

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நேசித்த ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் சூளாமணி விகாரமும் ஆனைமங்கலக் கிராமமும் நன்கு அறிமுகம் ஆகியிருக்கும். அதற்கான வரலாற்றுச் சின்னங்களான செப்பேடுகள் அயல்நாட்டு அருங்காட்சியகத்தில் இதுவரை உறங்கிக்கொண்டிருந்தன.
3 நூற்றாண்டுகளின் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு, அவை அண்மையில் தாய்மண்ணைத் தொட்டிருக்கின்றன. 2026 மே 16-ம் தேதி நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த மீளளிப்பு விழாவில், அந்த நாட்டு பிரதமர் ராப் ஜெட்டன், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்புத் தகடுகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி ஒப்படைத்தார். கடந்த 2012 முதல் 14 ஆண்டுகளாகத் தொடர்ந்த முயற்சி இது.
ஒரு நாகரிகத்தின் கண்ணாடி: இவை ஒரு பேரரசின் நினைவுத் திரட்சி. 30 கிலோ எடையுள்ள 21 பெருந்தகடுகளும், பிற்காலத்தில் இணைந்த 3 சிறுதகடுகளுமான இச்செப்பேடுகள் சோழ அரச முத்திரையைச் சுமந்து நிற்கின்றன.
வடமொழி ஏடுகள் சோழ மரபின் வழிவழி வரலாற்றைப் பாடினால், தமிழ் ஏடுகள் நிலஅளவை முறையையும், நிர்வாகச் சொல்லாடலையும், சட்டப்பூர்வ ஆவண மரபையும் பதிவுசெய்கின்றன. ராஜராஜனின் புகழ்பெற்ற மெய்க்கீர்த்தி, மன்னர்களின் வழிவழிப் பட்டியல், ஆட்சி அதிகாரிகளின் விவரங்கள், வென்ற நாடுகளின் குறிப்புகள் - ஒரே ஆவணத்தில் இரு மொழிகள் தோளோடு தோள் நிற்பது என ஒரு நாகரிகத்தின் திறந்த மனதைக் காட்டும் கண்ணாடி.
சமயப் பொறையும் பன்முகப் பண்பாடும்: கிபி 1005-ல், முதலாம் ராஜராஜ சோழனின் 21-வது ஆட்சியாண்டில், ஸ்ரீவிஜயப் பேரரசைச் சேர்ந்த மாறவிஜயோத்துங்க வர்மன், நாகப்பட்டினத்தில் சூளாமணி வர்ம விகாரத்தை எழுப்பினார். அதை ஆதரித்த சைவ சமயத்தைச் சார்ந்த ராஜராஜ சோழன், ஆனைமங்கலம் என்ற முழுக் கிராமத்தையே பள்ளிச்சந்தமாக வழங்கினார். வேற்றுச் சமயத்தின் வழிபாட்டிடத்துக்கு ஒரு மன்னர் ஊரையே தானமாக அளித்த அந்தச் செயல், தமிழ் மன்னர்களின் சமயப் பொறையையும், இந்த மண்ணின் பன்முகப் பண்பாட்டையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தில் நிறுத்தியதற்கான சான்று.
ராஜராஜ சோழன் மகன் முதலாம் ராஜேந்திர சோழன் தந்தையின் சொல்லைச் செம்பில் பொறித்து நிலையான ஆவணமாக்கினார். இந்த ஆவணங்கள், டச்சு ஆதிக்கக் காலமான 18-ம் நூற்றாண்டில், ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நாகையில் இருந்து நெதர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பல கைமாறி, 1862-ல் லெய்டன் பல்கலை. அருங்காட்சியகத்தை அடைந்தன.
வரலாற்றுக்கு முழு மரியாதை: தற்போது செப்பேடுகள் இந்தியா திரும்பியது பெருமகிழ்ச்சி. பண்பாட்டுச் செல்வங்களைத் தாய்நாடுகளுக்குத் திருப்பும் உலகளாவிய அறமுயற்சியின் ஒரு பகுதியே இந்த மீளளிப்பு. அதேநேரம், இந்தச் செப்பேடுகள் அவற்றின் வரலாற்றுத் தாயகமான நாகைக்கே திரும்ப வேண்டும்.
ராஜராஜன் வாழ்ந்த வரலாறு, ராஜேந்திரன் ஆவணப்படுத்திய வரலாறு, மாறவிஜயோத்துங்க வர்மன் எழுப்பிய விகாரம், சோழர் கடல் வணிகம் - இவை அனைத்தும் நேரடியாக நாகையோடு பிணைந்தவை. ஆவணத்தை அதன் சொந்த மண்ணுக்குத் திருப்புவதே, வரலாற்றுக்குச் செலுத்தப்படும் முழுமையான மரியாதை.
மற்றொரு பணியாக, நாகப்பட்டினத்தில் சோழர் வரலாற்றையும், கடல்சார் மரபையும், பவுத்த - சைவ நல்லிணக்கத்தையும், தமிழரின் பன்னாட்டுத் தொடர்புகளையும் எடுத்துரைக்கும் ஒரு நவீன அருங்காட்சியகம் எழ வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பொதுமக்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் நேரில் கண்டு வியக்கும் வகையில், இந்த செப்பேடுகளை நாகையில் நிலையாகக் காட்சிப்படுத்த வேண்டும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவந்த இந்த சின்னங்கள், இனிவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தாய்மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும்.
- பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், நாகை சட்டப்பேரவை உறுப்பினர்.