Published : 10 Aug 2016 02:55 PM
Last Updated : 10 Aug 2016 02:55 PM

இரு சகாப்தங்களும் மாமருந்தும்

'தி இந்து' பிறந்த கதை அருமை. கட்டுரையில் இரு சகாப்தங்களைப் பற்றி வெளியிட்டதற்கு நன்றி. அதில், 'தேவைப்பட்டால் உறவினர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. 'தி இந்து' அதை இன்றளவும் பின்பற்றிவருகிறது, வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு.

- சிவா, நாகர்கோவில்.

*

அடக்குமுறையைத் தாண்டிய தேசப் பற்று, சரியாத தன்னம்பிக்கை, சக பத்திரிகைகளுக்கும் உற்றுழி உதவும் பண்பு, காலத்துக்கேற்ற வகையில் தன்னை மாற்றிக்கொண்டு, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவாற்றல், எடுத்த கொள்கையில் மாறாதிருக்கும் திண்ணிய மனம், எதையும் சீர்தூக்கி..

நடுநிலை தவறாதிருக்கும் நேர்மை, செய்திகளை அவசரம் கருதாது அவசியம் கருதி வெளியிடும் பொறுமை, நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்றலில் முதன்மை, தேர்ந்த நிர்வாகத் திறன் என்பவை போன்ற, ஒரு நல்ல குடிமகனுக்கும், ஆட்சியாளருக்கும் இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற, 'தி இந்து' பத்திரிகையின் பிதாமகன்களைப் பற்றிய விரிவான கட்டுரை, இன்றைய இளைய தலைமுறையினருக்கு, வழிகாட்டியாகவும், மனச் சோர்வைப் போக்கும் மாமருந்தாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- அ.மயில்சாமி, கண்ணம்பாளையம்.

*

பண்பாளர்களின் பாதையில்…

இந்துவின் >இரு சகாப்தங்கள் பற்றி வெளிவந்துள்ள கட்டுரை, இன்று நாங்கள் பார்க்கும் பிரம்மாண்ட ஆலமரத்தின் வேர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. படிக்கும்போது பரவசமாய் உணா்ந்தேன். ஆரம்பகால இடர்பாடுகள், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் செயல்படுத்தியது, தொழிலாளா் நலனுக்கு முக்கியத்துவம், மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் போன்ற நல்லியல்புகளை அறிந்துகொண்டேன்.

அதன் நடுநிலையாலேயே அது மக்களின் பத்திரிகை என்று பெயர் பெற்றது. இன்றளவும் அது மாறாமல் இருப்பது முன்னோர்கள் வகுத்தளித்த பாதையில் தடம் மாறாமல் பயணிப்பதுதான்.

- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி.

*******************

களங்கமில்லா மெட்றாஸ்

மெட்றாஸ் பற்றிய தொடர் ஆரம்பமே மவுன்ட் ரோடு புகைப்படத்துடன் மனத்தைக் கவரும்படியாக இருந்தது. மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் டி.டி.கே.வின் மறுபக்கத்தைச் சுவையோடு விளக்கியிருக்கிறார் எஸ்.முத்தையா. ஒவ்வொரு வாரமும் சென்னையின் அரிய, பழைய புகைப்படங்கள், மெட்றாஸ் மாகாணத்துக்குப் புகழ் சேர்த்த தலைவர்கள் பற்றியும் இப்போதைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வழி செய்திருக்கிறீர்கள்.

இந்தத் தொடர் சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற இடங்களில் உள்ளவர்கள் நெஞ்சிலும் மெட்றாஸைப் பற்றி நிழலாடும் நினைவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

*

ஜிஎஸ்டி வரி

இந்தியா போன்ற கலப்புப் பொருளாதார நாட்டுக்கு ஜிஎஸ்டி வரி சரிவருமா என்பது தெரியவில்லை. பல வகையான மறைமுக, நேர்முக வரிகளுக்கு மாற்றாக, ஒரே வரியாக ஜிஎஸ்டி அமைந்தாலும், அதனால் பல பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இதை அமல்படுத்துவதால் தற்காலிகமாக ஏற்படவிருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளனவா என்று தெரியவில்லை. பல வரிகள் ரத்து ஆவதன் மூலம், மாநில அரசுகள் வருவாய் இழப்பை ஈடுகட்ட என்ன செய்யப் போகின்றன? இது பற்றியெல்லாம் சிந்திக்குமா மத்திய அரசு?

- எம்.விக்னேஷ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x