Last Updated : 01 Apr, 2019 08:04 AM

 

Published : 01 Apr 2019 08:04 AM
Last Updated : 01 Apr 2019 08:04 AM

இந்திரஜித் குப்தா: சிறந்த நாடாளுமன்றவாதி!

தேவ கவுடா தலைமையிலான கூட்டணி அரசில் உள் துறை அமைச்சராக அந்தத் தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டபோது பல்வேறு தரப்பிலிருந்து ஆச்சரியக் குறிகள் எழுந்தன. எந்த அமைச்சகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மூன்று முறை தடை செய்ததோ, பல்வேறு இடதுசாரித் தலைவர்களை (அந்தத் தலைவர் உட்பட!) கைதுசெய்து சிறையில் தள்ளியதோ – அதே அமைச்சகத்துக்கு அவர் பொறுப்பேற்றதுதான் அந்த ஆச்சரியத்துக்குக் காரணம். அந்தத் தலைவர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா.

1919 மார்ச் 18-ல் கொல்கத்தாவில் பிறந்தவரான இந்திரஜித் குப்தா, டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, கேம்ப்ரிட்ஜின் கிங்ஸ் கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர். அவரது குடும்பத்தினரில் பலர் அரசில் உயர் பதவிகளை வகித்தவர்கள். பிரிட்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரஜனி பால்மே தத்தின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இடதுசாரிக் கொள்கைகளில் ஆர்வம் பிறந்தது. 1938-ல் கொல்கத்தா திரும்பியதும் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1960-ல் கொல்கத்தா தென் மேற்கு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். 1977 தேர்தல் தவிர, தான் போட்டியிட்ட மற்ற எல்லா தேர்தல்களிலும் வென்றார். 2001-ல் இறக்கும்வரை, 37 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1980-90-ல் ஏஐடியூசியின் பொதுச்செயலாளராக இருந்தார். உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். மிக எளிமையானவர். அமைச்சர் பதவியேற்கும் வரை, அன்றாடம் நாடாளுமன்றத்துக்கு நடந்தே சென்றுவருவார். 1992-ல், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டிலால் சிறந்த நாடாளுமன்றவாதி விருது தொடங்கிவைக்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திரஜித் குப்தாதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x