

சங்க காலத்திலிருந்தே விளக்கேற்றுதல் சிறப்புக்குரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கண்சிமிட்டும் விளக்கேற்றல் காட்சிகள் அந்நாளைய சமூகம் அதற்கு எத்தனை முதன்மை அளித்திருந்தது என்பதைச் சுட்டுகின்றன. குளத்தில் மூழ்கித் தூய்மை பெற்ற பிறகே மகளிர் இறையகத்தில் விளக்கேற்றியதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.
நந்தாவிளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு எனச் சங்கம் சுட்டும் விளக்கு வகைகள் பத்திமைக் காலத்தில் பலவாய்ப் பெருகின. விளக்கேற்றலை அருஞ்செயலாய்ப்போற்றும் அப்பர் பெருமான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்புகள் ஆற்றக்கூடிய பணிகளைப் பேசுமிடத்தில், ஒளி உமிழும் விளக்குகளை இயன்றபோதெல்லாம் ஏற்றுவதே விரல்கள் பெற்றதன் பயன் என்கிறார். இவ்விளக்கேற்றும் பணி பல்லவ, பாண்டிய, சோழர் காலத்தில் ஓர் அறமாகவே கைக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் பெரும்பாலனவை விளக்கேற்றல் பற்றியே பேசுகின்றன.
அக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்த விளக்குகளின் வகைகள், அவை ஏற்றப்பட்ட முறை, விளக்கேற்றலின் நோக்கம், அதற்கெனத் தரப்பட்ட கொடை வகைகள், அதையொற்றி உருவான அறக்கட்டளைகள், அவை செயற்பட்ட ஒழுங்கு - தணிக்கை செய்யப்பட்ட பாங்கு, கொடையாளர்களின் விளக்கேற்றல் தொடர்பான விழைவுகள் என இச்செயல் சமுதாயத்தின் பல்வேறு நம்பிக்கைகள், நடைமுறைகள், ஒழுகலாறுகள் குறித்த வரலாற்று விளக்கமாக விளங்கியதைக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன.