Published : 29 Nov 2016 01:30 PM
Last Updated : 29 Nov 2016 01:30 PM

இப்படிக்கு இவர்கள்: வாசகர் திருவிழா அமர்க்களம்!

சிதம்பரத்தில் நடந்த ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் நானும் பங்கேற்றேன். விழா அமர்க்களமாக நடந்தது. எழுத்தாளர் போப்பு பேச்சுடன் அசத்தலாக ஆரம்பித்த வாசகர் திருவிழாவில், அடுத்துப் பேசிய நெறியாளர் கோபிநாத், நல்ல நகைச்சுவை கலந்த பேச்சில் அரங்கையே அதிரவைத்தார். ‘செருப்பை அலங்கரிக்க அலமாரி வைக்கிறோம்.. நல்ல புத்தகங்களை வைக்க ஒரு அலமாரி வைக்க மறுக்கிறோம்’ என்ற அவரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மூன்றாவதாகப் பேசிய லிங்குசாமியும் சிறப்பாகப் பேசியதுடன், வாசகர்களைத் தன்னைக் கேள்வி கேட்குமாறு கூறி, அக்கேள்விகளுக்குச் சிறப்பாகப் பதிலளித்தார்.

- உ.சபாநாயகம், கனி மளிகைக் கடை, சிதம்பரம்.



உன்னால் முடியும் தம்பி!

‘புகைப்பதை நிறுத்தும் மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?’ (நவ. 22) கட்டுரை படித்தேன். நான் கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்த புகைப் பழக்கத்தை மனைவி சொல்லியும் நிறுத்த முடியாமல் தவித்தேன். ஒருநாள் என் மனைவியிடம் எதேச்சையாக, “மனுஷனால நினைச்சா எதையும் நிச்சயம் சாதிக்க முடியும்” என்று கூற, “உங்களால் சிகரெட்டையே விடமுடியல நீங்க பேசறீங்களாக்கும்” என்று சொல்லிவிட்டார். “நாளை நம்ம பொண்ணோட 7-வது பிறந்த நாள் அன்றுடன் புகைப்பதை விட்டு விடுகிறேன்” எனக் கூறினேன். 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, புகைப்பதை நிறுத்தி. என்னால் எப்படி முடிந்தது என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை. ஆனால், நினைத்தால், அந்த மனவுறுதியைப் பெறலாம் என்பதை அந்நிகழ்வு எனக்கு சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.



ஊழலற்ற உள்ளாட்சி

டி.எல்.சஞ்சீவிகுமாரின், ‘உள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ தொடர் நல்லாட்சி நடைபெறும் உள்ளாட்சிகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கேரளாவில் பெரும்பாலான ஊராட்சி கள் உதாரண ஊராட்சிகளாக விளங்கக் காரணம், காலங்காலமாக உள்ளாட்சி மற்றும் அரசுச் செயல் பாடுகளில் பொதுமக்கள் காட்டிவரும் ஈடுபாடுதான். ஒரு அரசு ஊழியரோ, ஆசிரியரோ பணிக்குத் தாமதமாக வந்தால், பொதுமக்களே அவர்களைக் கேள்வி கேட்பார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கேரளாவில் உடனடியாக அமல் செய்யப்பட்டு கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகள், அவற்றின் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். அதோடு, அங்கு ஊழல் குறைவு. இங்கும் அப்படியான நிலையைக் கொண்டுவர வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.



சற்று பொறுப்போம்

புதிய கோணத்தில் எழுதப்பட்டிருக் கிறது, ‘பண மதிப்பு நீக்கத்தால் அரசுக்கு என்ன லாபம்?’ (நவ.24) கட்டுரை. இந்நடவடிக்கையால் முதலில் கள்ள நோட்டு ஒழியும். இதனால், பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து மீளும். கடன் சுமையும் அதன் மீது செலுத்தும் வட்டியும் குறையும். எனவே, மோடியின் நடவடிக்கை முழுமையடையும் வரை சற்று பொறுத்துத்தான் ஆக வேண்டும்.

- ப.தாணப்பன், தச்சநல்லூர்.



மக்களாட்சியும் நேருவும்

வரலாற்றாசிரியர் ஸ்ரீ நாத் ராகவன் தனது பேட்டியில் (நவ.23) “நேரு நினைத்திருந்தால் இந்தியாவை ஒற்றைக் கட்சி நாடாக மாற்றியிருக்க முடியும்” எனக் கூறியிருந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, மக்கள் செல்வாக்குப் பெற்ற மகத்தான தலை வராக ஜவாஹர்லால் நேரு விளங் கினார். நேரு எதைச் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லதுதான் என்ற மனப்பான்மையில் அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையைக் கெடுத்துக்கொள்ள நேரு விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக மன்னராட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அடிமைகளாக அவதிப்பட்டு, அல்லலுற்ற மக்களை மீண்டும் அடிமையாக்க நேரு விரும்ப வில்லை. மக்களாட்சியின் மூலமே சமத்துவ இந்தியாவைச் சமைக்க முடியும் என அவர் தீர்க்கமாக நம்பினார். அது தீர்க்கதரிசனமும்கூட!

- ரெ.பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x