இளைஞர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா?

இளைஞர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா?
Updated on
3 min read

இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இன்றைய சூழலில், நமது மக்களவையில் அரசியல் கட்சிகளின் சித்தாந்தப் பன்மைத்துவம் மட்டுமன்றி பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட வெகுஜனத் திரளின் பன்மைத்துவமும் நலன்களும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் பிரதிநிதித்துவம் அமைந்துள்ளதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்கிற ஏற்பாட்டின் மூலம் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து விவாதங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து விவாதங்கள்கூட நடைபெறுவதில்லை. நாட்டின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிறைந்த இளைஞர் சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் உள்ளன.

25 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட நாடாளுமன்ற உறுப்​பினர்​களின் சதவீதம் தொடர்ந்து சரிந்​து​வரு​கிறது. 1952இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்​பினர்​களில் சுமார் 30% உறுப்​பினர்கள் 40 வயதுக்கு உள்பட்​ட​வர்கள். காலப்​போக்​கில், இளைஞர்​களின் பிரதி​நி​தித்துவம் படிப்​படி​யாகக் குறைந்து, 2024இல் வெறும் 10% உறுப்​பினர்கள் மட்டுமே 40 வயதுக்கு உள்பட்​ட​வர்கள் என்கிற மோசமான நிலை ஏற்பட்​டுள்ளது.

முதலாவது மக்களவை​யில், (1952) ஒரு உறுப்​பினர் மட்டுமே 70 வயதைக் கடந்தவராக இருந்​திருக்​கிறார். ஆனால், தற்போதுள்ள 18 ஆவது மக்களவையில் (2024), 8% உறுப்​பினர்கள் 70 வயதைக் கடந்தவர்கள். ஒருபுறம் இளைஞர்​களின் எண்ணிக்கை நாடாளு​மன்​றத்தில் குறைந்​து​வரு​கிறது. மற்றொரு புறத்​தில், வயதில் மூத்தவர்​களின் எண்ணிக்கை உயர்ந்​து​வரு​கிறது.

மேலும், மக்களவை உறுப்​பினர்​களின் சராசரி வயது 1952இல் 46.5 ஆக இருந்தது; 2024இல் 55.6 என்று அதிகரித்​திருக்​கிறது. மாநிலங்களவை உறுப்​பினர்​களின் சராசரி வயது 63. அதிகமான மக்கள்​தொகையைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்​பெரிய ஜனநாயக நாட்டில், இளைஞர்​களுக்கான அரசியல் அதிகாரப் பிரதி​நி​தித்துவம் குறைந்​து​வருவது எளிதில் கடந்து சென்றுவிட முடியாதது. இதனால் ஏற்படக்​கூடிய சமூக அரசியல் சிக்கலானது நாட்டின் வருங்​காலத்​தை​யும், வளர்ச்​சி​யையும் கடுமை​யாகப் பாதிக்​கக்​கூடிய நெருக்​கடியைத் தோற்று​விக்​கும்.

சர்வதேச நிலவரம்: 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்​தொகையில் சரிபாதி 30 வயதுக்கு உட்பட்​ட​வர்கள். ஆனால், உலக அளவில், 30 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்​பினர்கள் என்று எடுத்​துக்​கொண்டால் வெறும் 2.8% மட்டுமே. ஜப்பான், பிரிட்டன், எகிப்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இளைஞர் பிரதி​நி​தித்துவம் தொடர்பான இந்தப் பிரச்சினை நீடிக்​கிறது.

தொழில்​நுட்பப் புரட்சி, பொருளாதார வளர்ச்சி, சமுதாய மாற்றம் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை வழங்கிவரும் இளைஞர்​களுக்கு அரசியல்​ரீ​தியிலான அமைப்பு​களில் உரிய பிரதி​நி​தித்துவம் வழங்கப்​படு​வ​தில்லை; ஜனநாயகக் கட்டமைப்பு​களில் இளைஞர்கள் ஓரங்கட்​டப்​பட்டு வஞ்சிக்​கப்​படு​கிறார்கள்.

பிரதி​நி​தித்துவ ஜனநாயக முறையில் (Representative Democracy) இளைஞர்​களுக்கு இழைக்​கப்​பட்டு​வரும் இத்தகைய அநீதியை, ‘ஜனநாயகப் பற்றாக்​குறை’ (Democratic Deficit) என்று அறிஞர்கள் வகைப்​படுத்து​கிறார்கள். இந்தப் பற்றாக்​குறையை இட்டு நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசிய, மாநில அளவில் இயங்கிவரும் இளைஞர் அமைப்புகள் இது தொடர்பான உரையாடலை முன்னெடுக்க வேண்டும்.

கள நிலவரம்: 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் சராசரி வயது 28. அதாவது, இந்தியாவின் மக்கள்​தொகையில் சரிபாதி மக்கள் 28 வயதுக்கு உள்பட்​ட​வர்கள்; ஏறத்தாழ 65 கோடி இளைஞர்கள் 28 வயதுக்கு உள்பட்​ட​வர்கள். உலகத்​திலேயே மிகப்​பெரும் இளைஞர் திரளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்​து​வரு​கிறது. இந்தியாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்​பதில் இளைஞர்​களின் பிரதி​நி​தித்துவம் முக்கி​யத்துவம் வாய்ந்தது என்பது இதன் மூலம் நிரூபண​மாகிறது.

எனினும், இந்திய நாடாளு​மன்​றத்தில் இளைஞர்​களின் பிரதி​நி​தித்துவம் என்பது விகிதாசார அடிப்​படையில் மிக மிகக் குறைவாகவே இருக்​கிறது. அரசியல் பயிற்​சி​யும், செயல்​பாடும், நேர்மையும் கொண்ட இளைஞர்​களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்​ப​தில்லை. குடும்ப அரசியல் பின்புலம் கொண்ட இளைஞர்​கள்தான் அதிக வாய்ப்பு​களைப் பெறுகிறார்கள்.

இத்தகைய சூழலுக்குச் சமூக, அரசியல் பொருளா​தாரக் காரணங்கள் முன்வைக்​கப்​படு​கின்றன. தற்போது, வேட்பாளரை மையமாகக் கொண்ட தேர்தல் நடைமுறை வழக்கத்தில் இருந்​து​வரு​கிறது. எனவே, மக்களுக்கு நன்கு அறிமுகமான, சமூகச் செல்வாக்​குமிக்க, பொருளா​தாரப் பின்புலம் கொண்ட, (வயதில்) மூத்தவர்​களையே தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய சூழல் நிலவு​கிறது.

பொருளா​தாரப் பின்புலம் இன்மை, அனுபவ​மின்மை ஆகியவற்றின் காரணமாக இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்து​வதற்கு அரசியல் கட்சிகள் தயங்கு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இது போன்ற தயக்கங்கள் தகர்க்​கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் குறித்து, கட்சி, அமைப்பு பேதங்​களைக் கடந்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்; உரையாடல்​களைத் தொடங்க வேண்டும்.

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு​களில் இளைஞர்​களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிவியல், தகவல் தொழில்​நுட்​பத்தின் அதிவேக வளர்ச்சி சமுதா​யத்தின் இயக்க​வியல் (Societal Dynamics) மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்​திவரு​கிறது; சமூக வாழ்வை மறுவடிவ​மைப்பு செய்து​வரு​கிறது என்று சமூகவிய​லா​ளர்கள் கருதுகிறார்கள்.

இதன் பொருட்டு, இளைய சமுதா​யத்​தினரிடையே பரிணமித்து​வரும் புதிய சிந்தனைகள், நமது சமுதா​யத்தில் இதுவரையில் வேரூன்றி இருக்கும் அரசியல் சம்பிர​தா​யங்​களுக்கு எதிரான, வலிமையான சவால்களை முன்வைக்​கின்றன. தலைமுறை இடைவெளி​யும், நிலவுடைமைச் சமுதாய மனப்பான்​மையும் கொண்ட மூத்த உறுப்​பினர்​களால் இப்போது உள்ள இளைஞர்​களின் வாழ்க்கை முறை வளர்ச்சிப் போக்கு​களை​யும், பிரச்​சினை​களையும் புரிந்​து​

கொள்ள முடிவ​தில்லை. காலநிலை மாற்றம், நவீன உற்பத்​தி​முறை, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு தளங்களில் முற்போக்கான கருத்து​களைக் கொண்ட​வர்களாக இளைஞர்கள் இருக்​கிறார்கள். எனவே, இளைஞர்​களின் தேவைகளை​யும், பிரச்​சினை​களையும் விவாதித்து உரிய முறையில் தீர்வு காண அவர்களுக்கான பிரதி​நி​தித்துவம் உறுதிப்​படுத்​தப்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை: அரசியல் செயல்​பாடு​களில் இளைஞர்​களின் பங்கேற்பை ஊக்கப்​படுத்தும் வண்ணம் தேர்தல் சீர்திருத்​தங்​களும், திட்ட​வட்டமான கொள்கை முடிவு​களும் மேற்கொள்​ளப்பட வேண்டும். எடுத்​துக்​காட்டாக, தேர்தலில் வாக்களிப்​ப​தற்கான வயது (18), தேர்தலில் போட்டி​யிடு​வதற்கான வயது (25) - இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது, தேர்தலில் போட்டி​யிடு​வதற்கான அதிகபட்ச வயது வரம்பைக் கொண்டு​வருவது போன்ற சீர்திருத்​தங்கள் மேற்கொள்​ளப்பட வேண்டும்.

அரசின் கொள்கைகளை இறுதி​செய்யும் நாடாளு​மன்​ற/​மாநில சட்டமன்றக் குழுக்​களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க உரிய ஏற்பாடு​களைச் செய்திட வேண்டும். இது போன்ற சீர்திருத்​தங்கள் இளைஞர்​களின் பிரதி​நி​தித்து​வத்தை ஓரளவுக்கு அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு இருக்​கிறது. கூடவே, அரசியல் கட்சிகள், அவற்றின் வர்க்க, வெகுஜன அணிகளில் இளைஞர்​களுக்கான பிரதி​நி​தித்து​வத்தை நடைமுறைப்​படுத்​தினால் நிச்சயமாக மிகப்​பெரும் மாற்றம் சாத்தி​யப்​படும். வேட்பாளர்களாக மட்டுமின்றி, கட்சிப் பொறுப்பு​களிலும் இளைஞர்​களுக்கு முன்னுரிமை அளித்திட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.

மாணவர்​/இளைஞர் அமைப்பு​களின் மூலம் இன்றைய காலச்​சூழலுக்குப் பொருத்​தப்​பாடுமிக்க அரசியல் பயிற்சி அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத் தளத்தில் பொறுப்பு​ணர்​வுடன் கடமையாற்​றக்​கூடிய இளைஞர்களை உருவாக்கிட முடியும். இளைஞர்​களுக்கான நியாயமான அரசியல் பிர​தி​நி​தித்து​வம் என்னும் பொருண்மை குறித்து ஆக்​கபூர்​வமான உரை​யாடலை இளைஞர், ​மாணவர், பெண்​கள், குடிமைச் சமூக அமைப்பு​கள் ​முன்னெடுக்க வேண்​டும். அரசி​யல் தளத்​தில் இளைஞர்​களின் பங்​கேற்​பும் பிர​தி​நி​தித்து​வ​மும் உயரும்​போது, ச​மு​தாய ​மாற்​றம்​ நிச்​சயம்​ ​சாத்​திய​மாகும்.

- தொடர்புக்கு: ashokan.arun@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in