இதில் மிகவும் விசேஷமான விருட்சாசனம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

விருட்சம் என்றால் மரம். மரம்போல நிற்கும் நிலை என்பதால் விருட்சாசனம் என்ற பெயர். முதலில் கால்களை நேராக வைத்து, நன்கு நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர், மெதுவாக கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வதுபோல, மார்புக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதற்கு ‘நமஸ்கார முத்ரா’ என்று பெயர். இது முதல் நிலை.

பிறகு, கைகளை நமஸ்கார முத்ரா நிலையிலேயே உயர்த்தி, தலைக்கு மத்தியில், அதாவது உச்சந்தலையில் வைக்க வேண்டும். இதற்கு ‘கயிலாய முத்ரா’ என்று பெயர். இது 2-வது நிலை.

பிறகு, காதுகளை ஒட்டினாற்போல கைகளை நேராக மேலே உயர்த்தி, நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். இது ‘அஞ்சலி முத்ரா’ எனப்படும். இது 3-வது நிலை. ஒவ்வொரு நிலையிலும் 3 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கிவிட வேண்டும், அடுத்து, வலது காலை மடக்கி இதேபோல செய்ய வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.

தொடர்ந்து இந்த ஆசனம் செய்தால் கால்கள் நன்கு வலுப்பெறும். புஜங்கள் விரிவடையும். முக்கியமாக, மனதை ஒருநிலைப்படுத்த முடியும். விருட்சாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்த இந்த ஆசனம் உதவும்.

யோக நித்ரா

இப்போது தியானத்தில் சிறந்த ‘யோக நித்ரா’ பற்றி பார்க்கலாம்.

யோக நித்திரை என்பது சாந்தி ஆசனம் அல்லது சவாசன நிலையில் உடலை தளர்வாக வைத்து, மனதை ஒருமுகப்படுத்துவதாகும். காலில் இருந்து தலை வரை உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் மனதில் நிறுத்தி, நன்றாக ஆசுவாசப்படுத்தி சுவாசத்தை பொறுமையாக இழுத்துவிட வேண்டும்.

நமது நுரையீரலில் 60 ஆயிரம் நுண் அறைகள் உள்ளன. நாம் இழுக்கும் ஆக்சிஜன் அத்தனை நுண் அறைகளுக்கும் போதாது. அதனால் எவ்வளவு பொறுமையாக காற்றை உள்ளே இழுக்க முடியுமோ இழுத்து. பொறுமையாக வெளியே விட வேண்டும்.

இதைப் பயிற்சி செய்யும்போது நம்முடைய ஆக்சிஜன் அளவு அதிகமாகி, ரத்த ஓட்டம் சீராகும். உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் பரவும்போது நமக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x