Published : 09 Jul 2015 10:47 AM
Last Updated : 09 Jul 2015 10:47 AM
‘இருவருக்கும் தோல்வியின்றி ஒரு வெற்றி’ தலையங்கம் ஜனநாயகம் என்ற சொல்லாடலின் பொருள்பற்றி ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகில் சீனா, கியூபா போன்ற நாடுகளில் ஒரு கட்சி அரசியல்முறை உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இரு கட்சி அரசியல்முறை உள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல கட்சி அரசியல்முறை உள்ளது. இந்தியாவில் பல கட்சி ஆட்சியும் (கூட்டணி ஆட்சி) கூட நடைமுறையில் உள்ளது.
எனவே, ஒப்பீட்டளவில் அரசியல் கோட்பாட்டின்படி, உயர்ந்த ஜனநாயகம் என்று பல கட்சி அரசியல் மற்றும் ஆட்சி முறையைத்தான் கூற முடியும். எந்த ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமையையும் சம வாய்ப்பையும் முழுமையாக வழங்காத ஒரு சமூகத்தை, நாம் ஜனநாயக நெறியுள்ள அமைப்பாகக் கருத முடியாது.
வெறும் லாப நோக்கிலான, சந்தைப் பொருளாதார நலன் மட்டுமே ஆதிக்கம் பெற்றுள்ள இன்றைய மறைமுகமான முதலாளித்துவ ஆட்சி, அதிகார வடிவத்தில் இருந்து உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நகர்வதைப் பற்றி நாம் மேலும் அக்கறைகொள்ள வேண்டியுள்ளது. அனைவருக்கும் வாக்குரிமை அளித்துவிட்டதால் மட்டுமே ஜனநாயகம் சாத்தியப்பட்டுவிட்டதாகக் கருத இடமில்லை.
- சு. மூர்த்தி, ஆசிரியர், காங்கயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT