Published : 19 Sep 2017 10:19 AM
Last Updated : 19 Sep 2017 10:19 AM

ஒரு நிமிடக் கட்டுரை: ஏன் டெங்குவை ஒழிக்க முடியவில்லை?

மருத்துவத்தில் இந்தியா பல்வேறு வகையான புதிய முன்மாதிரிகளை உலக அரங்கில் நிகழ்த்தியிருக்கிறது. கல்லீரலை மாற்றிவிட முடியும் இங்கே. இதயத்தைக்கூட மாற்றிவிட முடியும் இங்கே. மனித உடலில் எந்தவொரு உறுப்பையும் ஒருவரிடம் இருந்து வெட்டி இன்னொருத்தருக்குப் பொருத்திவிட முடியும். அதே சமயம், அடிப்படையான விஷயங்களில் பல சமயம் அது கோட்டை விடுகிறது.

கடந்த வாரம் நடந்த ஒரு மரணம் இதைத் தான் நிரூபிக்கிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா வின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜா மும்பை யில் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருக்கிறார். இறக்கும்போது அவருடைய வயது முப்பத்துச் சொச்சம். சத்யா நாதெல்லா, இந்திரா நூயி ஆகியோருக்கு முன்பாகவே 100 மில்லி யன் டாலரை ஆண்டுச் சம்பளமாகப் பெற்றவர் இவர். டெங்கு காரணமாக இவரைப் போலவே பலர் உயிரை விட்டிருக்கின்றனர். அவர்களில் கோடீஸ்வரர்களும் அடக்கம். சாமானியர்களும் அடக்கம்.

90-களில் போலியோ மிகப் பெரிய பிரச்சினை யாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் போலியோவை ஒழித்து விட்டோம் என்று வெற்றிமுழக்கமிட்டோம். ஆனால், கொசுவை ஒழித்துவிட்டோம் என்று நம்மால் ஏன் அறைகூவல் விடுக்க முடியவில்லை? பல லட்சம் கோடிகளைச் செலவழித்தும் ஏன் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை?

கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் டெங்கு மற்றும் மலேரியா காரணமான மரணங் கள் வந்துகொண்டே இருக்கின்றன. விஷக் காய்ச்சலுக்குச் சிறுமி பலி என ஒரு வார்த்தை யில் கடந்துபோக முடியவில்லை. பழனியில் கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் விஷக் காய்ச்சலால் செத்திருக்கிறார்கள். டெங்கு என்று அதைக் கட்டம் கட்டிவிட முடியாது என்பதும் புரிகிறது. உண்மையில், இது மிகப் பெரிய பிரச்சினை. நான் வியாபாரம் செய்த தைமூர் நாடு, இந்தப் பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதை ஒழிக்கக் கடுமையான திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதையும் கண்கூடாகப் பார்த்தேன். இயல்பாகவே அந்த நாட்டு மக்கள் தங்களுடைய உணவில் பப்பாளி இலைகளைப் பயன்படுத்துவார்கள். பப்பாளிக் கீரை டெங்கு மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயல்படும் என்பது மருத்துவப் புரிதல். அந்த நாடு அதைத் தாண்டி கொசுவை ஒழிக்க வேண்டும் என இதய சுத்தியோடு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது? இந்திய மருத்துவத் துறையைச் சீரமைக்கப் போகிறோம் என்று சொல்லி, நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால், சாதாரண கொசுவை ஒழிக்கும் விஷயத்தில் கூட இந்த 70 ஆண்டுகளில் எந்த மைல்கல்லை யும் எட்டவில்லை என்பதை யோசிக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x