Last Updated : 13 Aug, 2015 09:37 AM

 

Published : 13 Aug 2015 09:37 AM
Last Updated : 13 Aug 2015 09:37 AM

தாமிரபரணி: நதியை நாசமாக்கும் நகரம்

காடுகளில் காப்பாற்றப்பட்ட தாமிர பரணி, நகரத்தில் நாசமானது. வனத்துறைக்கு இருக்கும் அக்கறை, உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு இல்லை. திருநெல்வேலியில் தாமிரபரணி தண்ணீரை கைநிறைய அள்ளித் சுவைத்ததை இன்னமும் அனுபவித்து கூறுகிறார்கள் பெரியவர்கள். அது எல்லாம் பழங்கதையாகிவிட்டது. இன்று ஆற்றில் குளிக்கவே அஞ்சு கிறார்கள். காரணம், ஆற்றில் கலக்கும் கழிவுகள். ஆறு மலையை விட்டு இறங்கியவுடனேயே பாப நாசத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் பெயரால் மாசுபடுகிறது. பாபநாசத்தில் ஆற்றில் வீசப்பட்ட சுமார் 100 டன் பழந் துணிகள் அகற்றப் பட்டதாக கூறுகிறார் தாமிரபரணி கல்யாணதீர்த்தம் தூய்மை அறக்கட்டளையின் செயலாளர் கபடி எஸ்.முருகன்.

ஆற்றுக்குள் அரசு கழிப்பறை

பாபநாசம் தாண்டியவுடன் சேரன் மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ரசாயனக் கழிவுகளை இரவு நேரங்களில் ஆற்றில் திறந்து விடுகின்றன ஜவுளி மற்றும் காகித ஆலைகள். இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு வரும் தாமிரபரணி திருநெல்வேலியில் இன்னும் மோசமான பாதிப்புகளை சந்திக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 1,40,216 குடியிருப்புகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 180 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன. இவை பெரும்பாலும் ஆற்றின் கரையில்தான் கொட்டப்படுகின்றன. சிந்துபூந்துறை, உடையார்பட்டி பகுதிகளுக்கான குப்பைகொட்டும் வளாகம் தாமிரபரணி கரைதான். கொக்கிரகுளத்தில் இறைச்சி கழிவுகள் ஆற்றில் கொட்டப்படு கின்றன. ஆற்றைக் காக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே சிந்து பூந்துறையில் ஆற்றுக்குள் கழிப் பிடத்தை கட்டியிருக்கிறது. வண்ணார் பேட்டையில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து வெளி யேறும் ஆயில் கழிவுகள் ஆற்றை நஞ்சாக்குகின்றன. திருநெல்வேலி ரயில் நிலையம் பகுதி கழிவுகள் சிந்துபூந்துறை ஆற்றுக்குள் விடப் படுகின்றன.

கருப்பந்துறை முதல் வெள்ளக் கோவில் வரை 27 இடங்களில் ஒரு நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக கூறுகிறது ஆய்வு ஒன்று. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 686 இடங்களில் சாக்கடை கலக்கிறது. இது தவிர, தாமிரபரணியின் பல்வேறு பகுதிகளில் படர்ந்திருக்கும் நீர்க் கருவைகளும், அமலை செடிகளும் தண்ணீரின் போக்கையும், நீரின் தன் மையையும் மாற்றிவிடுகின்றன.

பாதாள சாக்கடை திட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அரைகுறை யாக இருப்பதுதான் மேற்கண்ட சீர்கேடு களுக்கு முக்கிய காரணம். தாமிரபரணி நதிநீர் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 4.4.2003 அன்று பாதாள சாக்கடை திட்டம் தொடங் கப்பட்டது. பணிகள் 10 வார்டுகளில் முழுமையாகவும், 22 வார்டுகளில் அரைகுறையாகவும் நிற்கிறது. இத்திட்டத்தின்கீழ் 22,579 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வார்டுகளில் இந்தத் திட்டத்தை செயல் படுத்த ரூ.490 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, நிதியுதவி பெறுவதற்கான தமிழ்நாடு நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்திடம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது திட்டம் முழுமை பெறும் என்று தெரிய வில்லை.

படங்கள்: எம்.லட்சுமி அருண்

தாமிரபரணியும் பாலங்களும்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்றில் பரிசல்கள் ஓடின. திருநெல் வேலி - பாளையங்கோட்டை நகரங்க ளைக் கடக்க பரிசல்களே பயன் படுத்தப்பட்டன. பரிசல்துறையும் இருந்தது. அந்த பரிசல்துறையில் உருவாக்கப்பட்டதுதான் சுலோச்சனா முதலியார் பாலம். ஃபேபர் என்பவர் எண்ணத்தில் உதித்ததுதான் இந்த பாலம்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவ லகத்தில் சிரஸ்தார் பணியிலிருந்தவர் சுலோச்சனா முதலியார். அவருக்கு லண்டன் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்தது. அதிலிருந்து ரூ.50 ஆயிரத்தை பாலம் கட்டுவதற்கு அவர் அளித்தார். பாலத்தை ஆங்கிலேய பொறியாளர் டபிள்யூ.எச். ஹார்ஸ்லே கட்டினார். பாலம் 1843-ல் திறந்து வைக்கப்பட்டது. சுலோச்சனா முதலியாரின் பெயரே பாலத்துக்கு சூட்டப்பட்டது. 1869-1871-களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் சேதமடைந்தது. மக்களிடம் நன்கொடை பெற்று 1871-ல் பாலம் சீரமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் 1966-ல் அகலப்படுத்தப் பட்டு, 1967-ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடம் இந்தப்பாலம்தான். இதுதவிர, தாமிரபரணி கடலில் கலக்கும் வரையில் பல்வேறு பாலங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியில் 1962-ல் 40 அடி அகல பாலம், சேரன்மகாதேவியை பொட்டல்புதூர் சாலையுடன் இணைக்கும் கிளை சாலையில் 25 அடி அகல பாலம், தாமிரபரணியின் குறுக்கே அணையுடன் கூடிய வைகுண்டம் பாலம், பாளையங்கோட்டை- தூத்துக்குடி சாலையில் 40 அடி அகல முறப்பநாடு பாலம் ஆகியவை அமைந்துள்ளன.

தாமிரபரணியின் குறுக்கே..

மேலும் தாமிரபரணி குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் விவரம்: 1957-ல் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை யில் தாமிரபரணியின் குறுக்கே அமைந்துள்ள 20 அடி அகல முக்காணி தாம்போதி பாலம், கோபாலசமுத்திரம் பாலம், திருநெல்வேலி நகரை மேலப்பாளையத்துடன் இணைக்கும் கருப்பந்துறை தாம்போதி பாலம் ஆகியவை கட்டப்பட்டன.

வாகன பெருக்கத்தால் மேலும் பல பாலங்கள் தாமிரபரணியின் குறுக்கே அமைய வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

(தவழ்வாள் தாமிரபரணி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x