Published : 13 Feb 2018 09:38 AM
Last Updated : 13 Feb 2018 09:38 AM
உலகம் எங்கிலும் பொது விடுமுறை என்பது தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் அல்லது வசந்த காலப் பெருவிழா, அல்லது கடவுள் - மதம் தொடர்பான நாளாகவே பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டை நோக்கிப் படையெடுப்பதற்கான வாய்ப்பாகவும் பொது விடுமுறை நாட்கள் அமைந்துவிடுகின்றன. பொது விடுமுறை நாட்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம், கூச்சல், அன்றாட வாழ்க்கை நிலையில் பிறழ்ச்சி என்பதால் இதுபோன்ற விடுமுறை நாட்களை வெறுப்பவர்கள் உண்டு.
ஜப்பானியர்கள் மலைகளையும் முதியவர்களையும் ஆழ்கடல்களையும் குழந்தைகளையும் பூப்பெய்திய இளம் பெண்களையும் கொண்டாட சில நாட்களை ஒதுக்குவதை இப்படிப்பட்டவர்களால்கூடக் குறை காண முடியாது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமை, வயதுவந்த பெண்களைக் கொண்டாடுவதற்காக ஒதுக்கப்படுகிறது. இளம் பெண்கள் பூப்பெய்துவது வெவ்வேறு வயதிலும் நாட்களிலும் இருந்தாலும் எல்லா பருவப் பெண்களும் 20-வது வயது தொடங்கும்போது அதற்காகக் கொண்டாடப்படுகின்றனர்.
1948-ம் ஆண்டு முதல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும் ‘ஜென்பாகு’ என்ற பெயரில் காலங்கால மாக இது ஜப்பானியரின் மரபுக் கொண்டாட்டமாகத் தொடர்கிறது. ஜென்பாகுவில் ஆண்களுக்கும் கொண்டாட்டம் உண்டு, தமிழ்நாட்டில் இளவட்டக் கல்லைத் தூக்குவதைப் போல ஜப்பானிய யுவர்கள் அரிசி மூட்டையைத் தூக்கி உடல் வலுவைக் காட்ட வேண்டும். பெண்கள் ஊசியில் நூல் கோத்து விதம்விதமாகத் துணிகளைத் தைத்துக் காட்ட வேண்டும்.
ஜென்பாகு ஒவ்வொரு பெண்ணும் பூப்படைந்தவுடன் அவரவர் வீடுகளில் நிகழ்த்தப்படும். நம் நாட்டில் மஞ்சள் நீராட்டு போலத்தான் இது. 20 வயது வந்தால்தான் வாலிபம் என்று அதிகாரபூர்வமாக நிர்ணயித்திருக்கிறார்கள். வாலிபர்கள் 20 வயது ஆனால்தான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும், தொலைபேசி இணைப்பை யும் அப்போதுதான் வாங்க முடியும். அது மட்டுமல்ல.. 20-க்குப் பிறகுதான் புகை பிடிக்கவும் மதுபானம் அருந்தவும் அனுமதி உண்டு.
இருபது வயதை எட்டியவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் காலை நேர வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது நகராட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் எப்படிப் பொறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என்று அறிவுரையாற்றுவார்கள். பிறகு, இந்த இளைஞர்கள், யுவதிகளின் குடும்பத்தினர் ஆலயங்களுக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றியும் நல்ல ஆரோக்கியமும் கிட்ட வழிபடுவார்கள்.
மாலையில்தான் மதுபானக் கேளிக்கை விருந்து கள் ஆரம்பமாகும். இந்தக் கேளிக்கை விருந்துகளின் போக்குதான் இப்போது மூத்த ஜப்பானியர்களுக்குக் கலக்கத்தை அளித்துவருகின்றது. குடித்துவிட்டுக் கத்துவது, ஆடுவது, சண்டையில் இறங்குவது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளிருடன் குலாவுவது போன்ற செயல் கள் வரம்பு மீறிக்கொண்டே வருவது மூத்தவர்களுக்குக் கவலையை அளித்து வருகிறது.
ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதும் அரசுக்குப் பெரிய கவலையாகிவிட்டது. கடந்த ஆண்டு 12.30 லட்சம் பேர் 20 வயதை எட்டினர். 1970 உடன் ஒப்பிடுகையில் இது பாதிதான். ஜப்பானில் முதியோருக்கான தினம் செப்டம்பரில் வருகிறது.
ஜப்பானின் மொத்த மக்கள்தொகை யில் 25%-க்கும் மேல் 65 வயது மற்றும் அதைத் தாண்டியவர்கள். 2015 முதல் 2030-க்குள் மக்கள்தொகை மேலும் ஒரு கோடி குறையவிருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக் கூடும்.
இயற்கையை நேசிக்கும் ஜப்பானியர் கள் சுற்றுச்சூழல் கெடக்கூடாது என்பதில் அக்கறை உள்ளவர்கள். அதனாலேயே மலைகள், கடல்கள், பசுமைத் தாவரங் களுக்காகவெல்லாம் விடுமுறை அறிவித் துக் கொண்டாடுகின்றனர்.
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT