Published : 13 Jun 2019 08:38 AM
Last Updated : 13 Jun 2019 08:38 AM

புராணமும் சமகாலமும்

பாவண்ணன்

1980-களின் நடுப்பகுதியில் கர்நாடகத்தின் ஷிமோகாவில் வேலை பார்த்தேன். எங்கள் கோட்ட அலுவலகம் ஹூப்ளியில் இருந்தது. அந்த நகரங்களில் தினமும் நாடகங்கள் நிகழ்த்தப்படும் அரங்குகள் இருந்தன. இரவு ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிந்துவிடும். உள்ளூர் குழுக்களும் வெளியூர் குழுக்களும் மாறிமாறி நாடகங்களை அரங்கேற்றும். கர்நாடகம் முழுதும் ஆண்டுதோறும் வலம்வரும் ‘நீநாசம் குழு’வின் நாடகங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும்.

ஒருமுறை தார்வாட் நகரில் நான் ‘ஹயவதனன்’ என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அந்த நாடகத்தை எழுதியவர் கிரீஷ் கார்னாட். ஒரு பெண்ணின் காதல் துயரத்துக்கும் அவள் காதலைப் பற்றியோ விருப்பத்தைப் பற்றியோ சிறிதளவுகூடப் பொருட்டாகக் கருதாமல் அவளை அடைவதை மட்டுமே இலக்காகவும் சவாலாகவும் நினைக்கும் இரு ஆண்களின் செயல்பாடுகளுக்கும் இடையில் நிகழும் மோதல்களையும் அழிவுகளையும் அந்த நாடகம் காட்சிப்படுத்தியிருந்தது. கூர்மையான உரையாடல்கள். வேகமாக நகரும் காட்சிகள். பல நாட்கள் அந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டபடியே இருந்தேன். தார்வாட்டில் இருந்த மனோகர் பதிப்பகம் அந்த நாடகப் பிரதியை வெளியிட்டிருந்தது. அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ‘யயாதி’, ‘துக்ளக்’ நாடகங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு நாடகத்தையும் பார்த்து முடிக்கும்போது கிரீஷ் மீதான மதிப்பு மேலும் பெருகியது.

கிரீஷை எப்படியும் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தைத் தூண்டியது ‘தலெதண்ட’ நாடகம். கர்நாடக வரலாற்றின் போக்கையும் சிந்தனைப் போக்கையும் அசைத்த ஒரு முக்கியமான ஆளுமை பசவண்ணர். பக்தியின் வழியாக சமூக மாற்றத்தையும் சாதி இழிவுகளைக் களையும் முயற்சிகளையும் மேற்கொண்டவர். நாட்டின் அரசியல் சூழல் அவருக்குச் சாதகமாக இல்லாத நிலையில் அவர் அடையும் வேதனையையும் தோல்வியையும் களமாக அமைத்து கிரீஷ் அந்த நாடகத்தை எழுதியிருந்தார். அந்த நாடகம் எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. பல முறை அந்த நாடகத்தைப் பார்த்தேன். என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நாடகத்தைப் பற்றி மணிக்கணக்கில் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் வழக்கம்போல சரஸ்வதி ராம்னாத்திடம் அதைச் சொன்னபோது அந்த நாடகத்தை மொழிபெயர்க்கும்படி சொன்னார். அந்தத் தூண்டுதல் என் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். அந்த வாரத்திலேயே நானும் என் நண்பர் ஜி.கே.ராமசாமியும் கிரீஷைச் சந்திக்கச் சென்றோம்.

நாடக உரையாடல்கள் அனைத்தும் தார்வாட் பேச்சுமொழியில் இருப்பதால் மொழிபெயர்ப்பதில் சில சிரமங்கள் இருக்கக்கூடும் என கிரீஷ் நினைத்தார். தார்வாடிலேயே பணிபுரிந்த அனுபவத்தில் தார்வாட் மொழியிலேயே அவரிடம் நான் உரையாடியதைத் தொடர்ந்து அந்த எண்ணத்தை அப்போதே அவர் உதறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் புன்னகை படர்ந்த முகத்துடன் மொழிபெயர்ப்பதற்கு உரிய அனுமதியை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை நான் ‘பலிபீடம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். நண்பர் வெளி ரங்கராஜன் அதை  உடனடியாக ஒரு புத்தகமாகக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து ‘நாகமண்டலம்’, ‘அக்னியும் மழையும்’, ‘யயாதி’, ‘ஹயவதனன்’, ‘துக்ளக்’, ‘சிதைந்த பிம்பம்’, ‘அஞ்சும் மல்லிகை’, ‘திருமண ஆல்பம்’, ‘அனலில் வேகும் நகரம்’ என அவருடைய ஒன்பது நாடகங்களை மொழிபெயர்த்தேன்.

ஒவ்வொரு சந்திப்பிலும் உதடுகளில் தவழும் புன்னகையோடு கையைப் பற்றி இழுத்து என் தோளில் தன் அகலமான கையை வைத்து அழுத்தி கிரீஷ் அன்பைத் தெரிவிக்கும் விதம் மறக்க முடியாத அனுபவம்.  நாடகத்துக்கான களத்தை மூன்று புள்ளிகளாக வகுத்து அவற்றுக்கிடையிலான மோதலாக வடிவமைத்துக்கொள்வது என்பது கிரீஷின் நாடக ஆக்கத்தில் உள்ள சிறப்பம்சமாகும். அது அவருடைய மிகப் பெரிய வலிமை. இந்த வலிமையின் உச்சத்தில் ஏறி அவர் இந்திய அளவில் மிகச் சிறந்த நாடக ஆசிரியராக விளங்கினார்.

ஒருமுறை கிரீஷ் என்னிடம் கேட்டார் “யாராவது இந்த நாடகங்களை மேடையில் நடிக்கிறார்களா? ஏன் இந்த மொழிபெயர்ப்பு முயற்சியை எடுக்கிறீர்கள்?” நான் சொன்னேன், “இன்று இல்லை என்பது உண்மைதான். எதிர்காலத்துக்குத் தேவைப்படலாம் அல்லவா?” அவருடைய மறைவுக்குப் பின் அந்தப் பதில் மேலும் வலுப்பெறுகிறது. புராணங்களையும் நாட்டார் கதைகளையும் சற்றே தாழ்வாகக் கருதி விலக்கிவைக்கும் தமிழ்ச் சூழலில் இன்று இப்பிரதிகளுக்குரிய முக்கியத்துவம் கிட்டவில்லை. ஆனால் எப்போதும் சூழல் ஒரே மாதிரி இருக்குமா என்ன? ஒருநாள் நிலைமை மாறும். அப்போது அனைவருக்கும் கிரீஷின் நாடகங்கள் தேவைப்படும். அப்போது புராணப் பின்னணியில் பொதிந்திருக்கும் சமகாலத் தன்மையைப் பிரித்தறிந்து பார்க்கும் ஆர்வமும் வசப்படும்.

-பாவண்ணன், எழுத்தாளர், கிரீஷ் கார்னாடின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்,

தொடர்புக்கு: paavannan@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x