Published : 10 Mar 2017 10:26 AM
Last Updated : 10 Mar 2017 10:26 AM

இப்படிக்கு இவர்கள்: கடும் நடவடிக்கை வேண்டும்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் படித்து அதிர்ச்சியடைந்தேன். இதுவரையில், எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறிவந்ததையடுத்து, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும், அவர்களுடைய மீன் பிடிப் படகுகள் முதல் உபகரணங்கள் வரை பறிமுதல் செய்யப்படுவதும் நடந்தது. பிறகு, தமிழக அரசு கடிதம், தூதரக அழுத்தம் என ஓடிக்கொண்டிருந்த பிரச்சினை இன்று உயிரிழப்பு வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இனி, இதன் பரிணாமங்கள் வேறு ஒரு களத்தை எட்டிநிற்கும். இந்த துப்பாக்கிச் சூடு தற்செயலானது என்று ஒதுக்கிவிட முடியாது.

மத்திய அரசு இதில் வல்லரசாகச் செயல்பட்டாக வேண்டும். 2013 மே மாதம் தைவான் நாட்டு மீனவர் ஒருவர், மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, கடல் எல்லையோரம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பக்கத்து நாடான பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடற்படை, அந்த மீனவர் எல்லை தாண்டிவிட்டதாக அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டது. உடனே, தைவான் அரசு 11 விதமான பொருளாதாரத் தடையை பிலிப்பைன்ஸ் மீது விதித்தது. அந்தக் கடல் பகுதியில் தைவான் போர்ப் பயிற்சியைத் துவங்கியது.

விழித்துக்கொண்ட பிலிப்பைன்ஸ் தூதர், சுடப்பட்ட மீனவரின் வீடு தேடிச் சென்று நிவாரணம் வழங்கியதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. அதன் பிறகு, ஒருவழியாக தைவான் அரசு தடைகளை விலக்கியது. அதேபோல, இந்தியாவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இது உலக அரங்கில் நமக்கு ஒரு தலைகுனிவையே ஏற்படுத்தும்.

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x