குடிமைப் பணித் தேர்வில் தமிழக மாணவர்களின் கொடி உயரட்டும்!
2024இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வை இந்திய அளவில் 5.83 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில், 1,009 பேர் (2.5%) முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வில் தமிழகம் எதிர்பார்த்த அளவில் சோபிக்காத நிலையில், இந்த முறை நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.
அரசின் திட்டங்கள் / கொள்கைகள் உருவாக்கத்திலும் அமல்படுத்தலிலும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு பிரதானமானது. 1960கள் தொடங்கிப் பல பத்தாண்டுகளாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குடிமைப் பணி அதிகாரிகளாகக் கோலோச்சினர். எனினும், கடந்த சில ஆண்டுகளில் நிலவரம் மாறிவிட்டது. 2014இல் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 11% தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 2017இல் இது 7% ஆகவும், 2019இல் 6.69% ஆகவும் குறைந்தது. 2020இல் 5% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2023இல் குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் முதன்மையான மாணவராகத் தேர்வானவர், தேசிய அளவில் 107ஆவது இடத்தில்தான் இருந்தார். உயர் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதத்தில் (ஜிஇஆர்) இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையான இடத்தில் இருந்தும், குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது கவலை அளிக்கும் விஷயமாக நீடித்தது.
