

‘புதுடில்லியில் எல்லாத் தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டும்’, ‘ரேபிஸ் தொற்று (வெறிநோய்) அல்லது எளிதில் தாக்கும் இயல்பு கொண்ட நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்தால் போதும்’ - இப்படி எதிரும் புதிருமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்த வழக்கு, தெரு நாய்களின் மிகையான பெருக்கத்தை நாடு முழுவதுமே விவாதப்பொருள் ஆக்கியது. தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற மக்களின் நீண்ட கால முறையீட்டை மத்திய, மாநில அரசுகள் இனியும் புறந்தள்ள முடியாது என்கிற நிலையை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
கருத்தடையை முன்னிறுத்தும் சட்டம்: விலங்குவதைத் தடுப்புச் சட்டம்-1960, தெருநாய்களை அழிப்பதற்கு அனுமதித்தது. தமிழ்நாட்டிலும் தெருநாய்களைக் கொல்வது 1996 வரைக்கும் நடைமுறையில் இருந்தது. 1960களிலிருந்தே புளுகிராஸ் சொசைட்டி முதலான விலங்கு நல அமைப்புகள் ‘தெருநாய்களைப் பிடித்தல் - கருத்தடை செய்தல்-மீண்டும் பிடித்த இடத்திலேயே விடுதல்’ என்கிற வழிமுறையை வலியுறுத்திவந்தன.