Last Updated : 17 Dec, 2013 09:36 AM

1  

Published : 17 Dec 2013 09:36 AM
Last Updated : 17 Dec 2013 09:36 AM

கணினித் தமிழ் வளர்ச்சி

மனித மூளையின் வியக்கத் தக்க படைப்புகள்தான் மனிதரின் இயற்கைமொழிகள். ஒரு குழந்தைக்கு அதனுடைய வளர்ச்சியில், நடக்கும்திறன் எவ்வாறு தானாகவே வளர்ச்சியடைகிறதோ, அவ்வாறே மொழித்திறனும் வளர்ச்சியடைகிறது.

தேவையான மூளை வளர்ச்சியும் செவித்திறனும் உடைய எந்த ஒரு குழந்தையும் தான் பிறந்து வளர்கிற சமூகத்தின் மொழியை தாய்மொழியை- குறைந்த அனுபவத்தில் குறைந்த காலத்தில் பெற்றுக்கொள்கிறது என்பது நோம் சாம்ஸ்கியின் கருத்து.

மொழித் தொழில்நுட்பம்

மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித சமுதாயம் தொடர்ந்து முயன்றுவந்துள்ளது. அதன் ஒரு பயனே இயற்கைமொழிகளுக்கான வரிவடிவங்கள். மொழியின் எழுத்து வடிவம் என்பது மனிதன் உருவாக்கிய முதல் மொழித்தொழில்நுட்பமாகும். தனது கருத்துகளைக் காலம் கடந்து, இடம் கடந்து நிலைத்து வைக்க மனித சமுதாயம் உருவாக்கிய தொழில்நுட்பமே எழுத்து மொழி. பானைகள், பாறைகள், கற்கள், ஓலைச்சுவடிகள் என்று பல ஊடகங்களில் மனிதன் தனது கருத்துகளைப் பொதிந்துவைக்கத் தொடங்கினான். அதன் இன்றைய வளர்ச்சியே , தட்டச்சு , அச்சு மற்றும் கணினி எழுத்துருக்கள் ஆகும்.

மின்தமிழ்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி கிடையாது. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. முதலில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதிகள் உருவாக்கப்பட்டால்தானே பிற பயன்பாடுகளை எண்ணிப் பார்க்க முடியும். பின்னர், மெல்லமெல்லத் தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. ஆதமி போன்ற மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் எழுத்துகளுக்கான எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.

அடுத்தகட்ட வளர்ச்சியாக , தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன் பயனாக, நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது. வோர்ட், வோர்டுபெர்ஃபெக்ட், வோர்டு ஸ்டார், பேஜ்மேக்கர், வெஞ்சுரா போன்ற மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டது.

இருப்பினும், தமிழ் எழுத்துருக்களைக் கணினியில் குறியேற்றம் செய்வதில் பல சிக்கல்கள் நீடித்தன. தமிழ் எழுத்துருக்களுக்கான குறியேற்றத்தில் தரப்படுத்தல் இல்லாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட தமிழ்மென்பொருளைக் கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை மற்றொரு தமிழ் மென்பொருளைக்கொண்டு வாசிக்கவோ, பதிப்பிக்கவோ இயலாத ஒரு நிலை நீடித்தது. இதற்கு அஸ்கி (ASCII) என்ற குறியேற்ற முறையும் ஒரு தடையாக அமைந்தது. தமிழ் விசைப்பலகைகளும் தரப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் தமிழில் இணையதளங்கள், வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சில் இடம்பெற்ற அனைத்தும் கணினியிலும் இடம்பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்குறிக் குறியேற்றம் (யூனிகோட் என்கோடிங்) பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழுக்குத் தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதன் பயனாக, தற்போது மின்னணுச் சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தடை எதுவும் கிடையாது. கைபேசியில்கூட தமிழைத் தற்போது உள்ளீடு செய்து, அனைத்துப் பயன்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.

அடுத்த கட்ட வளர்ச்சி

கல்வெட்டு, ஓலைச்சுவடி, தட்டச்சு, அச்சுப்பொறி, கணினி ஆகியவற்றில் இதுவரை நாம் பார்த்த தமிழ் மொழித் தொழில்நுட்பமானது, தமிழ் உரை அல்லது பனுவலை அவற்றில் பொதிந்து அல்லது பதிந்து வைக்கப் பயன்பட்ட தொழில்நுட்பமே; காலம் கடந்து, இடம் கடந்து, தமிழ்ப் பனுவல்களைச் சேமித்துவைக்கப் பயன்பட்ட மொழித்தொழில்நுட்பமே. கல்வெட்டாலோ ஓலைச்சுவடியாலோ அச்சாலோ கணினியாலோ தங்கள்வழி அல்லது தங்கள்மீது பதியப்பட்ட தமிழ்ப் பனுவலை அல்லது உரையைப் புரிந்து கொள்ள முடியாது. பதியப்பட்டவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து மட்டுமே வைக்க முடியும்.

இந்த வகை மொழித்தொழில்நுட்பத்தைத் தன்முனைப்பில்லா / செயலூக்கமில்லா மொழித்தொழில்நுட்பம் என்றழைக்கலாம். இத்தொழில்நுட்பமானது ஒரு உருவத்தைச் சிலையில் செதுக்கிவைப்பது போன்றதாகும் இது. உருவம் பொறிக்கப்பட்டுள்ள அசையாச் சிலையானது தன்னைப் புரிந்துகொள்ளாது. நாம் சொல்வதைப் புரிந்துகொண்டும் செயல்படாது.

கணினியானது தன்மீது பதியப்பட்ட தமிழ் உரையை நாம் புரிந்துகொள்வதுபோல புரிந்து கொண்டால், புரிந்துகொண்டு செயல்பட்டால், அதுவே தன்முனைப்புள்ள அல்லது செயலூக்கமுள்ள மொழித்தொழில்நுட்பம். இது ஒரு இயந்திர மனிதன் போன்றது. இயந்திர மனிதன் ஏதோ ஒரு வகையில் நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறான் அல்லவா, அதுபோல நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படும் மொழித்தொழில்நுட்பமே இது. இந்த வகை மொழித்தொழில்நுட்பமும் தற்போது ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மேலைநாட்டு மொழிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இயந்திர மொழிபெயர்ப்பு...

எம் எஸ் வோர்டு போன்ற ஆங்கிலச் சொல்லாளர் மென்பொருட்களைக்கொண்டு ஆங்கில உரையைத் தட்டச்சு செய்யும்போது, எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் உடனே அவை கண்டறியப்பட்டு, சிவப்புக் கோடு இடப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாம் உடனே அவற்றைத் திருத்திக்கொள்ள அந்த மென்பொருட்கள் சரியான சொற்களை அளிப்பதன்மூலம் உதவியும் செய்கின்றன. அதாவது, மொழி ஆசிரியர் செயல்படுவதுபோன்று இந்த மென்பொருள்களும் செயல்படுகின்றன. ஆசிரியர் பெற்றிருக்கும் மொழி அறிவை இந்த மென்பொருட்களும் பெற்றிருப்பதால், இவ்வாறு செய்ய முடிகிறது. தானியங்கி சொற்பிழைத் திருத்தி, இலக்கணப்பிழைத் திருத்திகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

டிராகன் போன்ற சில மென்பொருட்கள் நாம் ஆங்கிலத்தில் கணினிமுன் பேசினாலே போதும், அவையே கணினியில் தட்டச்சு செய்துவிடுகின்றன. இதைப் பேச்சு எழுத்து மாற்றி என்று அழைக்கின்றனர். இதுபோன்று, கணினியில் உள்ளதை அப்படியே நமக்கு வாசித்துக் காட்டும் மென்பொருட்களும் உள்ளன. இவற்றை எழுத்து பேச்சு மாற்றி என்று அழைக்கின்றனர். இதையும் தாண்டி, சில பக்கங்களைக் கணினியில் உள்ளீடு செய்தால், அவற்றில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டு, நமக்குக் கூறும் மென்பொருட்களும் இருக்கின்றன. இதைப் பனுவல் சுருக்கக் கருத்துருவாக்கம் என்று அழைக்கின்றனர். தற்போது ஒரு மொழியில் உள்ள உரை அல்லது பனுவலை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் மென்பொருளை உருவாக்குவதற்கான முயற்சியும் நடைபெற்றுவருகின்றன.

இவையெல்லாம் மேலைநாட்டு மொழிகளுக்கு எவ்வாறு சாத்தியமாகியுள்ளன? அம்மொழிகளின் சொற்களஞ்சிய அறிவும், இலக்கண அறிவும் கணினிக்கு நிரல்களாக உருவாக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, நமது மூளை எவ்வாறு மொழியைப் புரிந்துகொண்டு செயல்படுகிறதோ, அவ்வாறே கணினியும் புரிந்துகொண்டு செயல்படுகிறது. நமது மூளைக்குள் நமது மொழியின் அறிவு இருப்பதால்தான் மூளைக்கு நாம் பேசுவதும், எழுதுவதும் புரிகிறது; நாம் நினைக்கும் கருத்துகளை மொழியில் வெளிப்படுத்தவும் முடிகிறது. இந்த மொழியறிவு கணினிக்கு நிரல்களாகக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மேற்சொன்ன மொழித்தொழில்நுட்பம் வளரும்.

தமிழில் முடியுமா?

மேற்கூறிய மொழித்தொழில்நுட்பம் எல்லாம் தமிழ்மொழிக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவடையும். தமிழ்மொழி அறிவைக் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் கணித முறையில்- அளித்தால்தான் இப்பணி வெற்றியடைய முடியும். அதற்கான துறையாகக் கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில்நுட்பத்துறை என்ற ஒரு துறை இன்று வளர்ந்துவருகிறது. அத்துறை அறிவின் அடிப்படையில் தமிழ்மொழி ஆய்வு நடைபெற்றால்தான் மின்தமிழ் கணினித்தமிழ் வளர்ச்சியடையும்.

இலக்கண நூல்களும் இன்றைய மொழியி யல் ஆய்வுகளும் மனித மூளைக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே கணினிக்குக் கொடுத்தால், கணினியால் புரிந்துகொள்ள முடியாது. கணினியில் அமைந்துள்ள மின்னணுச் சில்லுகளுக்குப் புரியக்கூடிய கணினிநிரல்களாக அவை மாற்றப்பட வேண்டும். தமிழ் அகராதிகள் எல்லாம் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் மின்னகராதிகளாக மாற்றப்பட வேண்டும். மனித மூளையின் திறன் வேறு. கணினியின் திறன் வேறு. பின்புல அறிவைக் கொண்டு நமது மூளையால் ஒரு கருத்தைச் சுருங்கச்சொன்னாலும் மறைமுகமாகச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கணினியால் அவ்வாறு முடியாது. எனவே தமிழ் இலக்கணமும் அகராதியும் கணினியின் புரிந்துகொள்ளும் முறைக்கு ஏற்ற வடிவில் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றைய தலையாய பணி

இன்று மின்தமிழ் வளர்ச்சியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கத்தில் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. அதையொட்டி, தமிழ் விக்கிபீடியா, வலைப்பூக்கள், இணைய தளங்கள் பெருகிக்கொண்டி ருக்கின்றன. இவையெல்லாம், வரவேற்கத்தக்க தமிழ்ப்பணிகள். ஆனால் இவையெல்லாம் கணினித்தமிழ் வளர்ச்சியின் முதல்கட்டமே ஆகும். முன்னர் கூறிய தன்முனைப்பில்லா / செயலூக்கமில்லா மொழித்தொழில்நுட்பமே இவை. இந்த முதல் கட்டத்தைத் தற்போது நாம் தாண்டிவிட்டோம். இனி அடுத்தகட்ட வளர்ச்சியான தன்முனைப்புள்ள / செயலூக்கமுள்ள மொழித்தொழில்நுட்பத்தைநோக்கி நம் பணி அமைய வேண்டும்.

முனைவர் ந. தெய்வ சுந்தரம், மேனாள் தமிழ்மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: ndsundaram@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x