Last Updated : 07 Jul, 2015 10:29 AM

 

Published : 07 Jul 2015 10:29 AM
Last Updated : 07 Jul 2015 10:29 AM

அறிவியல் உலகிலும் பாலியல் பாகுபாடு!

ஏதேனும் மூன்று தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பெயர்களைச் சொல்லும்படி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவர் உதிர்க்கும் பெயர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், ஜெஃப் பெசாஸ், லாரி பேச், செர்கே பின் இப்படியாகத்தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட ஒரு பெண்ணின் பெயரை அவர் சொல்லப்போவதில்லை.

தொழில்நுட்பம் என்பதே ஆண்களின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. உலகின் முதல் புரொகிராமர் ஒரு பெண். அறிவியல்ரீதியாகக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தவர் ஒரு பெண். அவர்தான் அடா லவ்லேஸ். அதே போல நெட்வொர்க் கம்பியூட்டிங்கில் அடிப்படையான ஸ்பானிங் ட்ரீ புரோட்டோகாலைக் கண்டுபிடித்தவர் ராடியா பெர்ள்மேன். அவ்வளவு ஏன், இணையதள புரோட்டோகாலைக் கண்டுபிடித்ததே ஜுடித் எஸ்ட்ரின் எனும் பெண்மணிதான்.

லவ்லேஸ், பெர்ள்மேன், எஸ்ட்ரின் என்பவை நாம் கேள்விப் படாத பெயர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன? எத்தகைய உள்நோக்கமும் இன்றி வெறும் கவனக்குறைவினால் விடுபட்டுப்போன பெயர்களா இவை? அப்படி ஒருபோதும் நம்பிவிட வேண்டாம் என வாதாடுகிறது ‘லீன் அவுட்: தி ஸ்டிரகிள் ஃபார் ஜெண்டர் ஈகுவாலிட்டி இன் டெக் அண்ட் ஸ்டார்ட்-அப் கல்சர்’ எனும் புத்தகம். அமெரிக்கப் பெண் தொழிலதிபரான எலீசா ஷவின்ஸ்கி, பல்வேறு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களின் 25 கட்டுரைகளைத் தொகுத்து இப்புத்தகத்தைப் படைத்துள்ளார். அடுத்த மாதம் இந்நூல் வெளிவர உள்ளது.

‘இணையத்தை உருவாக்கியவர்கள் ஆண்களே!’ என ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளிவந்த சர்ச்சைக்குரிய கட்டுரையின் வரிகளை எழுதிவிட்டு, அதன் அருகிலேயே ‘இந்தக் கட்டுக்கதை அப்பட்டமான பொய்’ என்ற வாசகத்துடன் இந்நூலைத் தொடங்குகிறார் ஷவின்ஸ்கி. “ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் அளப்பரிய பங்காற்றியவர்கள் பெண்களே. அவர்களுடைய பங்களிப்புகளைத் தடயமின்றி அழித்துவிட்டார்கள் மார்க் சக்கர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஆண்கள். அவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியுலகுக்கு உரக்கச் சொல்வதுதான் ‘லீன் அவுட்’ எனும் இப்புத்தகத்தின் நோக்கம்.

எலீசா ஷவின்ஸ்கியின் ‘லீன் அவுட்’ புத்தகம் ஃபேஸ்புக் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்கின் எழுத்துக்கு விடப்பட்ட சவால் எனலாம். ஷெரில் சாண்ட்பர்க் எழுதி பரபரப்பாக விற்பனையான நூல் ‘லீன் இன்: விமன், வொர்க், அண்ட் தி வில் டூ லீட்’. இதில் பெண்கள் பணியிடங்களில் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்களேயன்றி, சமூகக் கட்டுப்பாடோ அரசியல் சூழ்ச்சியோ அல்ல என்றார் சாண்ட்பர்க். குடும்பத்துக்காக உழைக்கப் பிறந்தவர்கள்தான் பெண்கள் எனத் தங்களைப் பற்றித் தாங்களே நினைத்துக்கொள்பவர்கள் பெண்கள்தான். இதனால்தான் அவர்களால் தொழில்ரீதியாக உச்சத்தை எட்ட முடிவதில்லை. இதற்குத் தீர்வு பெண்கள் அவர்களுடைய தொழிலில் மூழ்க வேண்டும். ஆனால், ஷெரில் முன்வைக்கும் இந்தக் கூற்றை ‘லீன் அவுட்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முற்றிலுமாக மறுக்கின்றன.

கற்பனையான திறமைசாலிகள்

‘வெள்ளை நிற ஆண் தொழிலாளர்கள் மட்டுமே முன்னுதாரணமான தொழில்நுட்ப மேதைகள்’ எனும் நம்பிக்கையை அடித்து நொறுக்குகிறார்கள் ‘லீன் அவுட்’ புத்தகத்தின் கட்டுரையாளர்கள். அவர்களில் ஒருவர்தான் ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட விளிம்பு நிலையினரின் உரிமையை விவாதிக்கும் பெண்ணியவாதியான கேத்தரின் கிராஸ். பணிச் சூழலில் பாலியல் பாகுபாட்டை விவாதப் பொருளாக்குகிறது கேத்தரின் கட்டுரை. மேலோட்டமான பார்வைக்கு பால், நிற வேறுபாடு அற்ற ஆரோக்கியமான தளம்போலத் தொழில்நுட்ப உலகம் தோன்றலாம். ஆனால், அதன் பிறப்பிடமே ஆணாதிக்கம்தான் என்கிறார் கேத்தரின்.

அடுத்தபடியாக, ஜெஸ்சே ஹாஸின் ‘பாலுறவுப் பாகுபாடுபற்றிப் பேசலாம் வாங்க!’ எனும் கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் 96.5% பேர் ஆண்களே என்கிறார் ஜெஸ்சே. அது ஏன் என்பதைக் காட்டும் சம்பவம் இதோ. “ஹே ஜி, உன்னுடன் உடலுறவு கொள்ளாமல் நான் பெர்லினை விட்டுப் போக மாட்டேன். என்ன சொல்கிறாய்?”- இப்படி பெர்லினில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கம் ஒன்றில் ஒரு பெண் பங்கேற்பாளரிடம் ஒரு பெரும்புள்ளி முதலீட்டாளர் கேட்டார்.

இதில் ‘ஜி’என்பது ஜெஸ்சே ஹாஸ்தான். அதிகாரம் செலுத்தும் கருவியாகப் பாலியல் எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக விவாதிக்கிறார் ஜெஸ்சே. பாலியல் துன்புறுத்தல் அதன் ஒரு முகம் மட்டுமே என்கிறார் அவர். இப்படிப் பல காரணங்கள் பணிச் சூழலில் பெண்களின் வேலையை, பதவி உயர்வை, இழப்பீட்டை நிர்ணயிக்கின்றன.

ஆண் புரொகிராமர்களின் கலாச்சாரம், இணைந்து வேலைபார்க்கும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்சினைகள் இப்படி ஆழமான தனிப்பட்ட அனுபவங்களையும் பரந்துபட்ட சிக்கல்களையும் பேசுகின்ற கட்டுரைகளின் தொகுப்பாக ‘லீன் அவுட்’ புத்தகம் உள்ளது. சேண்ட்பர்க்கின் ‘லீன் இன்’ புத்தகத்துக்கு நேர் எதிர்த் திசையில் ஷெவின்ஸ்கியின் ‘லீன் அவுட்’ புத்தகம் நிற்பதற்கு முக்கியக் காரணம், ஷெவின்சி பெண்களை வெளியே அழைக்கிறார்.

தங்களுக்கு உண்மையாக இருக்கும்படி அழைப்புவிடுக்கிறார். ஆண்கள் வடிவமைத்து அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலுக்குள் பெண்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ளக் கூடாது. இனியும் மவுனம் சாதிக்காமல் வாய்விட்டுப் பேச வேண்டும். பிரச்சினையைத் தவிர்க்காமல் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். ஆண் பிள்ளைகளில் ஒருவராக இல்லாமல், தெறித்து வெளியே வர வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார் ஷெவின்ஸ்கி.

அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியை மனதில் வைத்து எழுதப்பட்ட நூலாக ‘லீன் அவுட்’ இருந்தாலும் அதன் விவாதப் பொருள் இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகுக்கும் பொதுவானதுதான்.

கொஞ்சமும் சளைக்காத இந்தியா

இந்தியாவின் தொழில்நுட்பக் கலாச்சாரமும் இதே போன்றுதான் உள்ளதா? இதற்கு சரியான பதில், இந்தியப் பெண் தொழில்நுட்பத் தொழிலதிபர்களிடம்தான் கிடைக்கும். ஆனால், அவர்களுடைய பதில் குழப்பமடையச் செய்கிறது.

“நிச்சயமாக! இந்தியாவில் நடத்தப்படும் பெருவாரியான தொழில்நுட்பச் சந்திப்புகள் ஆண்களால் நிரம்பிவழிகின்றன. ஒரு பெண் பேச்சாளர்கூட இல்லாமல் எப்படித் தொழில் கூட்டங்கள் நடத்த முடியும் என நான் அடிக்கடி கேட்பதுண்டு” என்கிறார் மேட் ஸ்ட்ரீட் டென் எனும் நிறுவனத்தின் துணை இயக்குநரான அஷ்வினி அசோகன். ஒன்பது வருடங்களாக சிலிகான் வேலியில் வேலை பார்த்த அனுபவம் மிக்க அஷ்வினி தொழில்நுட்ப அலுவலகச் சூழலைப் பொறுத்தவரை மேற்கத்திய நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. ஆனால், அது வெளிப்படையாக இல்லை என்கிறார்.

“குறிப்பாக, இந்தியாவில் சமத்துவத்தை நிலை நாட்ட யாரும் போராடுவதில்லை. எங்களுடைய மிகப் பெரிய பிரச்சினையே எப்படி வீட்டை விட்டு வெளியே வருவது என்பதுதான்” என்கிறார்.

அஷ்வினியின் கூற்றை வழிமொழிகிறார் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநரான பெங்களூருவைச் சேர்ந்த மைனா பிசிநீர். “இந்தியாவைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டு, வேலையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே பெரும் எண்ணிக்கையில் பெண்கள் இடைநின்றுபோகும் நிலை உள்ளது. அடுத்து, திருமணம் ஆனதும் மேலும் பலர் இடைநின்றுபோகிறார்கள். அடுத்து, குழந்தை பெற்றவுடன் மிக அதிக எண்ணிக்கையில் வேலையிலிருந்து இடைநின்றுபோகும் நிலை உள்ளது. ஆகையால், பணியிடத்தில் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கையே மிகவும் சொற்பம்தான்.”

அஷ்வினியும் மைனாவும் ஒருசேர ‘லீன் அவுட்’ வெளிப்படுத்தும் தத்துவத்தை முன்மொழிகிறார்கள். ஆனால், அதற்குத் தொழில்துறையின் தற்காலப் பணிச் சூழல் முதலில் மாற்றப்பட வேண்டும். அப்படியானால் எங்கிருந்து தொடங்குவது?

“முதலாவதாக, உங்கள் அலுவலகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கென்று ஒரு அறை ஏற்படுத்திக் கொடுங்கள். இரண்டாவதாக, குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள். மூன்றாவதாக, தொடர்ந்து அலுவலக நிகழ்ச்சிகள் நடத்தும்போது அவை பகல் வேளைகளில் நடத்தப்பட வேண்டும். நான்காவதாக, அலுவலகக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினராவது அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்” என்கிறார் அஷ்வினி.

இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை கூகுள் மற்றும் இண்டெல் நிறுவனங்கள் எடுத்துள்ளன என்பது நம்பிக்கை தரும் செய்தி. ஆனால், சுந்தர் பிச்சையும் சுந்தரியும் ஒரே ஆடுகளத்தில் விளையாட நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x