Last Updated : 07 Mar, 2024 06:16 AM

 

Published : 07 Mar 2024 06:16 AM
Last Updated : 07 Mar 2024 06:16 AM

கவனம் கோரும் கருப்பை வாய்ப் புற்றுநோய்!

ஜனவரி மாதம் கருப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இப்புற்றுநோய் குறித்துப் பல புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில், உலகில் காணப்படும் கருப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பில், மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதாக வந்துள்ள புள்ளிவிவரம் நம் கவனத்தைக் கோருகிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 2023இல் வெளியிடப்பட்ட தேசியப் புற்றுநோய்ப் பதிவின்படி, இந்தியாவில் 3.4 லட்சம் பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆண்டுதோறும் 1,23,907 பெண்கள் இந்த நோயால் புதிதாகப் பாதிக்கப்படுவதும், 77,348 பேர் உயிரிழப்பதும் அறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2023இல் மட்டும் 8,534 பெண்கள் இப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

யாருக்கு வாய்ப்பு அதிகம்? - பெண்களுக்குக் கருப்பை வாய்ப் பகுதியில் ‘மனித பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – HPV) தொற்றுவதுதான் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணம். இந்தக் கிருமி பாலுறவு மூலமே பரவுகிறது.

ஆனாலும், அனைவருக்கும் இப்புற்றுநோய் ஏற்படுவதில்லை. பலரிடம் இருக்கும் நோய்த் தடுப்பாற்றல் இந்தப் புற்றுநோயை வரவிடாமல் தடுத்துவிடும். தடுப்பாற்றல் குறைவாக இருந்தால் மட்டுமே இந்தக் கிருமி பாதிக்கும்.

முக்கியமாக, பெண்ணுறுப்பில் சுத்தம் காக்கத் தவறும் பெண்களுக்கும், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்பவர்களுக்கும், திருமணத்துக்கு முன்பே பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும், பலர்பால் உறவில் ஈடுபடுவோருக்கும் இப்புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் அதிகம்.

மேலும், ஹெச்ஐவி உள்ளிட்ட பாலியல் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், கருத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கும், பரம்பரை காரணமாகவும் இப்புற்றுநோய் இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடக்கூடும்.

அறிகுறிகள் என்ன? - இப்புற்றுநோயின் ஆரம்பத்தில், கருப்பை வாயில் ஒழுங்கற்ற சிறு தடிப்பு மட்டுமே காணப்படும். அப்போது எந்த அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை. இது புற்றுநோயாக மாறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அதற்குள் அதைக் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

எனவேதான், ‘வரும் முன் காப்போம்’ என்கிற அடிப்படையில், பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறோம். பொதுவாக, இப்புற்றுநோயுள்ள பெண்களுக்கு அடிவயிறு கனமாக இருக்கும்.

மாதவிலக்கின்போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்படும். பாலுறவின்போது அதிக வலி, ரத்தக்கசிவு, இரண்டு மாதவிலக்குகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திடீரென ரத்தப்போக்கு உண்டாவது ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

தடுக்கும் வழிகள் என்னென்ன? - நவீன மருத்துவத்தின் அருங்கொடை ‘ஹெச்பிவி தடுப்பூசி’ (HPV Vaccine). தடுப்பூசி உள்ள ஒரே புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமே. அதனால்தான் இதைத் தடுத்தேஆக வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

9 லிருந்து 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 6 மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் இதைச் செலுத்திக்கொண்டால், கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 100% வாய்ப்பில்லை. ஆனால், இது குறித்த விழிப்புணர்வு படித்த பெண்களுக்கே அவ்வளவாக இல்லை என்பதுதான் கவலையளிக்கிறது.

அடுத்து, ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனை (Pap Smear test) இருக்கிறது. புற்றுநோய் முன்னறிதல் பரிசோதனைகளில் (Screening tests) இது முக்கியமானது. அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. 30 வயதிலிருந்து 65 வயது வரையுள்ள பெண்கள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது.

புற்றுநோயை முன்கூட்டியே இது தெரிவித்துவிடுகிறது. அதனால், பயனாளிக்குச் சிகிச்சை கொடுப்பது எளிதாகிறது; உயிரிழப்பைத் தடுக்க முடிகிறது. இப்போது ‘விஐஏ’ (VIA), ‘விஐஎல்ஐ’ (VILI) என்னும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவை மேற்கொள்ளப்படுவதால் கிராமப்புறப் பெண்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

சவால்கள் என்னென்ன? - கருப்பை வாய்ப் புற்றுநோயை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு 2020இல் ‘கருப்பை வாய்ப் புற்றுநோய் ஒழிப்பு முயற்சி’ (Cervical cancer elimination initiative) என்னும் திட்டத்தை உலகச் சுகாதார நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் 90/70/90 எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது, 90% பதின்பருவப் பெண்களுக்கு ‘ஹெச்பிவி தடுப்பூசி’யைச் செலுத்திட வேண்டும்; 70% பெண்களுக்கு 35 வயதுக்குள் ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனையை மேற்கொண்டுவிட வேண்டும்; 90% பெண்களுக்கு ஆரம்பத்திலேயே இப்புற்றுநோயைக் கண்டறிந்து, குணப்படுத்திட வேண்டும்.

ஆனால் கள ஆய்வில், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் இப்பரிசோதனை 70% பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை ஒரு சதவீதம் பெண்களுக்குக்கூட இது மேற்கொள்ளப்படவில்லை எனவும், தமிழ்நாட்டில் 7% பெண்களுக்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

பொதுச் சமூகத்தில், இப்புற்றுநோய் குறித்த புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை என்பதாலும், ஆரம்ப அறிகுறிகளை அவர்கள் அலட்சியப்படுத்துவதாலும், அவற்றைப் பற்றிப் பொதுவெளியில் பேச வெட்கப்படுவதாலும் 43% பெண்களுக்கு இப்புற்றுநோய் தீவிரமடைந்த பிறகே கண்டறியப்படுகிறது.

இது சிகிச்சை அளிப்பதற்குச் சவாலாகிறது. நகரங்களில் உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறப் பெண்கள் இந்த நோய்க்கான பரிசோதனைகளைச் செய்துகொள்வதற்குப் பெரிதும் தயங்குவதாலும், அச்சப்படுவதாலும் நோய்முற்றிவிடுகிறது. அப்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்கிறார்கள். இப்போது தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஹெச்பிவி தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால், சாமானியர்களுக்கு அது எட்டவில்லை.

என்ன செய்ய வேண்டும்? - நாட்டில் ‘கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்புத் திட்டம்’ (Cervical cancer control policy) என்று ஒரு தனித்திட்டம் தொடங்கப்பட வேண்டும். ஊடகங்கள் வழியாக இப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். ஆரம்பக் கல்விப் பாடத் திட்டத்தில் இப்புற்றுநோய் குறித்த பாடம் இடம்பெற வேண்டும்.

நகர்ப்புறப் பெண்களுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறப் பெண்களிடமும் இப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும். அதற்கு, 30 வயதிலிருந்து 45 வயது வரையுள்ள பெண்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாவட்ட/தாலுகா மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் முன்னறிதல் முகாம்கள் (Screening camps) நடத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக, தடுப்பூசியின் நம்பகத்தன்மையை மக்கள் உணரவைக்க வேண்டும். இதற்கான காணொளிப் பிரச்சாரத்துக்குப் பிரபலங்களைப் பயன்படுத்தலாம். மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகள் ‘ஹெச்பிவி தடுப்பூசி’ செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.

இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியம். பதின்பருவப் பெண்கள் அனைவருக்கும் இத்தடுப்பூசி இலவசமாகக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளிலோ ஆரம்பச் சுகாதார நிலையங்களிலோ இது செலுத்தப்பட வேண்டும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ‘ஹெச்பிவி தடுப்பூசி’யும் இருக்கிறது. இதன் விலை குறைவு. பெண்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்பட வேண்டும்.

இறுதியாக, புற்றுநோய் மேலாண்மைப் பணிக்காகத் (Cancer Management Mission) தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நிதியில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் மேலாண்மைக்கான அடிப்படை சேவை களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

புற்றுநோய்த் தடுப்புத் திட்டத்தை அனைத்து மக்களுக்குமான சுகாதாரச் சேவைகளின் இணைத் திட்டமாக மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அளவிலும் நாடெங் கிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான், 2030ஆம் ஆண்டுக்குள் கருப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பது சாத்தியப்படும்.

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

To Read in English: Needed: More attention to cervical cancer

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x