Last Updated : 07 Nov, 2014 08:25 AM

 

Published : 07 Nov 2014 08:25 AM
Last Updated : 07 Nov 2014 08:25 AM

கமல்: தமிழ் சினிமாவின் ராஜபார்வை

கமலுக்கு 60 வயது. நம்புவதற்கு மனம் மறுக்கிறது. நம்மில் 30 வயதைக் கடந்தவர்களில் ஆரம்பித்து 60 வயதை எட்டியவர்கள் உட்பட பலருடைய இளமைப் பருவத்துக் கனவுகளின், காதலின், சாகசத்தின் திரைவடிவமாக உலவிய ஒருவருக்கு 60 வயது ஆகிவிட்டது என்பது நம் இளமைக்கு எதிராகக் காலம் செய்த சதி என்றுதானே சொல்ல வேண்டும்! அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினருக்கு உவப்பானவராக கமல் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளிட்ட பலரின் இளமைக் காலமல்லவா கமல்!

தன்னுடைய 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி, தற்போதைய ‘பாபநாசம்’ வரையிலான 54 ஆண்டு காலப் பயணம் என்பது குறுகிய காலம் அல்ல. அப்போது சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’ பார்த்த ஒருவர், இப்போது ‘பாபநாசம்’ படத்தைப் பார்க்க, தன் பேரன், பேத்திகளோடு போகக் கூடும். இந்த நீண்ட காலகட்டத்தில் (சிறுவனாக நடிக்க ஆரம்பித்து, பதின்பருவம் வரையிலான காலம் நீங்கலாக), கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில், தமிழர்களின் வாழ்க்கையில் கமல் தவிர்க்க முடியாத ஒரு பாகமாக இருந்துவந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகச் சிலர்தான் அந்தத் தலைமுறையின் நினைவுகளின் தொகுதியாக இருப்பார்கள். அந்த வகையில் கமல் இரண்டு தலைமுறைகளின் நினைவு.

புதுமையின் நாயகன்

தமிழ்த் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் கமலும் புதுமையும் பிரிக்க முடியாத இரண்டு பெயர்கள். நாடக மரபிலிருந்து வந்தவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் வெகு காலமாக ஆட்சிசெய்துகொண்டிருந்ததால், கமலின் வருகைக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களெல்லாம் நாடகங்களாகவே இருந்தன. கமலும் நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். ஆனாலும், மாறும் காலத்தின் ஒரு பிரதிநிதி அவர். அவர் திரைத் துறையில் நட்சத்திரமாக வலம்வர ஆரம்பித்த காலத்தில் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கியது பெரும் வியப்பு. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் களமிறங்கிய காலத்தில்தான் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது. மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள். அவர்களால் கமலும், கமலால் அவர்களும் பலனடைந்தார்கள்.

கமல் தரும் பொறி

நடிப்பு மட்டுமே திரைப்படம் இல்லை என்பதை அறிந்திருந்ததால், திரையுலகின் பெரும்பாலான துறைகளில் கமலுக்குத் தேர்ச்சி இருந்தது. காலம்தோறும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே வந்தார். தான் கற்றுக்கொண்டதைத் திரையிலும் பிரதிபலித்தார். இந்தப் புதுமைகள் வழியாகத் தனது ரசிகர்களின் அறிவையும் ரசனையையும் மேலே மேலே கொண்டுசென்றபடியே இருக்கிறார் கமல். ‘ஓடிவிளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாடல்களைத் தாண்டி, பாரதியின் பாடல்கள் பரிச்சயமாகாதிருந்த பலருக்கு ‘மகாநதி’யில் கமல் சொன்ன ‘தேடிச் சோறு நிதம் தின்று’ கவிதை பாரதி மீது பைத்தியம் கொள்ள வைத்தது. இப்படியாகப் பல விஷயங்களில் கமல் ஒரு பொறியைத் தருவார். அந்தப் பொறியை ஊதி ஊதிப் பெரும் தீயாகப் பெருக்கும் ஒருவர், ஒரு கட்டத்தில் கமலை விட்டு விலகிப் போய்விடுவார் என்பது நியதி. அதேபோல், கமல் கொடுத்த பொறியையே பெரிதாக நினைத்துக்கொண்டிருப்பவர் கமல்தான் உலகின் உச்சம் என்று கருதுவார்.

கமலின் விருந்து

தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கமலின் திரைப்படங்களோடு கழித்த ஒருவருக்குச் சந்தேகமில்லாமல் கமல் பெரும் விருந்தே படைத்திருக்கிறார். இதில் வெகுஜன திரைப்படம், கலைத்தரம் மிக்க வெகுஜனத் திரைப்படம், மாற்றுத் திரைப்பட முயற்சிகள் எல்லாமே அடங்கும். இந்த மூன்று வகைகளிலும் கமல் ரசிகர்களுக்கு அதிகமாகத் தீனி போட்டவை என்று இந்த 20 படங்களைக் குறிப்பிடலாம்: 16 வயதினிலே, அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, நினைத்தாலே இனிக்கும், ராஜபார்வை, சகலகலா வல்லவன், சலங்கை ஒலி, நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி.

கமலால் ஏன் முடியவில்லை?

உலக சினிமா எல்லோருடைய பென் டிரைவுக்குள்ளும் வந்துவிட்டது. எனவே, எல்லோருமே சினிமா விமர்சகராக மாறி, கமலைக் குறைகூறுவது வழக்கமாகிவிட்டது. சராசரி ரசிகர்களுக்கு உலக சினிமா எட்டாமல் இருந்த காலத்தில்சினிமா ரசனையையும் உலக சினிமாவையும் பற்றி, வெகுஜன சினிமாவுக்குள்ளேயிருந்து பேசிக்கொண்டிருந்த ஒருசிலருள் கமலும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது.

‘முழுக்க உலகத் தரத்திலான ஒரு திரைப்படத்தை கமலால் ஏன் எடுக்க முடியவில்லை?’ என்பதுதான் அவருடைய விமர்சகர்கள் பெரும்பாலானோருடைய கேள்வி.

இது போன்ற கேள்வியை அவர்கள் அநேகமாக கமலிடம் மட்டுமே எழுப்பினார்கள் என்பதைக் கொண்டு அதை ஒரு ஆதங்கமாகவும், கமல்மீது உள்ள உரிமையில் எழுந்த கோபம் என்றும் கருத முடியும்.

கலைப் படங்களை எடுக்க விரும்பியவர் அல்ல கமல். கலைப் படங்களை உள்வாங்கிக்கொள்ளும் கலாச்சாரங்களில் ஒன்றோ, கலைப்படங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடுகளில் ஒன்றோ அல்ல நம்முடையது. சிறுபான்மையினராக இருக்கும் அறிவுஜீவிகள் சினிமாவைத் தூய்மையான கலை வடிவமாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கோ சினிமா என்பது கொண்டாட்டம், துயரங்களின் வடிகால், கனவுகளின் பதிலீடு. இங்குதான் கமல் வருகிறார். வெகுமக்களைத் தூக்கியெறிந்து

விடாமல் அவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பார்க்கும் வெகுஜனத் திரைப்படங்களுக்குக் கலையம்சத்தைக் கூட்டினார் அவர். இதில் வெற்றியும் தோல்வியும் சரிபாதி கிடைத்திருக்கிறது அவருக்கு. தமிழில் ஜனரஞ்சகத் திரைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சூழலில், கமல் அதன் அடுத்த கட்டமே தவிர, உச்சக்கட்டம் அல்ல. அதைச் செய்ய வேண்டியவர்கள் அடுத்தடுத்து வருபவர்கள்தான்.

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x