Published : 05 Aug 2019 09:09 AM
Last Updated : 05 Aug 2019 09:09 AM

ஆயுளைக் குறைக்கும் காற்று மாசு! 

காற்று மாசு காரணமாக 2017-ல் மட்டும் உலக அளவில் சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் மக்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக காற்று மாசுதான் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த நிலைமையில் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் காற்று மாசு இந்தியரின் ஆயுட்காலத்தை சராசரியாக 2 ஆண்டு 6 மாதங்கள் வரை குறைத்துள்ளது என்று தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மகத்தான மருத்துவ முன்னேற்றங்களால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்ற கருத்துக்கு முற்றிலும் மாறாக இந்த ஆய்வு பதிவுசெய்துள்ள புள்ளிவிவரம் இந்திய மக்களை மட்டுமல்ல, மருத்துவத் துறையையே அச்சப்படுத்தியுள்ளது.

உலக அளவில் வெளிப்புறக் காற்றில் அதிகரித்துவரும் நுண்துகள்கள் இந்தப் பிரச்சினைக்கு வித்திடுகின்றன என்றால், இந்தியாவில் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசும் சேர்ந்துகொள்கிறது. இந்தியாவில் இப்போதும் சமைக்கவும், குளிர்காலங்களில் தங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் சுமார் 85 கோடிப் பேர் எரிபொருட்களைப் பயன்படுத்துவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

என்னென்ன பாதிப்புகள்?

காற்று மாசால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ததில் இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், நாள்பட்ட சுவாசத்தடை நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, கல்லீரல் நோய்கள், குறைப்பிரசவம் எனப் பலதரப்பட்ட பாதிப்புகள் வரக்கூடும் என்று தெரியவந்துள்ளது. காற்று மாசால் ஏற்படும் குறைப்பிரசவத்தால் மட்டும் உலகில் சுமார் மூன்றரைக் கோடி குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இனி மேல் இங்கு பிறக்கும் குழந்தைகள் வெளிப்புறக் காற்று மாசால் 18 மாதங்களும், உட்புறக் காற்று மாசால் 14 மாதங்களும், ஆக மொத்தம் 32 மாதங்களைத் தங்கள் வாழும் காலத்தில் இழக்க நேரிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போதிய சுகாதார அமைப்புகளோ நவீன தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்பது இதற்கு அடிப்படைக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

மாசுபட்ட காற்றால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள்தான் வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், காற்று மாசுபாட்டால், உடலில் எல்லா உறுப்புகளும் பாதிப்படைய சாத்தியக்கூறுகள் அதிகம். குறிப்பாக, மூளை தொடர்பான பிரச்சினைகளும், மனம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, குழந்தைகளே இந்தப் பாதிப்புகளுக்கு அதிகம் உள்ளாவதாக மருத்துவப் புள்ளிவிவரம் சொல்கிறது.

உதாரணத்துக்கு, மூளையில் ‘மையோ ஐனோசிட்டால்’ எனும் புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் அதிகம் சுரந்தால் மூளையில் அழற்சி ஏற்படும். ‘காற்று மாசிலுள்ள சில நச்சுப்பொருட்களால் மூளையின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, மையோ ஐனோசிட்டால் அதிகம் சுரக்கிறது. இதனால், மூளையில் அழற்சி ஏற்படுகிறது. அதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன’ என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, எதிர்கால இந்தியாவில் மனநலம் குறைந்தவர்களை அதிகம் காண முடியும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

புதிய கண்டுபிடிப்பின் அவசியம்

பொதுமக்கள் எரிபொருட்கள், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதும், சைக்கிள் மற்றும் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதும், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவதும் அவசியம். காற்று மாசைக் குறைப்பதற்குத் தற்போதுள்ள தொழில்நுட்ப உத்திகளால் பணமும் நேரமும் வீணாவதுதான் மிச்சம். அவற்றுக்குப் போதிய செயல்திறன் இல்லை என்பது உலக அளவில் விஞ்ஞானிகளை யோசிக்க வைத்திருக்கிறது. மேலும், வெளிப்புறக் காற்று மாசின் அளவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் வீட்டிலும் அலுவலகங்களிலும்தான் முடங்கிக்கிடக்கின்றனர். எனவே, முதலில் உட்புறக் காற்று மாசை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் காற்று மாசை 99% கட்டுப்படுத்தும் புதிய கருவி ஒன்றை இங்கிலாந்தில் உள்ள நோட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். உட்புறக் காற்றில் கலந்துள்ள மாசுப் பொருட்களை உறைய வைப்பதன் மூலம் இது சாத்தியம் என்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய கருவிக்கு ‘கிரையோஜெனிக் கன்டென்சர்’ (Cryogenic condenser) என்று பெயர். இந்தக் கருவி தனக்கு அருகில் வரும் மாசுப் பொருட்களை உறைய வைத்துக் காற்றில் பறப்பதைத் தடுத்துவிடும் என்பதால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காற்றில் கலந்திருக்கும் நுண்துகள்களைச் சிறைபிடித்துவிடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

காலத்தின் கட்டாயம்

ஒரு நீண்ட குழல் விளக்கு வடிவத்தில் இருக்கும் இந்தக் கருவி, தற்போது தனித்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வடிவத்தில் சில மாற்றங்களைச் செய்து, குளிர்சாதன இயந்திரங்களில் பொருத்திவிட்டால், காற்று மாசுகளை உறைய வைத்து, எளிதில் வடிகட்டி அகற்றிவிடலாம்; அதன் மூலம் உட்புறக் காற்றையும் சுத்தப்படுத்திவிடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கருவிக்குப் பலத்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இதை இறக்குமதி செய்யும்போது விலை ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடும். ஏழை, எளியவர்களுக்கு இது எட்டாமல் போய்விடும். எனவே, நம் விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- கு.கணேசன், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x