

உலக விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 23ஆவது ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் வட அமெரிக்கக் கண்டத்தில் இன்று (ஜூன் 11) தொடங்குகிறது. உலகில் பல நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போட்டி மக்களை இணைத்து அவர்களின் மன இறுக்கத்தைக் குறைக்கும் என்று நம்பலாம்.
உலக விளையாட்டுத் திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு உலக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு அணுகுவது ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரைத்தான்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரை இந்த முறை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. முதல் முறையாக மூன்று நாடுகள் கூட்டாக இத்தொடரை நடத்துவது அரிதான நிகழ்வு. வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள 16 மைதானங்களில் இத்தொடர் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது.
இதற்கு முன்புவரை 32 அணிகளே பங்கேற்று வந்த நிலையில், இந்த முறை 48 அணிகள் பங்கேற்பது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு நான்கு நாடுகளுக்கு ஏறக்குறைய ஒரு நாடு என்கிற வீதத்தில் இத்தொடரில் அணிகள் பங்கேற்கின்றன.