Published : 07 Mar 2015 10:30 AM
Last Updated : 07 Mar 2015 10:30 AM

கழிப்பறை சீர்திருத்தம்

பள்ளிகளில் கழிப்பிட வசதிகள்பற்றிய தலையங்கம் உடனடி நடவடிக்கைக்கு உரியது. கல்வி விதிகள் மிகத் தெளிவாகக் கழிப்பிட வசதிகளை வரையறுத்துள்ளன.

ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னரும் வெகு ஆண்டுகள் வரை சென்னை மாகாணத்தில் பள்ளிக் கல்வி அளிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்குமே அளிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகளும், ஒரு சில இஸ்லாமிய மகளிருக்கான பள்ளிகளும் மட்டுமே கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அரசே நேரடிப் பொறுப்பேற்க முன்வந்தபோது, அன்றைய கல்விச் செயலர் “ஆய்வாளரும் நிர்வாகியும் ஒருவராகவே இருக்கக் கூடாது. ஆய்வாளர் பள்ளிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அதனை நேர் செய்வது நிர்வாகியின் கடமை. இரு பொறுப்புகளும் ஒருவரிடமே இருந்தால் பள்ளிகளின் வளர்ச்சி தேயும். குறைகள் மலியும்” என்று அத்திட்டத்தை எதிர்த்தார்.

பல்வேறு காரணங்களுக்காக அரசே எல்லா உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளையும் மேற்கொண்டதன் விளைவே, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிகளுக்குக் காரணம். பள்ளிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கும்போதே கல்வி விதிகளில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.

விடுபட்டவை சுட்டிக்காட்டப்பட்டால் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். டி.எம்.ஏ.பை தீர்ப்பில்(1995) உச்ச நீதிமன்றம், பள்ளி தொடங்க முன் அனுமதி தேவையில்லை, எந்த இந்தியக் குடிமகனும் கல்விக்கூடங்களைத் தொடங்க அடிப்படை உரிமை உண்டென்று அளித்த தீர்ப்பின் காரணமாகக் குறைபாடுகள் நிறைந்த கல்விக்கூடங்கள் பல்கிப் பெருகின. காலத்தே செய்திருந்தால் அதிக நிதி தேவைப்பட்டிருக்காது.

பல்லாண்டு சீரழிவின் காரணமாக, இன்று பல கோடி தேவைப்படும் நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x