

முந்தைய ‘ஐயம் தொட்டு எண்’ கட்டுரை குறித்துச் சித்த மருத்துவர் சித்திரா ஒரு மடல் எழுதியிருந்தார். வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகிய மூன்று நாடிகளை நோய் அறிவதில் முதன்மையாகக் கொண்டு இயங்கும் சித்த மருத்துவத்தில், ‘ஐயம் மிகுந்தால் மரணம்’ என்று மருத்துவ நூல்கள் உரைப்பதையும், ஐயத்துக்கு ‘யாத்திரை நாடி’ என்றொரு பெயர் இருப்பதையும் அதில் சுட்டிக்காட்டி இருந்தார்.
யாத்திரை என்பது ஒருவேளை கடைசி யாத்திரையோ? மூப்பில் ஐயநாடி மேலிடும்போது கடுமையாகச் சளி கட்டும்; கட்டினால் ‘பொட்டிசட்டி’களைக் கட்டிக்கொண்டு யாத்திரை நாடிக் கிளம்ப வேண்டியதுதான்.
தேரையர் மருத்துவ பாரதம் நூலில் இப்பாட்டு சித்த மருத்துவத்தில் முதன்மைப் பாடம்: வாதமாய்ப் படைத்துப் பித்த / வன்னியாய்க் காத்துச் சேட்பச் / சீதமாய்த் துடைத்துப் பாராம் / தேகத்தில் குடியாம் ஐந்து / பூதஇந் தியமாம் ஐவர் / பூசைகொண்டு அவர்பால் விந்து / நாதமாம் கிருட்டிண மூர்த்தி / நமக்குஎன்றும் துணைஆ வாரே.
உடம்பையும் பொருள்சார்ந்த எல்லாவற்றையும் பொய் என்று கருதும் மரபுகள் இடையே, தமிழ்மரபும், அதன்வழி வந்த சித்தர் மெய்யியலும், அதைச் சார்ந்து நிற்கும் சித்த மருத்துவமும், உடம்பை மெய் என்று அறுதி இடுகின்றன. சட்டி உடைந்தால் அதில் நீர் தங்க முடியாததுபோலவே உடம்பு உடைந்தால், அதில் உயிர் தங்க முடியாது. ஆகவே உயிரை வளர்க்க நினைப்பவர்களுக்கும்கூட உடலை வளர்ப்பது முதன்மையாகிவிடுகிறது.
உடல் என்பது உலகிலிருந்து வேறானது அன்று; ‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்’ என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கருதுகோள். அண்டம் உலகு; பிண்டம் உடல். அண்டத்தை ஆக்கிய ஐம்பூதத்து இயற்கையே பிண்டத்தையும் ஆக்கியிருக்கிறது. உடல் நிலைபெற்று இயங்க அதில் படைத்தலும் காத்தலும் அழித்தலும் நிகழ வேண்டும்.