Published : 20 Jul 2015 10:06 AM
Last Updated : 20 Jul 2015 10:06 AM

பாலாறு: நிலத்துக்குள் பாயும் ஆறு

நந்திதுர்கத்தின் உச்சியில் இருந்து சமதளத்துக்கு வந்திறங்கும் பாலாறு, கர்நாடக மாநிலத்தின் சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டங்களை ஒரு காலத்தில் வளமாக்கியுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களின் 2,813 சதுர கி.மீ. பரப்பளவு பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக கருதப்படுகிறது. இங்கு பெய்யும் மழையே பாலாறாக உருவெடுத்ததாக பொறியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

நந்திதுர்கத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு வரை பாலாறு என்ற ஒரு நதியின் அடையாளத்தை எங்குமே பார்க்க முடியவில்லை. கோலார் மாவட்டத்தில் இருக்கும் தலகவரா என்ற இடமே பாலாற்றின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. நந்திதுர்கத்தில் இருந்து குப்தகாமினியாய் நிலத்துக்கு அடியில் பாய்ந்து தலகவராவில் பூமிக்கு வெளியே பாய்வதாக கூறுகிறார்கள். (150 ஆண்டுகளுக்கு முன்பு நந்திதுர்கத்தில் இருந்து பாலாறு ஓடும் பாதையில் அடுக்கடுக்கான ஏரிகள் கட்டியதால் அவை ஆறுக்கான அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது)

வறட்சியின் பிடியில் சிக்பெல்லாபூர்

6 நதிகளின் ஊற்றாகவும், குப்தகாமினியாய் பாயும் பாலாற்றை தன்னிடத்தே உள்ளடக்கிய சிக்கபெல்லாபூர் மாவட்டம் 4,208 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பட்டுக்கும், பாலுக்கும் பெயர்போன இந்த மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பருவமழை தட்டுப்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதித்துள்ளது. ஆயிரம் அடிக்கு கீழ்தான் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடிகிறது.

சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர் நாடியாக இருந்த 1,243 ஏரிகளில் பெரும்பாலானவை இன்று வறண்டுவிட்டன. ஆண்டின் சராசரி மழையளவு 676 முதல் 848 மி.மீ. ஆக உள்ளது. வற்றாத கால்வாய் பாசனத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகள் இன்று ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

சொட்டு நீர் பாசனத்தில் நிமிர்ந்த விவசாயம்

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இவர்கள், கிடைக்கின்ற கொஞ்சம் நிலத்தடி நீரையும் சொட்டு நீர் பாசனம் செய்து விவசாயத்தை பாதுகாக்கிறார்கள். மழைக் காலத்தில் மட்டுமே நந்திதுர்கத்தை சுற்றியிருக்கும் பகுதிகளை பசுமையாக பார்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். சொட்டு நீர் பாசனத்தின் உதவி யுடன் ரோஜா, தக்காளி, மல்பெரி, முட்டைக் கோஸ், சாமந்திப்பூ, பப்பாளி, திராட்சை தோட்டங் களை உயிர்ப்பிக்கிறார்கள். தண்ணீர் கிடைத்தால் விவசாயம், இல்லாவிட்டால் தைல மரக் கன்றுகளை நட்டுவிடுகிறார்கள். வறண்ட பூமியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தைலமரத் தோப்புகள் தென்படுகின்றன.

குடும்ப உழைப்பே மூலதனம்

சேகர்

நந்திதுர்கம் மலைக்கு செல்லும் வழியில் இருக்கிறது தொட்டமார ஹல்லி கிராமம். பச்சை திராட்சை தோட்டங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. கடுமையான வறட்சியிலும் திராட்சை தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திராட்சை தோட்ட பராமரிப்பில் இருந்த இளைஞர் சேகர் கூறும்போது, ‘‘20 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் திராட்சைத் தோட்டத்தை பராமரிக்கிறார்கள். 1,200 அடி ஆழத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான் இந்த திராட்சை தோட்டத்துக்கு உயிராக இருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நந்திதுர்கம் மலை இருந்தாலும் இங்கிருக்கும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. கொஞ்சம் பெய்கின்ற மழையும் இல்லாவிட்டால் விவசாயிகள் கஷ்டப்பட வேண்டி இருக்கும்’’ என்றார்.

வறட்சிக்கு வித்திட்ட யூகலிப்டஸ்?

மிர்டேசிய என்ற தாவர வகையான யூகலிப்டஸ் எனப்படும் தைல மரம் ஆஸ்திரேலிய நாட்டை பூர்வீமாகக் கொண்டது. இந்தியாவில் 1843-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் எரிபொருள் பயன்பாட்டுக்காக பயிரிடப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பிற்காலத்தில் காகித தொழிற்சாலையின் முக்கிய மூலப்பொருளாக மாறியது. மிகக் குறைந்த ஈரப் பதத்திலும் வளரும் தன்மைக்கொண்ட யூகலிப்டஸ் மரம் சுமார் 330 முதல் 1,500 மி.மீ மழையளவுள்ள பகுதியில் செழிப்புடன் வளரும். தினமும் 8 மணி நேரம் நீரை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது. அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சி தன்னை வேகமாக வளர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

விவசாயிகளுக்கு குறைந்த முதலீட்டில் அதிக பயன் கொடுக்கும் என்பதால் வறட்சியால் பாதித்துள்ள சிக்பெல்லாபூர் விவசாயிகளுக்கு யூகலிப்டஸ் வரப்பிரசாதகமாக இருக்கிறது. 6 நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான சிக்பெல்லாபூர் மாவட்டத்தின் பெரும்பகுதி நிலத்தடி நீரை யூகலிப்டஸ் மரங்கள் உறிஞ்சியதால், பருவ மழைக்கான இயற்கை காரணிகளை இது சிதைத்ததாகக் கூறப்படுகிறது. யூகலிப்டஸ் மரங்கள்தான் பருவமழை குறைபாட்டுக்கும் காரணம் என்பது அவர்களின் கருத்து.

அமிர்த சரோவர் குளம்

திப்பு சுல்தான் தங்கும் விடுதிக்கு நேர் எதிரே இருக்கிறது அமிர்த சரோவர் குளம். 1936-ம் ஆண்டு மைசூர் திவான் மிர்சா இஸ்மாயில் காலத்தில் அமிர்த சரோவர் குளம் கட்டப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த பூந்தோட்டத்துக்கு நடுவில் பிரம்மாண்டமாக இருக்கிறது இந்த அமிர்த சரோவர். இதில் 50 அடி ஆழம் வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். குளத்தின் தண்ணீர் பனித்துளியைப் போலவும், சுவையாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு.

பாலாறு பயணிக்கும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x