

எனது பேராசிரியர் ராதாகிருட்டிணன் யோகப் பயிற்சியில் சிறந்தவர். ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்று உடம்பைப் புகழ்ந்தால் மட்டும் போதாது, போற்றிச் செய்யவும் வேண்டும்’ என்று உடம்பை முன்னிலைப்படுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பார். திருவண்ணாமலையைச் சுற்றி நடக்கப் பழக்கினார். பிறகு, சென்னையிலிருந்து திருவள்ளூர் வரை நடக்கலாம் என்று கிளப்பினார். 50 கிலோமீட்டர்.
காலை ஆறுக்குக் கிளம்பி மாலை நான்குக்குச் சென்றடைந்தோம். நடைவழிச் சிற்றூர்களில் எங்களைப் பார்த்தவர்கள், ‘ஐயா திருத்தணிக்கா?’ என்று கும்பிட்டார்கள். ‘தெம்பில்லை, திருவள்ளூருக்குத்தான்’ என்றபோதும் கும்பிட்டார்கள்.
என் மனைவி தைப்பூசத்துக்கு பழனிக்குக் காவடி எடுக்கும் குடும்பத்தினர். தானும் பழனிக்கு நடந்து பழகியவர். பழனிக்கு நடக்க அமையாதபோது, புதிதாக எழுந்துவந்த சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு நடந்தவர்.
சின்னம்பேடாக இருந்து, புகழ் ஓங்கியபோது சிறுவரம்பேடாகிப் பின் சிறுவாபுரியாக நிலைஉயர்ந்த ஊருக்குச் சாமி கும்பிடப் போகும்போதெல்லாம், ‘இது நாங்கள் ஓய்வெடுத்த வாழைத்தோப்பு’, ‘அது நாங்கள் குளித்தெழுந்த பம்புசெட்டு’ என்று நினைவுகூர்ந்துகொண்டே வருவார். அவையெல்லாம் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், சென்னைக்கு மிக அருகில் உள்ள மனைக்கட்டுகள்.
சிறுவாபுரிக்கும் நடை அமையாதபோது, இன்னும் புதிதாக எழுந்துவந்த பெசன்ட் நகர் அறுபடை வீட்டு முருகன் கோயிலுக்காவது நடக்க விரும்பி என்னையும் இழுத்தார். 14 கிலோமீட்டர். பாரம் மிகுதியால் வண்டியின் பார்ச்சட்டம் மாட்டின் கழுத்தை அழுத்த, வண்டிச் சக்கரங்கள் வரிமணலில் அழுந்திப் புதைய, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மணல் நெறிபட, கற்கள் பொடிபட எங்கேயென்றாலும் நடக்குமாம் பெருமைக்கார மாடு.
‘அச்சொடு தாக்கிப் பார்உற்று இயங்கிய / பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய / விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும் / பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?’ (புறநானூறு 90) இவ்வாறு காட்சியை விரித்து, ‘எதிரிகளைத் தெறிக்கவிடுகிறவன் ஆயிற்றே நீ?’ என்று அதியமானை ஊக்குவிக்கிறாள் சங்கத்தமிழ் ஔவை.