

மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் மொபைல் செயலிகள் மூலமாகப் பல கோடி ரூபாய் நிதி மோசடி அண்மையில் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நிதி நிறுவன மோசடிகள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் புது வடிவம் எடுத்திருக்கும் சூழலில் அரசு, மக்கள் தரப்பில் இது குறித்த போதுமான நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு சார்ந்து பற்றாக்குறை நிலவுவதையே இது வெளிப்படுத்துகிறது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் FQL, VG TRADING உள்ளிட்ட செயலிகள் மூலமாக, ஆயிரக்கணக்கானோரிடம் முகவர்கள் வழியே தலா ரூ. 50,000 முதல் 1.5 லட்சம்வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் மொபைலில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யவைத்து, அமெரிக்க டாலர் மதிப்பில் ‘பிட்காயின்’களாக அந்தத் தொகை வரவு வைக்கப்படும் எனக் கூறப்பட்டது. தொடக்கத்தில், அவ்வாறு பணத்தைக் கொடுத்தவர்களில் சிலருக்கு இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்பட்டிருக்கிறது.