

அண்மையில் வெளியான 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, பல புதிய அணுகுமுறைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, நகரமயமாதலை (Urbanisation) வேகப்படுத்தும் நோக்கத்துடன் சில ஊக்குவிப்புக் கருத்துகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நகரமயமாதல் குறித்த அளவுகடந்த அக்கறை, சமநிலையற்ற வளர்ச்சிக்கான பாதையாக மாறிவிடுமோ என்கிற கேள்விக்கு வழிவகுத்திருக்கிறது.
விரிவடைந்த பணிகள்
அரசமைப்புச் சட்டக்கூறு 280இன் கீழ், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படும் நிதி ஆணையம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அமைப்பு.
1993இல் மேற்கொள்ளப்பட்ட 73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு, இந்த ஆணையத்தின் பங்கு கணிசமாக விரிவடைந்தது. மாநில அரசுகளுக்கு மட்டுமன்றி, ஊரக உள்ளாட்சிகள் (Rural Local Governments), நகர்ப்புற உள்ளாட்சிகள் (Urban Local Governments) ஆகியவற்றுக்கும் எவ்வாறு நிதிப் பகிர்வு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உண்டு.
அந்தந்த மாநில நிதி ஆணையங்களின் (State finance commission) பரிந்துரைகளின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் அவற்றின் வளங்களை நிரப்ப ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
நகரமயமாதலுக்கு முக்கியத்துவம்
ஒவ்வொரு நிதி ஆணையமும் பரிந்துரைகளுக்கு முன்னால் தனது அணுகுமுறையை (Approach) விளக்கும். 16ஆவது நிதி ஆணையம் முதன்முறையாக நகரமயமாதலைத் தனித்துவமாகக் குறிப்பிட்டுள்ளது. ‘வேகமான நகரமயமாதல் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகச் செயல்படும்’ என ஆணையம் கருதுகிறது.
ஆனால், இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் சமூக-அரசியல் சூழல்களை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட பார்வையைத் தந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.
நகர வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுமே தொடர்புடையது அல்ல; அது சமூகச் சமத்துவம், மக்கள் பங்கேற்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய பல பரிமாணங்களைக் கொண்டது.
இவற்றைத் தவிர்த்துவிட்டு நகரமயமாதலை மட்டும் முதன்மையான இயக்கும் காரணியாகப் பார்ப்பது, உள்ளடக்கிய வளர்ச்சி (inclusive development) நோக்கத்துக்கு முழுமையாகப் பொருந்தாது.
தரவின் தரம்
10ஆவது நிதி ஆணையம் முதல் தற்போதுவரை, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதிப் பங்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனால், இந்த உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் தரவுகளின் தரம் என்ன? அதே 16ஆவது நிதி ஆணைய அறிக்கையிலேயே, உள்ளாட்சிகளுக்கான நிதித் தரவுகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் இறுதிவரை நீடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.