Published : 20 Feb 2024 09:35 AM
Last Updated : 20 Feb 2024 09:35 AM

ஊழலுக்கு எதிராக போராடிய லாலு | தேர்தல் பத்திரங்களுக்குத் தடை: என்ன மாறப்போகிறது?

கடந்த 1970-களில் பதிவான இன்னொரு சுவையான வழக்கு ஆளும் கட்சிகள் எப்படி நிதி வசூலித்தன என்பதை விளக்குகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த தல்பத் ராய் மேத்தா என்பவர், கிராஃபைட் இந்தியா நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். அந்தக் கம்பெனியின் ஆண்டறிக்கையைப் படிக்கும் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட நினைவு மலரில் விளம்பர செலவு ரூ.1,52,000 என்று குறிப்பிடப்பட்டிருந்தது அவரது கவனத்தைக் கவர்கிறது. கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில் அப்படி ஒரு புத்தகம் பிரசுரமானதா என்பதே சந்தேகம். உடனே கம்பெனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

விதிமுறைகளை முறியடிக்கவே இவ்வாறு விளம்பரம் என்ற பெயரில் நன்கொடை கொடுக்கப்பட்டது என்பது அவரது வாதம். இந்த வழக்கை எதிர்த்து கம்பெனி தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனியொரு மனிதனாக மேத்தாவால் இந்த வழக்கை எதிர்கொள்ள இயலவில்லை. விளம்பரம் என்பது வேறு, நன்கொடை என்பது வேறு, ஆகவே எந்த விதியும் மீறப்படவில்லை என்று தீர்ப்பு வந்தது.

அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சூட்கேஸ் கலாச்சாரம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். கம்பெனிகளுக்கு லைஸென்ஸ் வழங்குவதற்கு ஒவ்வொன்றுக்கும் இத்தனை சூட்கேஸ் என்று ஆளும் கட்சி தரப்பில் ஊழல் உச்சத்துக்குச் சென்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களைத் தொடங்கினர். இதற்கு மக்களின் பெருத்த ஆதரவும் இருந்தது.

கடந்த 1975-ல் அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு இதுதான் பின்னணியாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஊழலை ஒழிப்போம் என்ற ஜெயப்பிரகாஷ் நாராயணின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டு அன்றைய பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த ஒரு இளைஞன் தன்னை ஜெயப்பிரகாஷ் நாராயணை தலைவனாக ஏற்றுக் கொண்டார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவரது வலதுகரமாக விளங்கி, மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்தார். அந்த மாணவர்தான் இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து இப்போதும் பிணையில் வெளியில் இருக்கும் லாலு பிரசாத் என்பதுதான் இந்திய அரசியலின் விளங்க முடியாத நகைமுரண்.

இந்திரா காந்தி கொண்டு வந்த தடை, 1985-ல் ராஜீவ் காந்தியால் நீக்கப்படுகின்றது. கடந்த 3 வருடங்களில் லாபத்தில் 5% என்ற உச்சவரம்பு, 2013-ல் 7.5% என்று தளர்த்தப்படுகின்றது. அதன்பிறகு 2017-ல் பாஜக ஆட்சிக் காலத்தில் தேர்தல் பத்திர நடைமுறைக்கு வடிவம் கொடுக்கப்படுகின்றது. எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இதற்கென நியமிக்கப்பட்டுள்ள வங்கிக் கிளையில் பணத்தைச் செலுத்தி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு அதனைத் தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு வழங்கலாம். அந்தக் கட்சிகள் அதனை 15 நாட்களுக்குள் வங்கியில் செலுத்தி கட்சியின் வங்கிக் கணக்கில் மட்டுமே அந்தப் பணத்தை வரவு வைத்துக் கொள்ளலாம்.

இதற்கென குறிப்பிட்ட காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சிகள் என்றால் சட்டமன்றத் தேர்தலிலும் தேசியக் கட்சிகள் என்றால் பாராளுமன்றத் தேர்தலிலும் குறைந்தபட்சம் 1% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. இந்தத் தேர்தல் பத்திரங்களில் நன்கொடை வழங்கியவர் யார் என்பது தெரியாது. பத்திரங்களை வாங்கும்போது வங்கியில் மட்டும் அடையாளத்துக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். உடனே அவை ஒரு உறையிலிடப்பட்டு சீல் வைத்து பெட்டகத்தில் வைக்கப்படும்.

தேர்தல் பத்திரங்களுக்கு முன்பு நடைமுறையில் எப்படி இருந்தது என்பதை இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறிய கருத்து மிகத்தெளிவாக விளக்கும். “இதற்கு முன்பு ஒரு கட்சி நிர்வாகி, 50 கோடி நன்கொடை பெறுகிறார் என்றால் முழுப் பணத்தையும் அவர் கட்சிக் கணக்கில் சேர்ப்பதில்லை. தனக்கென ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார். ஆனால் தற்போதைய நடைமுறையில் முழுப் பணமும் கட்சிக் கணக்கில் சேருகிறது".

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகளில் பெரும்பகுதி ஆளும் கட்சி, அதிலும் பாஜகவிற்கே வழங்கப்படுகின்றது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பார்த்தால் 2004-2014 கால கட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போதும் காங்கிரஸை விடவும் பாஜகதான் அதிகமான நன்கொடையைப் பெற்றிருக்கின்றது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வித்தியாசம் அதிகரித்திருக்கின்றது. நன்கொடைகள் மட்டுமல்ல, வாக்கு சதவீதத்திலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையிலும் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கையிலும் பாஜவிற்கும் காங்கிரஸிற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறதல்லவா?

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகளில், மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கின்றது. பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு 6,566 கோடி ரூபாய், ஆனால் ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு 1,092 கோடி ரூபாய் என்பது வியப்பாக இருக்கின்றதா?

முந்தைய அத்தியாயம்: தேர்தல் பத்திரங்களுக்குத் தடை - என்ன மாறப்போகிறது?

| தொடரும் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x