Published : 06 Sep 2019 08:41 AM
Last Updated : 06 Sep 2019 08:41 AM

360: வெளிநாடுகளுக்குப் பறக்கும் இந்திய மருத்துவர்கள்

மைக்கா சுரங்கத்தில் கருகும் இந்திய எதிர்காலம்

ஜார்க்கண்ட், பிஹார் மாநிலங்களில் மைக்கா சுரங்க வேலைக்காக5,000-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். குறைந்த வருவாயில் அதிக லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள் ஒருபுறம் என்றால், அந்த சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்த நினைக்கும் ஏழ்மை இன்னொருபுறம். இந்தக் கொடுமையான சூழலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்குக் குழந்தைகளை வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்று சுரங்க உரிமையாளர்களைக் கட்டாயப்படுத்துவது மட்டும் போதாது; எளிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான சூழலையும் அரசு உருவாக்கித் தர வேண்டும். இந்தச் சிறார்கள் கல்வியறிவின்றி வளர்ந்துவருவதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உயரமும் எடையும் கொண்டிருக்கவில்லை என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். ‘இப்படி ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இளைய சந்ததிகளிடமிருந்து பல்கிப் பெருகும் எதிர்காலச் சந்ததிகள் நிலை இன்னும் மிக மோசமான சூழலுக்கே வித்திடும். ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவதிலும் இருக்கிறது’ என்று ஒலிக்கும் சமூக ஆர்வலர்களின் குரல்களைப் புறக்கணித்துவிட முடியாது.

வெளிநாடுகளுக்குப் பறக்கும் இந்திய மருத்துவர்கள்

பிரிட்டனில் பதிவுபெற்ற மருத்துவர்களில் 9% - அதாவது, 50,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் நம் நாட்டினர் பணிபுரிகிறார்கள். கனட மருத்துவர்களில் பத்தில் ஒருவர் இந்தியர். ஆஸ்திரேலியாவிலோ ஐந்தில் ஒருவர் இந்தியர். இப்படிப் பல லட்சம் இந்திய மருத்துவர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கிறார்கள். இப்படி இருக்க, இந்திய மக்கள்தொகைக்கு 20 லட்சம் மருத்துவர்கள் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம்தான்! இந்திய மருத்துவக் கல்லூரிகள் வழியே ஆண்டுக்கு 30 ஆயிரம் மருத்துவர்கள் பட்டம் பெறுகிறார்கள். எல்லோரும் இந்தியாவிலேயே இருக்கும் பட்சத்தில் நம் பற்றாக்குறையை நிரப்பவே சுமார் 35 ஆண்டுகள் பிடிக்கும்!

பட்நவீஸின் பிரச்சார வெள்ளத்துக்கு அணைபோட்ட எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஜன ஆதேஷ் யாத்திரையைத் திட்டமிட்டபடி தொடங்கிவிட்டார் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நவீஸ். யவத்மால் மாவட்டத்தில் தொடங்கிய இந்த யாத்திரைச் செய்தியை வெளியிட மும்பையிலிருந்து 87 பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே மகாராஷ்டிரத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. வெள்ளச் சேதப் பகுதிகளுக்குப் போவதைவிடப் பிரச்சார யாத்திரைக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று எதிர்க்கட்சிகள் இதைப் பெரிய விவகாரம் ஆக்கியதும் யாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வெள்ளப் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார் பட்நவீஸ். ‘பிரச்சார வெள்ளத்தில் அக்கறை காட்டுவதைவிட, வெள்ளத்தில் பாதிப்படைந்திருக்கும் மக்களிடம் அக்கறை காட்டுவதுதான் முக்கியம்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x