Published : 29 Jun 2016 10:34 AM
Last Updated : 29 Jun 2016 10:34 AM

வங்கிகளின் தலையாய பிரச்சினை

பொதுத்துறை வங்கிகள் ஏற்றம் பெறுவதற்கு அரசுக்குப் பல நல்ல அறிவுரைகள் கூறுகிறது ‘வங்கிகளுக்கு உயிரூட்டுவது எப்போது?’ கட்டுரை. ரிசர்வ் வங்கி அமைத்த பி.ஜே.நாயக் அறிக்கையின் பல ஷரத்துகள் பொதுத்துறை வங்கிகளைத் தனியார் வசம் தள்ளுவதற்கே எத்தனித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் தலையாய பிரச்சினை வாராக் கடன்தான்.

மேலும், வங்கிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து கடன் வழங்க மறு முதலீடும் போதிய அளவில் வழங்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு சொல்லாமல், வங்கிகளைத் தேவையற்ற நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்யும்படி நாயக் குழு பரிந்துரைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கி, மத்தியத் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையங்களின் எந்த விதத் தலையீடும் இருக்கக் கூடாது என்ற பரிந்துரை மிகவும் அபாயகரமானது.

ஊழியர் சங்கங்களின் கோரிக்கைப்படி, வங்கிகளில் கடன்பெற்று ஏற்கத்தக்க காரணங்களின்றி திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கித் துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

- ஜா.அனந்த பத்மநாபன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், திருச்சி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x