

உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை முன்னிலை வகித்துவந்த சீனாவை விஞ்சி இந்தியா சாதனை படைத்திருப்பது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்க வேளாண் துறை (USDA) கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையின்படி 2025இல் இந்தியா 15.2 கோடி மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்திருக்கிறது.
உலக அளவில் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவில் இது 28%. 14.6 கோடி மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்திருக்கும் சீனா இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 172 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா எட்டியிருக்கிறது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது அரிசி முக்கிய அங்கம் வகிக்கிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.4,50,840 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்களை அயல்நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. இதில் 24% பாசுமதி உள்ளிட்ட அரிசி ரகங்கள் மட்டுமே.
இவை தவிர்த்த பல்வேறு ரக அரிசிகளின் விற்பனை மூலம் கடந்த ஓராண்டில் இந்தியா ரூ.1,05,720 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியை ஈட்டியது. ஆகவே இந்தியப் பொருளாதாரத்துக்கு மதிப்புக் கூட்டும் இடத்தை அரிசி அடைந்திருக்கிறது.
சாதனைக்குச் சொந்தக்காரர்கள்: இவ்வளவுக்கும் பருவம் தவறிய மழைப் பொழிவு, கடுமையான வெப்பஅலைத் தாக்கம், பெருத்த சேதம் ஏற்படுத்திச் சென்ற புயல்கள் போன்ற சவால்களை இந்தியா கடந்த ஆண்டில் எதிர்கொள்ள நேரிட்டது. எதிர்பாராத காலநிலை மாற்ற நிகழ்வுகளால் 1.74 கோடி ஹெக்டேர் பரப்புப் பயிர்கள் சேதமடைந்தன. கிராமப்புற விவசாயக் கூலிகளின், குறிப்பாகப் பெண் விவசாயிகளின் வேளாண் பணிச்சுமை பன்மடங்கு அதிகரித்தது.