Published : 04 Feb 2019 09:05 AM
Last Updated : 04 Feb 2019 09:05 AM
தமிழகத்தின் சமகால முதன்மை ஆய்வறிஞர்களில் ஒருவரான ஆ.இரா.வேங்கடாசலபதியின் பங்களிப்புகளைப் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் வருகின்ற பிப்.8 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் பிப்.9 அன்று தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கிலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வே.வசந்திதேவி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர குஹா, ஸ்ரீநாத் ராகவன், நிர்மலா லட்சுமணன். டி.எம்.கிருஷ்ணா, முகம் மாமணி என்று முன்னணி ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டு சலபதியின் ஆய்வுலகப் பங்களிப்புகளைப் பற்றி உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வை காலச்சுவடு பதிப்பகம் , தி இந்து ‘லிட் ஃபார் லைப்’ மற்றும் கடவு இலக்கிய அமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கர்நாடக மாநிலத்தின் கனககிரி என்ற ஊரில் மேனிலைப் பள்ளி அருகில் சிற்றுண்டி விடுதி நடத்தும் மல்லம்மா, பள்ளி மாணவர்களின் அன்னபூரணி. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு தவிப்பதைப் பார்த்து அவர்களை அழைத்து சிற்றுண்டி வழங்குகிறார்; கையில் பணம் கிடைக்கும்போது கிடைத்தால் போதும் என்று அனுப்பிவைக்கிறார். சாம்பார், சட்னியுடன் இட்லி, உப்புமா ஆகியவற்றை இந்தக் காலத்திலும் ஐந்து ரூபாய்க்குத் தருகிறார். உப்புமா மூன்று ரூபாய்தான். புலாவ் மட்டும் பத்து ரூபாய். விலைதான் குறைவே தவிர தரத்திலும் சுவையிலும் அதிகமாக இருப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்களுக்கு இவருடைய கடையே புகலிடம். பல மாணவர்கள் வாரக்கணக்காகப் பணம் தரத் தாமதமானாலும் மல்லம்மா வழியில் நிறுத்திக் கேட்கமாட்டார். சிற்றுண்டி விடுதியில் கிடைத்த வருமானத்தில் 2 மகன்களையும் 2 மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்துவைத்த மல்லம்மா, சிறிய வீட்டையும் சொந்தமாகக் கட்டிக் கொண்டிருக்கிறார். கனககிரி பள்ளியில் படித்து பெரியவர்களாகி அரசு வேலையில் அமர்ந்த பழைய மாணவர்கள், மல்லம்மாவை தங்களுடைய அலுவலகம் அருகில் பார்த்தால் ஓடிச் சென்று நலம் விசாரிப்பதுடன் தேவைப்படும் உதவிகளைத் தாங்களே முன்னின்று செய்து தருகின்றனர். தங்களுடைய வீடுகளுக்கு வரவழைத்து விருந்து பரிமாறி, புடவை வாங்கித் தந்து நன்றிக் கடன் செலுத்துகின்றனர்.
கனோஜ் நகரத்தில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதல், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வம்புக்கு இழுத்திருக்கிறார். ‘அவர் சாமியார்... அவருக்கு லேப்டாப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அவரிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்’ என்று பேசியிருக்கிறார் அகிலேஷ். தமிழகத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி
2013-ல் தொடங்கிவைத்தது. மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் அகிலேஷுக்கு மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுத்தந்த திட்டம் அது. ஆதித்யநாத் முதல்வரானதும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் சுணங்கிக் கிடக்கிறது. அதைத்தான் இப்படி கிண்டலடித்திருக்கிறார் அகிலேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT